Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வடசென்னை கலரே மாறப் போகுது.. பட்ஜெட்டில் ரூ.1000 கோடி ஒதுக்கீடு.. ஆரவாரமாக வரவேற்ற திருமாவளவன்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், இதில் வடசென்னையின் வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கியிருப்பதை விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி வரவேற்றிருக்கிறார்.

நடப்பாண்டின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 12ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இந்நிலையில் இன்று பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். எதிர் வரும் லோக்சபா தேர்தல், கடந்த ஆண்டு ஏற்பட்ட புயல், வெள்ள பாதிப்பு, மத்திய அரசின் பேரிடர் நிவாரண நிதி சர்ச்சை, மாநிலத்திற்கான வரி பகிர்வு போன்ற சலசலப்புகளுக்கு நடுவே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதால் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது.

Thirumavalavan MP welcomed the allocation of funds in the TN budget for the development of North Chennai

அதேபோல பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் பெரும் கவனம் ஈர்த்தது. குறிப்பாக, வடசென்னையின் வளர்ச்சிக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கியிருப்பது பல்வேறு அரசியல் கட்சிகள் மத்தியில் வரவேற்பை பெற்றிருக்கிறது.

வடசென்னை வளச்சி திட்டம்: சட்டப்பேரவையில் உரையாற்றிய தங்கம் தென்னரசு, "வடசென்னை வளர்ச்சி திட்டத்திற்காக ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இதன்மூலம் வடசென்னையில் புதிய குடியிருப்புகள், திறன்மிகு பள்ளிகள் அமைத்து ஏரிகள் சீரமைக்கப்படும். மேலும் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் சென்னை தீவுத்திடல் மேம்பாட்டுத் திட்டம் அறிமுகம் செய்யப்படும். சென்னை பெசன்ட் நகர், கோவளம் உள்ளிட்ட கடற்கரைகள் மேம்படுத்தப்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

சிங்காரச் சென்னை- 2 திட்டத்துக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். சென்னையில் சாலைகளை விரிவுபடுத்த ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். சென்னை கடற்கரை பகுதிகளை மேம்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். வடசென்னை பகுதியில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். அடையாறு நதி சீரமைப்புக்கு ரூ.1500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். சென்னை கடற்கரை பகுதிகளை மேம்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். சென்னை மாநகரில் பொதுக்கழிப்பிடங்களை மேம்படுத்த ரூ.430 கோடியில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும்" என்று கூறியிருந்தார்.

திருமாவளவன் பாராட்டு: இதில் வடசென்னை வளர்ச்சி திட்டத்திற்காக ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு ஒதுக்கப்படும் என்றிருக்கும் அறிவிப்புக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், "வறுமையை ஒழித்து வளர்ச்சிக்கு வழிவகுக்கும் தொலைநோக்குத் திட்டங்களைக் கொண்டுள்ளது! தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வரவேற்றுப் பாராட்டுகிறது!

இன்று சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை வறுமையை ஒழிப்பதற்கும் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் வழி வகுக்கின்ற தொலைநோக்குத் திட்டமாக உள்ளது. இதனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பாராட்டி வரவேற்கிறோம்.

தமிழ்நாடு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளின் காரணமாக வறுமை ஒழிக்கப்படும் மாநிலமாகத் தமிழ்நாடு மாறி வருகிறது. தற்போது வறுமையில் இருக்கும் ஐந்து லட்சம் குடும்பங்களை வறுமையிலிருந்து மீட்பதற்கு ஒருங்கிணைந்த திட்டம் வகுக்கப்படுவதாக இந்த நிதி நிலை அறிக்கையில் கூறப்பட்டிருப்பது ஏழை மக்களைப் பாதுகாப்பதில் மிகுந்த அக்கறையுள்ள அரசாக இது திகழ்கிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது.

கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது விடுதலை சிறுத்தைகள் கட்சி முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில் தமிழ்நாட்டில் இருக்கும் குடிசை வீடுகள் கணக்கெடுக்கப்பட்டு அனைத்து குடிசை வீடுகளையும் கான்கிரீட் வீடுகளாக மாற்றுவதற்கான மாபெரும் திட்டம் உருவாக்கப்பட்டது.

2010 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட அந்தத் திட்டத்தில் 2 ஆண்டுகளில் 5 லட்சம் வீடுகள் கட்டப்பட்டன. 2011 இல் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் காரணமாக அந்தத் திட்டத்தை அதிமுக அரசு நிறுத்திவிட்டது. தற்போது கலைஞர் அவர்களின் வழியில் ஆட்சி நடத்தும் முதல்வர் அவர்கள், குடிசை இல்லா தமிழ்நாடு' திட்டத்தை நடைமுறைப்படுத்தப் போவதாக அறிவித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

அடுத்த ஆறு ஆண்டுகளில் 8 இலட்சம் வீடுகள் கட்டப்படுமென்றும், நடப்பு ஆண்டில் ஒரு லட்சம் வீடுகள் கட்டப்படுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறதென்றும் இந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனைப் பாராட்டி வரவேற்கின்றோம்.

அரசுக்கு கோரிக்கை: வீடு ஒன்றுக்கு 3.5 லட்சம் ரூபாய் ஒதுக்கப்படுவதாக இதில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்தத் தொகையை ரூ.5 இலட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் எனத் தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறோம். பெண்களின் உயர்கல்வியை ஊக்குவிப்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் அறிமுகப்படுத்திய "புதுமைப்பெண் திட்டம்" பெருமளவில் பயனளித்துள்ளது. அதனை ஆண்களுக்கும் விரிவு படுத்துவதற்காக 'தமிழ்ப் புதல்வன் திட்டம்' என்கிற புதிய திட்டம் இந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனையும் மனமுவந்து வரவேற்கிறோம்.

புதுமைப்பெண் திட்டம், முதலமைச்சரின் காலை சிற்றுண்டித்திட்டம் இரண்டையும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் விரிவுபடுத்துவதாக அறிவித்திருப்பது எளிய மக்களின் கோரிக்கையை இந்த அரசு எந்த அளவுக்கு மதிக்கிறது என்பதற்குச் சான்றாகும்.

கோவையில் "கலைஞர் நூற்றாண்டு நூலகம்" அமைக்கப்படும் என்ற அறிவிப்பையும் மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம். அறிவு சார் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் தூத்துக்குடியில் "விண்வெளி தொழில் மற்றும் உந்து சக்தி பூங்கா அமைக்கப்படும் என்றும்; தமிழ்நாட்டில் முதன்முறையாக "உலகப் புத்தொழில் மாநாடு நடத்தப்படும் என்றும் முதலமைச்சர் தலைமையில் "தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு இயக்கம்" உருவாக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருப்பது தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்துவதில் இந்தியாவுக்கே தமிழ்நாடு வழிகாட்டியாக விளங்குகிறது என்பதற்குச் சான்றுகளாக உள்ளன.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் 50 ஆயிரம் இளைஞர்களுக்கு அரசுப் பணி, ஜூன் மாதத்திற்குள் பத்தாயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும் என்ற அறிவிப்பு வேலைவாய்ப்பைத் தேடும் இளைஞர்களுக்கு பெரும் நம்பிக்கையை அளிப்பதாகும்.

சென்னையின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கென்று பல திட்டங்கள் இந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தது போல் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் வடசென்னை வளர்ச்சித் திட்டம் அறிவிக்கப்பட்டிருப்பதை மகிழ்வோடு வரவேற்கிறோம்.

வறுமையை ஒழிக்கும் பட்ஜெட்: பழங்குடியின மக்களின் வாழ்விடங்களில் சாலை வசதிகள், குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 'தொல்குடி' என்ற புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த நான்கு ஆண்டுகளில் இது செயல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையும் பாராட்டி வரவேற்கிறோம்.

ஒட்டுமொத்தத்தில் இந்த நிதிநிலை அறிக்கை வறுமையை ஒழிப்பதற்கும். தமிழ்நாட்டின் வளர்ச்சியை விரைவுப்படுத்துவதற்குமான தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய செயல் திட்டமாக விளங்குகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களையும் மற்றும் நிதித் துறை அமைச்சர் அவர்களையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பாராட்டுகிறோம்" என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+