2 காரணங்களுக்காகவே தவெக ஆட்சியமைக்க ஆதரவு.. பிரஸ் மீட்டில் ஓப்பனாக சொன்ன திருமாவளவன்!
சென்னை: "இன்றைய சூழ்நிலையில் விசிகவால் தவெக ஆட்சியமைக்க முடியாமல் போனது என்ற பெயர் வந்துவிடக் கூடாது என்பதற்காக அக்கட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்துள்ளோம்" என விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய திருமாவளவன், "8 தொகுதிகளில் போட்டியிட்டு 2 இடங்களில் வெற்றி பெற்றோம். இடதுசாரி கட்சிகள் தலா 2 இடங்களில் வெற்றி பெற்றன. மக்கள் நலக் கூட்டணி உருவான காலத்தில் இருந்து கொள்கை அடிப்படையில் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறோம்.

இந்த அரசியல் நெருக்கடி உருவாகியிருக்கிற சூழலில் இடதுசாரிகளும், விசிகவும், தொலைநோக்குப் பார்வையோடு, எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இணைந்து முடிவெடுப்போம் என தீர்மானித்தோம். அதன் அடிப்படையில் அறிவித்திருந்தோம்.
இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய இரு கட்சிகளும், மாநிலக் குழுவில் எடுத்த முடிவையொட்டி, அந்த முடிவை விசிக உயர்நிலைக் குழுவில் கலந்தாய்வு செய்து முடிவை அறிவிப்பது என திட்டமிட்டிருந்தோம். அதன்படி நேற்று மாலை ஜூம் வாயிலாக உயர்நிலைக்குழு கூட்டம் நடைபெற்றது.
அதன் நிறைவாக கட்சியின் தலைவருக்கு இறுதி முடிவை எடுக்கிற அதிகாரத்தை வழங்குகிறோம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் இன்று மீண்டும் கலந்தாய்வு செய்து ஒரு முடிவை எடுத்து, தவெக ஆட்சி அமைக்க ஒரு ஆதரவு கடிதம் அளித்துள்ளோம்.
தமிழ்நாட்டில் இந்த அரசியல் நெருக்கடியைப் பயன்படுத்தி குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக்கூடாது என்றும், அதைத் தடுக்கும் வகையிலும், 108 இடங்களில் வெற்றி பெற்றும் ஆட்சியமைக்க முடியாமல் சிக்கலில் தவெக திணறிக்கொண்டிருக்கும் நிலையில், அவர்கள் ஆட்சி அமைப்பதற்கு விசிக ஆதரவளிக்க வேண்டும் என்ற அடிப்படையிலும் இந்த ஆதரவு நிலைப்பாட்டை நாங்கள் எடுத்துள்ளோம்.
அதாவது இரண்டே காரணங்கள். தவெக ஆட்சி அமைப்பதற்கு விசிகவின் நிலைப்பாடு தடையாக இருந்துவிடக்கூடாது என்றும் குடியரசுத் தலைவர் ஆட்சி முறை நடைமுறைக்கு வந்துவிடக்கூடாது என்றும் தான் இந்த முடிவை எடுத்துள்ளோம். ஆட்சி அமைப்பதற்கு மட்டும் வெளியில் இருந்து எங்கள் ஆதரவு கொடுத்திருக்கிறோம்." எனத் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக 108 இடங்களைக் கைப்பற்றினாலும் கூட, பெரும்பான்மை இல்லாததால் இதுவரை ஆட்சியமைக்க இயலாமல் தவித்த நிலையில், மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் தவெகவுக்கு விசிக இன்று ஆதரவு தெரிவித்துள்ளது. இதன்மூலம் தவெக ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையை எட்டியது. தவெகவை தொடர்ந்து ஐயூஎம்எல் கட்சியும் நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியதால் தவெக வசம் தற்போது 120 எம்எல்ஏக்கள் பலம் உள்ளது.













Click it and Unblock the Notifications