"தவெக பக்கம் சாய்கிறதா விசிக".. திருமாவளவனுக்கு கடிதம் எழுதிய விஜய்!
சென்னை: தவெக ஆட்சியமைப்பதற்கு காங்கிரஸ் ஆதரவளிப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தவெகவுக்கு நிபந்தனையுடன் ஆதரவளிப்பதாக தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் அறிவித்துள்ளார். இதேபோல விஜய் விசிக மற்றும் கம்யூனிஸ்ட்களிடம் ஆதரவு கேட்டு கடிதம் அனுப்பியுள்ளார். விஜய் நல்லாட்சி தருவார் என்கிற நம்பிக்கை உள்ளது. இதுகுறித்து விசிக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி முடிவு செய்வோம் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
சட்டமன்ற தேர்தலில் தவெக பெரும் வெற்றியை பெற்றுள்ளது. 108 தொகுதிகளில் வெற்றி பெற்றாலும், பெரும்பான்மைக்கு தேவைப்பட்ட 118 தொகுதிகள் அவர்களிடம் இல்லை. இதனால் மற்ற கட்சிகளிடம் ஆதரவு கோரி வருகிறார்கள். தவெக விஜய்க்கு ஆதரவளிப்பதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. மேலம் தவெகவுடன் கூட்டணி அமைப்பதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

விஜய் நாளை முதலமைச்சராக பதவியேற்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக அவர் இன்னும் சற்று நேரத்தில் ஆளுநரை சந்திக்கவுள்ளார். தவெகவுக்கு மேலும் சில கட்சிகளின் ஆதரவு தேவைப்படுகிறது. அப்படியிருந்தால் தான் தவெகவால் பெருபான்மை நிரூபிக்க முடியும். தவெகவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பாக அதிமுகவினரும் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
விசிக திருமாவளவன் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில், "தவெக தலைவர் விஜய் ஆதரவு கேட்டு எங்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இடதுசாரி கட்சிகளுக்கும் அவர் கடிதம் அனுப்பியுள்ளார். இதுகுறித்து நாளைக்கு எங்கள் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி முடிவு செய்வோம். காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் நிலைப்பாட்டை பற்றி நாங்கள் எதுவும் சொல்ல முடியாது. விஜய் நல்லாட்சி தருவார் என்கிற நம்பிக்கை உள்ளது.
அவருக்கு எங்கள் வாழ்த்துகள். பாஜக ஒரு இடத்தில் தான் வெற்றி பெற்றுள்ளனர். அவர்கள் இங்கு இல்லை. நாங்கள் நீண்ட காலமாக திமுகவுடன் கூட்டணியில் உள்ளோம். இப்போதும் திமுக கூட்டணியில் தான் உள்ளோம். தவெகவுக்கு ஆதரவு தெரிவிப்பது பற்றி எங்கள் நிர்வாகிகளுடன் பேசி முடிவு செய்வோம். நிர்வாகிகளுடன் பேசினால் தான் அவர்களின் கருத்தை அறிய முடியும்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications