திமுக கூட்டணியில் குழப்பம்.. ஆதவ் அர்ஜுனாவின் அஜண்டா இதுதான்.. நேரடியாக பதிலடி கொடுத்த திருமாவளவன்!
சென்னை: திமுக கூட்டணியை பிரிக்க வேண்டும் என்பதுதான் ஆதவ் அர்ஜுனாவின் அஜண்டாவாக இருந்தது என்று விசிக தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். ஆதவ் அர்ஜுனா எனக்காக முன் வைத்த துணை முதல்வர் கோரிக்கையே தவறானது என்று விமர்சித்துள்ள ஆதவ் அர்ஜுனா, அவருக்கு கட்சி மீது பற்று இருந்திருந்தால் 6 மாதம் காத்திருந்து மீண்டும் கட்சி பணிகளை மேற்கொண்டிருப்பார் என்று கூறி இருக்கிறார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம் செய்யப்பட்டார். அதன்பின் விசிகவில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். தவெகவில் அவருக்கு தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

ஆதவ் அர்ஜுனா கருத்து
அண்மையில் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், விசிக தொண்டர்களின் எண்ணத்திற்கு மாறாக திருமாவளவன் முடிவுகளை எடுக்கிறார். விசிக தொண்டர்கள் தவெகவுக்கு ஆதரவளிக்க தொடங்கி இருக்கிறார்கள் என்று தெரிவித்தார். இந்த நிலையில் ஆதவ் அர்ஜுனாவின் கருத்துகளுக்கு திருமாவளவன் காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்.
திருமாவளவன் பதிலடி
இதுதொடர்பாக திருமாவளவன் பேசுகையில், தொண்டர்களின் கருத்துக்கு மாறாக எந்த முடிவையும் எடுத்தது கிடையாது. என் முடிவுகளின் மீது தொண்டர்கள் மாற்று கருத்தும் கொண்டது கிடையாது. தலித் பிரச்சனைகளில் திருமாவளவன் என்ன செய்தார் என்று கேட்கிறார்கள். வேங்கைவயல் உள்ளிட்ட அத்தனை பிரச்சனைகளை கண்டித்தும் விசிக போராட்டம் நடத்தி இருக்கிறது. நேரடியாக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பிரச்சனைகளுக்கு தீர்வு கோரி மனு கொடுத்துள்ளோம்.
துணை முதல்வர் விவகாரம்
இதே பிரச்சனைகளுக்காக அதிமுக, பாஜக என்ன செய்திருக்கிறது? வேங்கைவயல் பிரச்சனையில் அதிமுக, பாஜக போராடினார்களா? எடப்பாடி பழனிசாமி நேரடியாக சென்றிருக்கலாமே.. அது வெறும் திமுக கூட்டணியை பிரிப்பதற்காக பேசப்படும் வார்த்தைகள் தான். ஆதவ் அர்ஜுனா என்னை துணை முதல்வராக்க வேண்டும் என்று பேசினார். அவர் ஏன் முதலமைச்சர் என்று சொல்லவில்லை. 2031ல் திருமாவளவன் முதல்வர் என்று சுற்றுப்பயணம் செய்வோம் என்று அவரிடம் கூறினேன்.
ஆதவ் அர்ஜுனா மீது அட்டாக்
அவர் விசிகவில் இருந்து செய்திருக்கலாமே.. 6 மாதம் தானே இடைநீக்கம் செய்தோம். அதனை ஏன் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தலித்துகளுக்காக மட்டுமே நிற்பேன்.. என்னுடைய தலைவர் திருமாவளவன் தான்.. திருமாவளவன் என்று இடைநீக்கத்தை நீக்கிவிட்டு சேர்க்கிறாரோ அதுவரை காத்திருப்பேனென்று சொல்லி இருக்க வேண்டும்.. துணை முதல்வர் கோரிக்கை என்ன மாதிரியான கோரிக்கை.
ஆதவ் அர்ஜுனாவின் பார்வை
துணை முதல்வர் பதவியை எந்த விதத்தில் நியாயப்படுத்துவீர்கள்.. திருமாவளவனுக்கு முதல்வராகுவதற்கு தகுதியில்லையா? உங்களின் அஜண்டாவை என் மீது திணிக்க கூடாது அல்லவா.. எனக்கு தெரியும் என்ன செய்ய வேண்டும் என்று.. என் உயரமும், என் கட்சியின் வலிமை நன்றாக தெரியும்.. ஆதவ் அர்ஜுனாவின் பார்வையே தவறு.. திமுக கூட்டணியை உடைக்க வேண்டும் என்பதே அஜண்டா..
தவெக vs விசிக
பதவியில் இருந்தாலும் இல்லையென்றாலும் மக்களுக்காக பணியாற்றுவேன். விசிக தொண்டர்களின் ஆதரவு தவெகவினருக்கு இருக்கிறதா என்பது மக்கள் எடுக்கப் போகும் முடிவு. ஒவ்வொரு கட்சிகளின் வேலைக்கு ஏற்றவாறு மக்கள் அங்கீகாரம் கொடுப்பார்கள். அதுவே எங்களுக்கு போதுமானது. தலித் மட்டுமல்லாமல் அனைத்து சமூக மக்களின் ஆதரவும் எனக்கு தேவை. அனைத்து சமூக மக்களும் எனக்கும் முக்கியம் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications