இன்னொருவர் வருவார்.. அவரும் இப்படித்தான் இருப்பார்.. தமிழகத்திற்கு ஆளுநர் பதவியே தேவையில்லை.. திருமா
சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி போனாலும் அவருக்கு பதில் வரும் வேறொரு ஆளுநரும் இப்படித்தான் இருப்பார். எனவே தமிழகத்திற்கு ஆளுநரே தேவையில்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை தாம்பரம் அடுத்த நெடுங்குன்றம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 10 ஆண்டுகளாக 40 லட்சம் ரூபாய் செலவில் திருநங்கை லோகேஸ்வரி நாயக் என்பவரால் கட்டப்பட்ட ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயத்தின் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு கோவில் கலசங்களுக்கு ஆரத்தி எடுத்த பின்பு புனித நீரூற்றி கும்பாபிஷேகம் செய்து அம்மனை வழிபட்டார்.

கோப்புகள்
இதில் பல மாவட்டங்களில் இருந்து 100 க்கும் மேற்பட்ட திருநங்கைகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திருமாவளவன்,
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் நீட் தேர்வு குறித்த கோப்புகளை ஆளுநர் திருப்பி அனுப்பியது குறித்து கேட்கபட்ட கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

ஆளுநர் அனுப்பிய மசோதா
அவர் கூறுகையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவில் ஏதேனும் திருத்தம் வேண்டும் என்றால் மீண்டும் மாநில அரசுக்கு அனுப்பி வைத்திருக்கலாம். ஆனால் ஆளுநர் திருப்பி அனுப்பாமல் நிராகரித்துள்ளார். இது அதிகார வரம்புக்கு மீறிய செயல். ஆளுனரால் எடுக்கபட்ட இந்த முடிவு தமிழக மக்களின் உணர்வுகளை காயப்படுத்தும் நடவடிக்கை.

பிப்ரவரி 8இல் தமிழக சட்டசபை சிறப்பு கூட்டம்
வரும் 8-ம் தேதி சட்டமன்ற சிறப்பு கூட்டம் நடைபெற உள்ளதாக தமிழக முதலமைச்சர் முடிவு செய்துள்ளார். அந்த கூட்டத்தில் மீண்டும் அதே மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைப்பது என்ற தமிழக அரசின் முடிவிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்றுள்ளது.

ஆளுநர் பதவியே வேண்டாம்
ஆளுநரை திருப்பி பெற வேண்டும் என்று எல்லோரும் கூறினாலும் மீண்டும் ஒன்றிய அரசு சொல்வதை செய்யும் இன்னொருவர் வருவார். அவரும் சுதந்திரமாக செயல்பட வாய்ப்பில்லை. எனவே தமிழகத்திற்கு ஆளுநர் பதவியே தேவையில்லை என்பது தனது கருத்து என்றார்.












Click it and Unblock the Notifications