அரசருக்கு ராமநாதபுரம் தொகுதியாமே.. அரசல் புரசலாக கிளம்பிய பேச்சு.. சத்தமில்லாமல் வேலை நடக்குதாம்
திருநாவுக்கரசருக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்படலாம் என கூறப்படுகிறது.
Recommended Video

சென்னை: காங்கிரஸ் தலைவர் பதவியை பறித்துவிட்டார்களே என்று நாம் நினைத்தால், ராமநாதபுரத்தில் திருநாவுக்கரசரை நிறுத்த சைலன்ட்டாக வேலை நடக்கிறதாம்.
ராமநாதபுரத்தில் அதிமுகவில் எம்பி அன்வர்ராஜாவுக்கும், தமிழக அமைச்சர் மணிகண்டனுக்கும் ஏழாம் பொருத்தம் என்பதால் முன்னாள் ராஜ.கண்ணப்பனை நிறுத்த அதிமுக முடிவு செய்துள்ளது.
எனவே திமுக தரப்பிலும் பலமான வேட்பாளரை நிறுத்த வியூகம் அமைக்கப்பட்டு வருகிறது. இப்போது திமுக கூட்டணியில் முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலனுக்கும், தற்போதை மாவட்ட பொறுப்பாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் கோஷ்டிகளிடையே கைகலப்பு மட்டும் தான் நடந்தேறியுள்ளது.

தலைமைக்கழகம்
குத்து, வெட்டு என வருவதற்குள் தலைமைக் கழகத்திற்கு தகவல் தெரிய வரவே, இருவரையும் தனித்தனியே அழைத்து விசாரணை செய்ததுடன் ஆலோசனையும் வழங்கியுள்ளதாக தெரிகிறது. வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு கோஷ்டி பூசலினால் தோல்வி காண்பதை தவிர்க்க கூட்டணி கட்சியான காங்கிரசின் திருநாவுக்கரசருக்கு தொகுதி ஒதுக்கப்படலாமா என திமுக யோசித்து வருகிறதாம்.

ராகுல் காந்தி
அதற்கேற்றவாறு, தமிழக தலைவராக இருந்த திருநாவுக்கரசரை பதவி நீக்கம் செய்யபட்டவுடன் காங்கிரஸ் வரலாற்றில் முதன்முதலாக திருநாவுக்கரசரை நேரில் வரவழைத்து கட்சித் தலைவர் ராகுல் காந்தி அதிக நேரம் உரையாடியதுடன் ஆலோசனை வழங்கியிருப்பது அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் செல்வாக்கு
எம்ஜிஆரின் அரசியல் கண்டுபிடிப்பு என்று திருநாவுக்கரசைச் சொல்வார்கள். திருநாவுக்கரசர் ஏற்கனவே பாஜகவில் போட்டியிட்டு அத்வானியே பரமக்குடி வந்து பிரச்சார பொதுக் கூட்டம் பேசியும் தோல்வியை தான் தழுவ முடிந்தது. இருந்தாலும் மக்கள் செல்வாக்கு அன்று இன்றைய தேதி வரை குறையாமல் இருக்கிறதாம்.

விரும்பும் தொகுதி
தற்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இவரிடம் நீங்கள் விரும்பும் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் மத்திய அமைச்சர் ஆக்குகிறேன் என உறுதியளித்திருப்பதாக அரசல், புரசலாக பேசப்படுகிறது. மேலும் கட்சி மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக், சங்கய் தத் ஆகியோர்களிடம் திருநாவுக்கரசர் விரும்பும் தொகுதியை பெற்று கொடுத்து, வெற்றி பெறச் செய்வது உங்களது பொறுப்பு என கடுமையாக கூறியுள்ளதாக ஏஜென்ஸி தகவல்களும், டெல்லி கட்சி வட்டாரங்களும் தகவல்களை பரிமாறிகின்றன.

புது முகம்
அமமுக சார்பில் மாவட்டச் செயலாளர் வ.து.ந.ஆனந்த் போட்டியிட இருப்பதாக தகவல்கள் வெளிவந்த போதும், டிடிவி தினகரனிடம் மட்டுமே செல்வாக்கு பெற்றவர் என்ற காரணத்தை மட்டுமே காண முடிகிறது. மேலும் அரசியலுக்கு புதியவர் என தொகுதி மக்கள் அங்கலாய்க்கின்றனர். ஆக மொத்தம், தொகுதியில் வேட்பாளராக யார் வருவார்கள், வெற்றி பெறுவது யார் என்பதை விட தேர்தல் எப்போது வரும்? என தொகுதி வாக்காளர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் அல்லும், பகலும், தேர்தல் ஆணைய அறிவிப்பை எதிர்நோக்தி காத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications