ஜெயலலிதாவின் உண்மையான வாரிசு.. மு.க.ஸ்டாலின்தான்.. திருமாவளவன் நெகிழ்ச்சி!
சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஜெயலலிதாவின் வாரிசு என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி 6 இடங்களில் போட்டியிடுகிறது. தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையின் போது, 6 இடங்களுக்கு ஒப்புக் கொள்ளக் கூடாது, கூட்டணியை விட்டு வெளியேற வேண்டும் என்று விசிகவினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

அத்தனை எதிர்ப்புகளையும் மீறி, திமுக கூட்டணியை தொடர்ந்தது மட்டுமில்லாமல், 6 தொகுதிகளுக்கும் உடன்பட்டு கையெழுத்திட்டது விசிக. 'பாஜக தமிழகத்தில் காலூன்ற விடக் கூடாது என்ற பிரதான நோக்கத்தின் அடிப்படையில் திமுகவுடன் கூட்டணியை தொடர்வதாக' திருமாவளவன் தெரிவித்திருந்தார்.
பிறகு சலசலப்புகள் ஓய்ந்து, விசிக வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில், 'தி ஹிந்து தமிழ்' ஊடகத்துக்கு திருமாவளவன் பிரத்யேகமாக பேட்டி அளித்துள்ளார்.
அதில், பாஜகவுக்கு எதிரான யுத்தத்தில் திமுகவையும் ஸ்டாலினையும் எந்த அளவுக்கு நம்புகிறீர்கள்? என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள திருமாவளவன், ஸ்டாலினை முழுமையாக நம்புவதாக கூறியுள்ளார்.
குறிப்பாக, ஸ்டாலினை 'கருணாநிதியின் பிள்ளை, ஜெயலலிதாவின் வாரிசு' என்று, தான் மதிப்பிடுவதாக தெரிவித்துள்ளார். அதாவது, உறுதியான சனாதன எதிர்ப்பு என்று கருத்தியல் சார்ந்து ஒரு முடிவை எடுக்கும்போது கருணாநிதியின் பிள்ளை என்பதை அவர் நிரூபிக்கிறார்; திமுக கூட்டணியை விட்டு விசிகவை அகற்ற எத்தனையோ சக்திகள் முயன்றன; குறிப்பாக, 'மநு' விவகாரத்தை இதற்குச் சரியான வாய்ப்பாக அவை பயன்படுத்தின; ஸ்டாலின் பக்கபலமாக நின்றார்.
பகைவர்களை அடையாளம் கண்ட பின் அவர்களுக்கு எதிராக எதற்கும் அஞ்சாமல் முன்னோக்கிச் செல்வதிலும், கூடவே அது நோக்கி இயக்கத்தையும் கட்டுப்பாடாக நிர்வகித்துச் செல்வதிலும் ஜெயலலிதாவை அவர் பிரதிபலிக்கிறார்' என்று திருமா தெரிவித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications