பிரேமலதா மீது அதிருப்தியா? கடலூரில் கூட்டத்தில் எழுந்து நிற்காதது ஏன்? திருமாவளவன் கொடுத்த விளக்கம்
சென்னை: கடலூரில் நடைபெற்ற கூட்டத்தில் திருமாவளவனை அவமதிக்கும் வகையில் பிரேமலதா விஜயகாந்த் நடந்து கொண்டதாக விசிகவினர் மத்தியில் கொந்தளிப்பு நிலவி வருகிறது. இந்த நிலையில், கூட்டத்தில் நடைபெற்ற நிகழ்வு குறித்து விசிக தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார். திருமாவளவன் இது தொடர்பாக பேட்டியில் அளித்த விவரங்களை இங்கே பார்க்கலாம்.
கடலூரில் கடந்த வாரம் நடைபெற்ற திமுக கூட்டணி பொதுக்கூட்டத்தில் அந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை திருமாவளவன் அறிமுகம் செய்து வைத்தார். கடலூரில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் ஒவ்வொரு தொகுதியாக வேட்பாளர்களை திருமாவளவன் அறிமுகம் செய்து வைத்தார்.

எழுந்து நிற்காத பிரேமலதா
வேட்பாளர்களின் பெயரை சொல்லி அறிமுகம் செய்துவைத்த போது வேட்பாளர்கள் எழுந்து நின்று மக்களுக்கு வணக்கம் வைத்தனர். விருதாசலம் தொகுதியில், பிரேமலதா போட்டியிடுகிறார் என திருமாவளவன் அறிமுகம் செய்து வைத்து பேசிய போது, பிரேமலதா இருக்கையில் இருந்து எழுந்து நிற்காமல் சிரித்தபடி அமர்ந்திருந்தார்.
அதே நேரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், பிரேமலதா விஜயகாந்த் பெயரை அறிவித்த போது எழுந்து நின்று வணக்கம் செலுத்தினார். பிரேமலதாவின் இந்த செயல்பாடு விசிகவினர் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. விருதாச்சலம் தொகுதியில் பிரசாரத்திற்கு சென்ற பிரேமலதாவுக்கு விசிகவினர் பல்வேறு இடங்களில் தங்கள் எதிர்ப்பை காட்டினர். இந்த நிலையில், விசிக தலைவர் திருமாவளவன் இவ்விவகாரம் தொடர்பாக விளக்கமாக பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:-
அதை மட்டும் சொன்னால் சரியாக இருக்காது
எனக்கு எந்த அதிருப்தியும் இல்லை.. இது வெறும் மீடியா ஹைப்தான்.. எங்க கட்சி வேட்பாளருக்கு மட்டும் சொல்லக்கூடாது என்பதற்காக எல்லா கட்சி வேட்பாளரையும் நான் சொன்னேன் அவ்வளவுதான். முறைப்படி வேட்பாளர்களை அறிவிப்பு செய்ய கூட்டணியின் தலைவர் முதல்வர் ஸ்டாலின் தான் மேடைக்கு வந்தார். அவர்தான் அங்கு அறிவிக்க வேண்டும்.. அவர்தான் அறிவித்தார்.
அப்போதுதான் வேட்பாளர்கள் எழுந்து நிற்பார்கள். நான் என்னுடைய உரையின் போது எங்கள் கட்சியின் வேட்பாளர்கள் கடலூரில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார்கள் என்று சொன்னேன். அதை மட்டும் சொன்னால் சரியாக இருக்காது என்று எல்லோரையும் சொன்னேன். எனவே இதனை திரித்து இந்தக் கூட்டணிக்குள் குழப்பம் ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். அது ஒருபோதும் நடக்காது" இவ்வாறு அவர் கூறினார்.
திருமாவளவன் வருத்தம் தெரிவித்தார்
முன்னதாக பிரேமலதா விஜயகாந்த் அளித்த விளக்கத்தில், நானும், திருமாவளவனும் மக்கள் நலக் கூட்டணி காலத்திலிருந்தே குடும்ப நண்பர்களாகப் பழகி வருகிறோம். விஜயகாந்த் தான் திருமாவளவனின் 'வெளிச்சம்' தொலைக்காட்சியைத் தொடங்கி வைத்தார்.
திருமாவளவனே இந்த விவகாரம் குறித்து போனில் என்னிடம் பேசி வருத்தம் தெரிவித்தார். தேமுதிக மற்றும் விசிக இடையே இருக்கும் ஆழமான நட்பைப் புரிந்துகொள்ளாமல் வீண் சர்ச்சைகளை உருவாக்கி உப்புசப்பு இல்லாத விஷயத்தை பெரிதாக்குகிறார்கள்" என்று கூறி சர்ச்சைக்கு முற்று புள்ளி வைத்தார்.












Click it and Unblock the Notifications