விஜயுடன் ஆதவ் அர்ஜுனா இணைந்தால் மகிழ்ச்சிதான்.. வாழ்த்துகள்! - திருமாவளவன்
சென்னை: விசிக முன்னாள் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா விஜய் கட்சியில் இணைவதாக பேச்சுக்கள் அடிப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இது குறித்து திருமாவளவன் கூறியுள்ள கருத்து கவனம் பெற்றிருக்கிறது.
விசிகவில் இருந்து ஆதவ் அர்ஜுனா வீசிய வெடிகள், ஆளும் கட்சி தரப்புக்கு பகீர் கிளப்பியிருந்தது. குறிப்பாக, தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைத்திருந்த விசிகவுக்கு, ஆட்சி அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என்று கோரியிருந்தார். மிக குறிப்பாக, சினிமாவிலிருந்து வந்தவர்கள் எல்லாம் துணை முதல்வராகும்போது, திருமாவளவன் துணை முதல்வர் ஆகக்கூடாதா? என்று உதயநிதி ஸ்டாலினை சீண்டியிருந்தார். ஆதவ் அர்ஜுனாவின் இந்த கருத்தை, உடன் பிறப்புகள் அவ்வளவாக ரசிக்கவில்லை.

இதனையடுத்து தலித் முதலவர் குறித்து பேசியதும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. விஷயம் இப்படி போய்க்கொண்டிருக்கையில், ஆதவ் அர்ஜுனா எழுத்திய புத்தகத்தை வெளியிட விஜய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. விஜய் நடிகராக இருந்த வரை எல்லாம் ஓகேதான். ஆனால், அவர் இப்போது ஒரு அரசியல் கட்சியின் தலைவர். அக்கட்சி திமுகவை எதிர்த்து அரசியல் செய்து வருகிறது. இப்படியிருக்கையில் விஜய்யுடன் திருமாவளவன் எப்படி ஒரே மேடையை பகிர்ந்துக்கொள்வார் என்று கேள்வி எழுந்தது.
இந்த சலசலப்புகளை தொடர்ந்து, புத்தக வெளியிட்டு விழாவில் திருமாவளவன் பங்கேற்காமல் தவிர்த்தார். ஆனால் விஷயம் அதைவிட சீரியஸாக போனது. அதாவது, இந்த விழாவில் பேசிய ஆதவ் அர்ஜுனா தமிழக அரசையும், திமுகவையும் கடுமையாக விமர்சித்தார். கூட்டணி கட்சியின் தலைவர் இப்படி விமர்சிப்பது திருமாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது.
இதனையடுத்து அர்ஜுனாவை கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்வதாக திருமாவளவன் அறிவித்தார். சலசலப்புகள் இத்துடன் ஒய்ந்துவிடும் என்று நினைத்துக்கொண்டிருக்கையில்தான், விஜய் உடன் அர்ஜுனா நெருக்கம் காட்ட தொடங்கினார்.
விஜய்யை அர்ஜுனா சந்தித்திருப்பதாகவும், அவருடைய 'வாய்ஸ் ஆஃப் காமன்ஸ்' நிறுவனத்துடன் தமிழக வெற்றிக் கழகம் கட்சி ஒப்பந்தம் போட்டிருப்பதாகவும், அதேபோல அர்ஜுனாவுக்கு முக்கிய பொறுப்பு கட்சியில் வழங்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. இது குறித்து புதிய தலைமுறை செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்த திருமாவளவன்,
"அர்ஜுனா, விஜய்யை சந்தித்தார் என்பது உண்மை. அதை வைத்துக்கொண்டு தமிழக வெற்றிக் கழகத்தில் அர்ஜுனா இணையப் போகிறார், முக்கிய பொறுப்பை வகிக்க போகிறார் என்று ஊடகங்கள் யூகங்களாக சில செய்திகளை பதிவு செய்து வருகின்றன. எப்படி இருந்தாலும் அவர் விஜய்யோடு இணைந்து இயங்கப் போகிறார் என்பது மகிழ்ச்சி வாழ்த்துக்கள்.
கட்சியில் துணை பொதுச் செயலாளர்களாக 10-க்கும் மேற்பட்டவர்களை நாங்கள் நியமனம் செய்திருக்கிறோம். பல்வேறு மாவட்டங்களை சார்ந்த தோழர்களுக்கு, நிலப்பரப்பு அடிப்படையிலும், கருத்து அடிப்படையிலும், நிர்வாக அடிப்படையிலும் பணிகளை பகிர்ந்து கொடுத்து வருகிறோம். அப்படி 12 துணைப் பொதுச் செயலாளர்கள், பத்துக்கும் மேற்பட்ட அமைப்புச் செயலாளர்கள் இருக்கின்றனர். அந்த வரிசையில் ஆதவ் அர்ஜுனாவும் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
கட்சியின் மறு கட்டமைப்பு பணிகளை கவனிக்கவும், தேர்தல் வியூகங்களை வகுக்கவும் அவருக்கான பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டது. அவர் மட்டுமே துணை பொதுச் செயலாளராக அல்லது ஓரிருவர் மட்டுமே செயலாளராக இல்லை.
பல பொறுப்பாளர்களில் அவரும் ஒருவர். அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி இணைந்த காலத்தில் மிகுந்த உறுதிபாட்டோடு செயல்பட்டார். எல்லோரோடும் இணக்கமாக இருந்து, தலைமையின் மீதும் கட்சியின் மீதும் விசுவாசத்துடன் செயல்பட்டார் என்பதை யாருக்கு மாற்று கருத்து இல்லை. ஆனால் கூட்டணி தொடர்பான சில மாறுபட்ட கருத்துக்களை சொன்னது, பேசியது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் எதிர்காலத்திற்கு ஒரு நெருக்கடியாக மாறியது.
அந்த அடிப்படையில் ஒழுங்கு நடவடிக்கையை எடுக்க நேர்ந்தது. நடவடிக்கை எடுக்கப்பட்டால், ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளானவர்கள் அதற்குரிய விளக்கத்தை தந்து, அந்த விளக்கத்திற்கு பின்னர் கட்சியில் இணைய முயற்சிகளை மேற்கொள்வார்கள். ஆனால் ஆதவ் அர்ஜுனா உடனடியாக கட்சியில் இருந்து வெளியேற முடிவெடுத்தார் என்பது ஒரு எதிர்பாராத நிகழ்வுதான். நாங்கள் அப்படி எதிர்பார்க்கவில்லை" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications