அண்ணாமலை இல்ல... வன்னியரசு, திருமுருகன் காந்தி பங்கேற்ற போட்டி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டம்
சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, பழ.நெடுமாறன் உள்ளிட்டோர் பங்கேற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டத்துக்கு போட்டியாக அதேநாளில் நடைபெற்ற மற்றொரு கூட்டத்தில் விசிக பொதுச்செயலாளர் வன்னியரசு, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இலங்கை முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட தமிழர்களின் நினைவாக சென்னை தியாகராயர் நகரில் நேற்று தமிழ்நாடு மாணவர் இயக்கம் சார்பில் நினைவேந்தல் மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது.
இதற்காக வழங்கப்பட்ட அழைப்பிதழில், உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன், அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன், காங்கிரஸ் மூத்த தலைவர் திருச்சி வேலுச்சாமி, விடுதலை சிறுத்தைகள் எம்.பி. ரவிக்குமார், பாமக செய்தித் தொடர்பாளர் பாலு, தமிழ்நாடு வாழ்வுரிமைக் கட்சி எம்.எல்.ஏ. வேல்முருகன், எஸ்.டி.பி.ஐ. மாநில பொதுச் செயலாளர் உமர் பாரூக், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மே 17 ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் நினைவேந்தல் உரையை ஆற்றுவார்கள் என குறிப்பிடப்பட்டிருந்தது.
“மோடி உரக்க பேசினா அமெரிக்காவே கேட்கும்” 2009ல் மட்டும் அவர் இருந்திருந்தா?அட்டாக் மோடில் அண்ணாமலை !
அண்ணாமலைக்கு அழைப்பு
இவர்களுடன் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பெயரும் இடம்பெற்று இருந்தது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளும் முற்போக்கு இயக்கங்களின் தலைவர்களை சமூக வலைதளங்களில் பலரும் விமர்சிக்கத் தொடங்கினர். இதனை தொடர்ந்து கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என மே 17, எஸ்டிபிஐ, திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட இயக்கங்களின் தலைவர்கள் அறிவித்தனர்.
சமூக செயற்பாட்டாளர் கூட்டியக்கம்
இந்த நிலையில், இதற்கு போட்டியாக அதே நாளில் சென்னையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டம் நடத்த சமூக செயற்பாட்டாளர் கூட்டியக்கம் சார்பில் திட்டமிட்டப்பட்டது. ஒரே வாரத்தில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு நேற்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கூட்டம் நடைபெற்றது. இதில், விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர் வன்னியரசு, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
தீர்மானங்கள்
இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களாவது, "இலங்கை தமிழர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்க வேண்டும். இலங்கையில் சிங்கள பேரினவாதத்தால் பாதிப்புக்கு ஆளான ஈழத் தமிழர்கள் உலகெங்கும் ஏதிலிகளாக பயணப்பட்டனர். ஐரோப்பா, கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் குடியேறிய ஈழத் தமிழர்கள் கண்ணியத்துடன் நடத்தப்பட்டு வருகின்றனர்.
குடியுரிமை திருத்தச்சட்டம்
ஆனால், இந்தியாவில் அதுவும் தமிழ் மண்ணில் ஏதிலிகளாக தஞ்சமடைந்த ஈழத் தமிழர்கள் அகதி முகாம்களில் அடைக்கப்பட்டு துயர வாழ்வை வாழ்ந்து வருகின்றனர். பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், பங்களாதேஷ் நாடுகளில் இருந்து வரும் இந்துக்களுக்கு அடைக்கலம் அளிப்போம் என குடியுரிமை சட்டத் திருத்தம் கொண்டு வந்த ஒன்றிய அரசு ஈழத் தமிழர்களுக்கு இடம் அளிக்கவில்லை.
கண்ணியமாக நடத்த வேண்டும்
ஆஃப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களை மீட்க விமானம் அனுப்பிய ஒன்றிய அரசு, இலங்கையில் நடைபெற்று வரும் கலவரத்திலும் பஞ்சத்திலும் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டில் தஞ்சம் பெற வரும் தமிழர்களை தடுத்து நிறுத்த ஆணை இட்டுள்ளது. தமிழ்நாடு உலகத் தமிழர்களின் தாய் மண் இங்கு அடைக்கலம் தேடி வரும் ஈழத் தமிழர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் உரிய மரியாதையும் கண்ணியமும் அளிக்க வேண்டும்.
பொதுச்சமூகத்தில் வாழ அனுமதிக்க வேண்டும்
ஐரோப்பா, கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் குடியேறிய ஈழத் தமிழர்கள் கண்ணியத்துடன் நடத்தப்படுவதை போல இங்கும் அவர்களுக்கு உரிய சட்டப்பூர்வ அந்தஸ்து அளிக்கப்பட வேண்டும். அகதிகள் முகாமில் அடைக்கப்படாமல் பொதுச் சமூகத்துடன் வாழ அனுமதி அளிக்கப்பட வேண்டும். கல்வி, பொருளாதார, சமூக, பண்பாட்டு உரிமையுடன் வாழ ஈழத்தமிழர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும்.