பொது தொகுதி.. புதுச்சேரி.. லிஸ்டை அடுக்கிய திருமாவளவன்.. திமுக – விசிக பேச்சுவார்த்தை ஹைலைட்ஸ்
சென்னை: சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு குறுகிய காலமே உள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக - பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். நாம் தமிழர், தவெக கட்சிகளும் களத்தில் வேகம் காட்டி வருகிறார்கள். திமுக தரப்பில தங்கள் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். சென்னை அறிவாலயத்தில் திமுக - விசிக இடையே இன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. நாங்கள் பேரம் பேசும் கட்சி இல்லை. எங்கள் வலிமைக்கேற்ப எங்களின் கருத்துகளை பகிர்ந்துள்ளோம் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களத்தில் உச்சகட்ட பரபரப்பு நிலவி வருகிறது. திமுக - விசிக இடையே சென்னை அறிவாலயத்தில் இன்று தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது.

பேரம் பேசும் கட்சி இல்லை
பேச்சுவார்த்தைக்கு பிறகு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "இந்தக் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் ஒரு அங்கம். அந்த உரிமை உணர்வோடு எங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டோம். நாங்கள் திமுகவோடு ஒரு பேரம் பேசும் கட்சியாக இல்லை. திமுக தலைமையிலான கூட்டணியை வெற்றி பெற செய்ய வேண்டும் என்பதுதான் எங்களின் எண்ணம்.
அதுதான் தமிழ்நாட்டிற்கும், தமிழக மக்களுக்குமான வெற்றி. முக்கியமாக சமூக நீதி அரசியலுக்கான வெற்றி என்கிற புரிதலுடன் எங்களுக்கான அதிகார பகிர்வு குறித்து எங்களின் கருத்துகளை பகிர்ந்து கொண்டோம். திமுக தரப்பில் எங்களின் கருத்துகளை கேட்டுக் கொண்டனர். இதுகுறித்து தலைவரோடு ஆலோசித்துவிட்டு உங்களுக்கு மீண்டும் அழைப்பு விடுக்கிறோம் என கூறியுள்ளனர். இந்த பேச்சுவார்த்தை சுமூகமாக, சிறப்பாக நடந்தேறியுள்ளது.
விசிக கோரிக்கைகள்
பேச்சுவார்த்தையில் எந்தெந்த தொகுதிகள் என்பதை பற்றி நாங்கள் பேசவில்லை. எங்களுக்கான அதிகாரப் பகிர்வு எங்களின் வலிமைக்கேற்ப, பங்களிப்புக்கேற்ப அமைய வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளோம். எத்தனை தொகுதிகள் என்பதைப் பற்றியும் திமுக குழுவினருக்கு நாங்கள் தெரியப்படுத்தியுள்ளோம். அது உறுதியானவுடன் ஊடகங்களிடம் அதிகாரபூர்வமாக அறிவிப்போம்.
ராஜ்யசபா பற்றி எல்லாம் நாங்கள் பேசவில்லை. புதுச்சேரியிலும் எங்களுக்கு இடம் வேண்டும், ஒரு பொதுத் தொகுதியும், சில தனித் தொகுதிகளும் வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். தொகுதி முடிவான பிறகு தான் மற்ற விபரங்களை இறுதி செய்வோம். கூட்டணி கட்சிகள் இடையே உள்ள அரசியல் ரகசியங்களை எல்லாம் வெளியில் சொல்ல முடியாது. பேச்சுவார்த்தையில் இறுதியான பிறகு தான் கூறுவோம்" என்றார்.












Click it and Unblock the Notifications