Keezhadi: கார்பன் டேட்டிங் ஆய்வகத்தை தமிழ்நாட்டில் அமைக்கவேண்டும்! முதல்வருக்கு திருமாவளவன் கோரிக்கை
சென்னை: கனிம சோதனைக்கான கார்பன் டேட்டிங் ஆய்வகத்தை தமிழ்நாட்டில் அமைக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விசிக தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழர்களின் தொன்மை நாகரிகத்தை வெளிப்படுத்தும் கீழடி ஆய்வு முடிவுகளை வெளியிடாத மத்திய அரசைக் கண்டித்து இன்று சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன் பங்கேற்றுப் பேசினார்.

தமிழ்நாட்டில் நடக்கும் கீழடி அகழ்வாராய்ச்சி முடிவுகள், அறிவியல்பூர்வமாக, தொழில்நுட்ப ரீதியில் இன்னும் நிரூபிக்கப்படவில்லை. அங்கீகாரம் வழங்குவதற்கு முன், அதிக நடைமுறைகள் உள்ளன. அதற்கு இன்னும் நிறைய சான்றுகள் தேவைப்படுகின்றன. அவ்வாறு, அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டதும் அங்கீகாரம் வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்திருந்தார்.
கீழடி அகழாய்வின் முதல் இரு கட்டங்கள் முடிந்து, அவற்றின் ஆய்வு முடிவுகளை அறிவியல் சான்றுகளின் அடிப்படையில் முன் வைத்து, அறிக்கையை ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா அனுப்பி வைத்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும், அதை ஏற்க மனமில்லாமல், எப்படியாவது எதைச் சொல்லியாவது கீழடி அகழாய்வைப் புறந்தள்ளிவிட வேண்டும் என்ற நோக்கில் பாஜக அரசு செயல்படுவதாக திமுக உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்நிலையில், கீழடி அகழ்வாராய்ச்சி முடிவுகளை வெளியிட மறுக்கும் மத்திய அரசைக் கண்டித்து, திராவிடர் கழகத்தின் சார்பில் இன்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற விசிக தலைவர் திருமாவளவன் பேசுகையில், "திராவிடம் வேறு தமிழ் வேறு என்று சிலர் பிதற்றிக்கொண்டு இருக்கிறார்கள். திமுக எதிர்ப்பை தமிழ் தேசியம் எனக் கூறி ஒரு போலி அரசியலை செய்கிறார்கள்.
தமிழர்களின் தொன்மை கீழடி ஆய்வறிக்கையில் வெளிப்பட்டுள்ளது. கீழடி ஆய்வறிக்கையை உடனடியாக ஒன்றிய அரசு வெளியிட வேண்டும். அகழ்வாராய்ச்சியாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவின் பணியிட மாற்றத்தை ரத்து செய்ய வேண்டும்.
அவர்கள் இத்தனை காலம் சொல்லி வந்தது பொய் என கீழடியில் தெரியவந்துள்ளது. இதை ஒன்றிய பாஜகவால் ஏற்க முடியவில்லை. உலகின் மூத்த இனங்களில் ஒன்றான தமிழர்களின் கீழடி ஆய்வறிக்கையை ஒன்றிய அரசு உள்ளதை உள்ளபடியே வெளியிட வேண்டும்.
கனிம சோதனைக்கான (CARBON DATING) ஆய்வகத்தை தமிழ்நாட்டில் அமைக்க வேண்டும். இதற்கான செலவு ரூ.40-45 கோடிதான் ஆகும். ஆய்வு செய்யப்பட வேண்டிய பகுதிகளில் நாம் அகழாய்வுகளை செய்து அறிக்கை தயார் செய்து கொண்டே இருப்போம். ஒன்றிய அரசின் தொல்லியல்துறை அதை ஏற்கும்போது ஏற்கட்டும்" எனப் பேசியுள்ளார் திருமாவளவன்.












Click it and Unblock the Notifications