குடியுரிமை சட்டத்துக்கான போராட்டத்தை எந்த நிலையிலும் திரும்ப பெற முடியாது.. திருமா திட்டவட்டம்
சென்னை: குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தை எந்த வகையிலும் திரும்ப பெற முடியாது என சிதம்பரம் எம்பியும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல் திருமாவளவன் தெரிவித்தார்.
அனைவரின் எதிர்ப்பையும் மீறி குடியுரிமை திருத்தச் சட்டம் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு சட்டமானது. இதையடுத்து நாடு முழுவதும் போராட்டம் வலுப்பெற்று வருகிறது.
இதுகுறித்து சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறுகையில் குடியுரிமை திருத்தச் சட்டம் மிகவும் கொடியது. இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என அனைவரும் வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டம் நடைபெறுகிறது.
சி.ஏ.ஏ. போராட்டம்: 130 போராட்டக்காரர்களுக்கு ரூ50 லட்சம் நஷ்ட ஈடு கேட்டு உ.பி. அரசு நோட்டீஸ்
சென்னையில் நாளை எழுத்தாளர்கள், கலைஞர்கள் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறவுள்ளது. இந்த சட்டம் முஸ்லீம்களுக்கு மட்டும் எதிரானது அல்ல. ஒட்டுமொத்த தேசத்துக்கு எதிரானது. எனவே சட்டத்தை திரும்ப பெறும் வரை அனைத்து ஜனநாயக சக்திகளும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவது தேவையான ஒன்றாகும்.
அறவழியில் எங்கு போராட்டம் நடந்தாலும் அதில் விடுதலைச் சிறுத்தைகள் பங்கேற்கும். இந்த போராட்டத்தை திசை திருப்புவதற்காக வேண்டுமென்றே சிலர் தேவையற்ற கருத்துகளை தெரிவிக்கின்றனர். இது போன்ற கருத்துகளால் போராட்டத்தை எந்த வகையில் திசை திருப்ப முடியாது என்றார்.