அமித்ஷாவும் மோடியும் பிராமணர்கள் கிடையாது.. "ஆனால்".. மதுரையில் விளாசி தள்ளிய திருமாவளவன்
அமித்ஷா, மோடி குறித்து விசிக தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார்
சென்னை: இந்தியாவை வல்லரசு ஆக்குவதற்கு பதிலாக, மசூதியை இடிப்பார்கள். பைபிளை எரிப்பார்கள், சமூக நீதி என்ற கோட்பாடு தான் அவர்களுக்கு எதிரி என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் காட்டமாக தெரிவித்துள்ளார்.
மதுரை பழங்காநத்தம் பகுதியில் வர்க்க, வருண, ஆதிக்க ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசினர்.
பிறகு, மதுரையில், பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு மாநாடு நடைபெற்றது.. தொடர்ந்து செஞ்சட்டை பேரணியும் நடந்தது.. மாநாட்டில் விசிக தலைவர் திருமாவளவன் பேசியதாவது:

மதுரை
"நம் நாட்டை பொறுத்தவரை, எஸ்சி, எஸ்டி மக்கள் இந்தியா முழுவதும் 30 கோடி பேர் உள்ளனர். வர்க்க ஆதிக்க எதிர்ப்பு என்றால் இந்துத்துவா எதிர்ப்பு... பிறப்பின் அடிப்படையில் உயர்வு, தாழ்வு கிடையாது.. ஆரிய இனத்தில் உள்ள டி.என்.ஏ. வேறு, திராவிடர் டி.என்.ஏ வேறு.. ஆரிய கருத்துக்கு எதிரானவர்கள்.. அனைவரும் திராவிடர்களே. அதனால், அம்பேத்காரும் திராவிடரே.

சைவ, வைணவம்
சைவ, வைணவ மதங்கள் பிராமண மதங்கள் இல்லை. வேதங்களே, பிரமாணர்களின் மதம்... நம் நாட்டில் வாழ்ந்தவர்கள் அனைவருமே திராவிடர்கள்... அவர்கள் அந்த காலத்தில் நாகர்கள் என்று அழைக்கப்பட்டனர். அவர்கள் தமிழர்கள் என்று டாக்டர் அம்பேத்கர் சொல்லி இருக்கிறார்.. அம்பேத்கரியம், பெரியாரியம், மார்க்சியம் ஆகியவை, பார்பனியத்தையும், முதலாளித்துவத்தையும் எதிர்க்க கற்று கொடுத்தவை. ஆதிக்கத்தை அடி மரத்தோடு வெட்டி விட வேண்டும், மேல் கட்டுமானத்தை வெட்டுவது முக்கியமல்ல.

அரசியலமைப்பு
இந்திய அரசியலமைப்பு எல்லா நேரங்களிலும் வேலை செய்வதில்லை.. தேர்தலின் போது மட்டுமே வேலை செய்கிறது. அதற்கு பிறகு இந்தியாவில் மனு தர்மம் தான் வேலை செய்கிறது. வஞ்சகத்தால் வளைப்பதும், வன்முறைகள் கட்டவிழ்த்து விடுவதும்தான் ஆரியத்தின் வேலை. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஆகியோர் பிராமணர்கள் கிடையாது.. ஆனால் பிராமணர்களுக்காக வேலை பார்ப்பார்கள். சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக அதிகமானோர் பிராமணர்கள் தான் உள்ளனர்... இதை மாற்ற முடியாது. ஆர்எஸ்எஸ் அமைப்பில் சித்பவன் என்ற அய்யர்களே தலைவராக முடியும்..

திராவிடர்கள்
ஆர்எஸ்எஸ் சமஸ்கிருதத்தை எதிர்ப்பவர்கள் தான் திராவிடர்கள், தெலுங்கர்களை எதிர்ப்பது இல்லை, ஆனால், பெரியார் ஆரியர்களை எதிர்த்தார்.. அதனால், பெரியாரை ஆரியர்களை எதிர்க்கின்றனர். இந்தியாவை வல்லரசு ஆக்குவதற்கு பதிலாக, மசூதியை இடிப்பார்கள். பைபிளை எரிப்பார்கள். இந்திய அளவில் பட்டியலின மக்களை, ஒற்றுமையாக இருப்பதை பாஜக அமைப்பு உடைத்து விட்டது. சமூக நீதி என்ற கோட்பாடு தான் அவர்களை தடுக்கிறது. ஆயுதம் இல்லாத புரட்சியை அரசியலமைப்பு மூலம் செய்தவர் டாக்டர் அம்பேத்கர். ஆரிய கருத்துக்கு எதிரானவர்கள் அனைவரும் திராவிடர்களே, எனவே அம்பேத்கரும் திராவிடரே" என்றார் திருமாவளவன்.

திராவிடம்
முன்னதாக, முனைவர் கோ.கேசவனின் நூல் தொகுப்புகள் வெளியீட்டு விழா சென்னை திருவான்மியூரில் நடைபெற்றது.. இந்த விழாவில் திருமாவளவன் பேசும்போது, "திராவிடம் என்ற சொல்லாடலை முதன்முதலாக பயன்படுத்தியவர் பண்டிதர் அயோத்திதாசர். தமிழ் தேசியம் என்ற பெயரில் திராவிடத்திற்கு பேசுகிறோம் என்று சிலர் பார்ப்பனியத்திற்கு ஆதரவாக பேசுகிறார்கள். பார்ப்பனியத்தை மூர்க்கமாக எதிர்த்தவர்கள் அம்பேத்கரும் பெரியாரும்.

பார்ப்பனியர்கள்
பார்ப்பனியர்கள் தங்களை தனிமைப்பட்டுவிடாமல் தற்காத்து கொள்ள கையாளும் யுக்தி தான் இந்துத்துவம் திராவிடத்தை விமர்சனம் செய்கிறார்கள் என்றால் பெரியாரையும் அம்பேத்கரையும் விமர்சனம் செய்வதாக தான் பொருள். பெரியாரையும் அம்பேத்கரையும் எதிர்த்தால் அவர்கள் தெரிந்தோ தெரியாமலோ பார்ப்பனியத்திற்கு துணை நிற்கிறார்கள்" என்றார்.












Click it and Unblock the Notifications