திருப்போரூரில் விமான நிலையம் அமைய வேண்டிய 4375 ஏக்கர் அரசு நிலம்.. ஏரியாக மாற்றப்படுவது ஏன்?
சென்னை: தமிழக அரசு திருப்போரூர் அருகே 4375 ஏக்கரில் விமான நிலையம் அமைக்க முதலில் திட்டமிட்ட இடத்தில் தான் சென்னையின் 6வது நீர் தேக்கம் அமைகிறது. ஐடி நிறுவனங்கள் அதிகம் உள்ள செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் 4375 ஏக்கர் நிலம் இருக்கும் போது, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரை தேர்வு செய்தது ஏன் என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். இத்தனைக்கும் நகரத்திற்கு மிக அருகில் உள்ள பகுதி தான் திருப்போரூர்.. அப்படி இருந்தும் அந்த இடத்திற்கு பதில் பரந்துரை தேர்வு செய்தன்பின்னணி பார்ப்போம்.
சென்னை திருப்போரூர் பகுதியில் (4,000 முதல் 4,700 ஏக்கர் வரை வரையிலான நிலத்தில் சென்னைக்குரிய இரண்டாவது கிரீன்ஃபீல்ட் விமான நிலையம் அமைப்பதற்காக ஆரம்பத்தில் பரிசீலிக்கப்பட்டது. அந்த இடம் மட்டுமல்ல.. சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்காக, தமிழக அரசு பல்வேறு இடங்களை ஆய்வு செய்திருந்தது.

அதன்படி 2007ம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரை தேர்வு செய்ய விரும்பியது. அப்போது எல்லாம் ஸ்ரீபெரும்புதூர் காடுகளை அதிகம் கொண்ட பகுதியாக இருந்தது. அடுத்ததாக திருப்போரூர், பண்ணூர், பாளூர், பரந்தூர் ஆகிய இடங்கள் பரிசீலிக்கப்பட்டது. இதில் திருப்போரூர், பண்ணூர், பாளூர், பரந்தூர் ஆகிய நான்கு இடங்கள் இறுதியாகப் பரிசீலிக்கப்பட்டு, இந்திய விமான நிலைய ஆணையம் மற்றும் பிற தொழில்நுட்பக் குழுக்களின் ஆய்வுக்காக அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் பரந்தூர் தான் இறுதியாக தேர்வு செய்யப்பட்டது. இது காஞ்சிபுரம் மற்றும் சுங்குவார்சத்திரத்திற்கு மிக அருகில் உள்ளது. சென்னை-பெங்களூர் நெடுஞ்சாலையில் இருந்து 12 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது.
திருப்போரூரில் 4000 ஏக்கர் நிலம்
திருப்போரூரில் 4000 ஏக்கருக்கு மேல் அரசுக்கே நிலம் இருக்கும் போது, ஏன் அந்த நிலத்தை விட்டு விட்டு பரந்தூரில் அதுவும் சுமார் 70 கிமீ தள்ளி அமைக்க வேணடும் என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். ஏனெனில் திருப்போரூர், தற்போதைய சென்னை விமான நிலையத்திலிருந்து வெறும் 44 கிமீ தூரத்தில் இருக்கிறது. இந்த இடத்தை நிராகரிக்க தொழில்நுட்பக் காரணங்கள் இருக்கிறது.
தாம்பரம் விமானப்படை தளம்
தாம்பரத்தில் உள்ள இந்திய விமானப் படையின் விமானத் தளத்திற்கு மிக அருகில் தான் திருப்போரூர் இருக்கிறது. புதிய விமான நிலையத்தை அங்கே அமைத்தால், விமானப் போக்குவரத்துப் பாதைகள், பாதுகாப்பு மற்றும் செயல்பாடுகளில் மோதல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக இந்திய விமான நிலைய ஆணையம் கருதியது.
உப்பள நிலம்
அடுத்ததாக விமான நிலையம் அமைக்க திட்டமிட்ட இடம் திருப்போரூர் - கோவளம் பகுதி கடலுக்கு மிக அருகில் அமைந்துள்ளது. விமான நிலையம் அமைப்பதற்கு இந்த விதிமுறைகள் சிக்கலை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. மேலும இந்த நிலத்தின் பெரும்பகுதி உப்பள நிலம் ஆகும். அத்துடன் நீர்நிலைகள் அமைப்பதற்கே ஏதுவான இடம் ஆகும.
நீர் தேக்கம் அமைகிறது
அதேபோல் சர்வதேச விமான நிலையம் அமைப்பதற்குத் தேவையான காற்றின் திசை, நிலத்தின் உறுதித்தன்மை மற்றும் பெரிய ஓடுபாதைகளுக்குத் தேவையான தடையில்லாப் பரந்த நிலம் போன்ற அம்சங்களை எடுத்து பார்த்தால் பரந்தூருடன் ஒப்பிடும் போது குறைபாடுகளைக் கொண்டிருந்தது. இந்தக் காரணங்களால்தான், திருப்போரூர் நிராகரிக்கப்பட்டது.
எனவே பரந்தூர் என்பது தொழில்நுட்ப ரீதியாக மிகவும் உகந்த இடமான இருப்பதால், பல்வேறு ஆயவுகளுக்கு பின் இறுதி செய்யப்பட்டு, அங்கு சர்வதேச விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்தே திருப்போரூர் - கோவளம் இடையே உள்ள 4,375 ஏக்கர் அரசு நிலத்தில, தற்போது சென்னைக்கு மிகவும் தேவையான 6-வது நீர்த்தேக்கம் அமைக்க அரசு முடிவு செய்து டெண்டர் கோரியுள்ளது. 1.6 டி.எம்.சி., கொள்ளளவு கொண்ட இந்த புதிய நீர்த்தேக்கம் சுமார் ரூ.471 கோடி மதிப்பில் கட்டப்படப்பட உள்ளது. இந்த ர்த்தேக்கம் அமைக்கும் பணியில் தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் ஈடுபட்டிருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications