ஆம்ஸ்ட்ராங் கொலை நடந்தப்ப! போலீஸ் துப்பறிவதற்கு முன்பே அண்ணாமலை சொன்னதை கவனித்தீர்களா? திருமா கேள்வி
சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை நடந்த போது காவல் துறை விசாரணை நடத்துவதற்கு முன்பே பாஜக தலைவர் அண்ணாமலை என்ன சொன்னார் என்பதிலிருந்தே ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு என்ன காரணம் என்பது தெரிகிறது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தமிழக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ஆம் தேதி மர்ம நபர்களால் சென்னை பெரம்பூரில் உள்ள அவருடைய வீட்டருகே அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவருடைய கொலை வழக்கு தொடர்பாக இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று இரவு மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். ஏற்கெனவே கைது செய்யப்பட்ட 11 பேரை போலீஸார் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆம்ஸ்ட்ராங் கொலையின் போது எவ்வளவு பணம் கைமாறியது என்பது குறித்து தனித்தனியே அவர்களிடம் விசாரணை நடத்தப்படுகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதால்தான் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டார் என பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்திருந்தார். இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் இன்று நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வைத்திருந்தார்.
இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களையும் சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் மட்டுமின்றி இதனை திட்டமிட்டவர்கள், இதை நடைமுறைப்படுத்திய கூலிப்படையினர் என அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தியுள்ளோம்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து ஒரு பதற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என சில அரசியல் கட்சிகள் திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றன. அதிலும் பாஜகவுக்கு இந்த செயல் திட்டம் இருப்பதை அறிய முடிகிறது. ஆகவே ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கூட ஒரு அரசியல் செயல்திட்டத்திற்கு வாய்ப்பு இருப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கருதுகிறது.
ஆம்ஸ்ட்ராங் உயிரிழந்த சில நிமிடங்களில் பாஜகவை சேர்ந்த ஒருவர் சிபிஐ விசாரணை வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். காவல் துறை நடவடிக்கையில் இறங்குவதற்கு முன்னதாகவே பகுஜன் சமாஜ் கட்சி கோரிக்கை வைப்பதற்கு முன்பே எடுத்த எடுப்பிலேயே தமிழக அரசு விசாரிக்கக் கூடாது என்றும் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் பாஜக கோரிக்கை விடுத்தது.
ஆருத்ரா நிறுவனத்திற்கும் பாஜகவை சேர்ந்த சிலருக்கும் இடையில் உள்ள உறவு குறித்து விவாதிக்கப்படுகிறது. அந்த மோசடியில் சம்பந்தப்பட்டவர்கள் பாஜகவில் பல்வேறு பொறுப்புகளில் இருந்து வருகிறார்கள்.
ஆம்ஸ்ட்ராங் கொலையில் ஆருத்ரா விவகாரமும் பேசப்படுகிறது. பாஜக இதில் வலிந்து சிபிஐ விசாரணை கேட்கிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை குலைக்க சதி நடக்கிறது. முன்னாள் முதல்வர் கருணாநிதி மீது கருத்தியல் விமர்சனங்களை வைக்கலாம், அரசியல் விமர்சனங்களை வைக்கலாம். ஆனால் அவரை கொச்சைப்படுத்துவதன் மூலம் மேலும் பதற்றத்தை உருவாக்க வேண்டும் என்பதே அவர்களின் நோக்கமாக இருக்கிறது.
எனவே சட்டம் ஒழுங்கை காப்பாற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். நீட் தேர்வு குறித்தும் திருமண சட்டங்கள் சீராய்வு குறித்து மனு அளித்திருக்கிறோம். நீட் தேர்வு விவகாரத்தில் நாடு முழுவதும் விவாதம் நடந்துள்ளது. இது நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. நீட் தேர்வில் ஊழல் முறைகேடு நடந்துள்ளது.
அதை மூடி மறைக்க பாஜக முயற்சிக்கிறது. நீட் எதிர்ப்பு நடவடிக்கையாக அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்டவும் முதல்வரிடம் வலியுறுத்தினேன் என திருமாவளவன் தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications