திருப்பரங்குன்றம் விவகாரம்: “தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வாய்ப்பு”- திமுக வழக்கறிஞர் சரவணன் பேட்டி
சென்னை: "சட்டம் தான் மேலானது, நீதிமன்றங்கள் தன்னிச்சையாக உத்தரவுகளை பிறப்பிக்க முடியாது என உச்சநீதிமன்றம் ஏற்கனவே கூறியுள்ளது. திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வாய்ப்பு உள்ளது." என திமுகவை சேர்ந்த வழக்கறிஞர் சரவணன் அண்ணாதுரை கூறியுள்ளார்.
திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய இரு நீதிபதிகள் அமர்வு மறுப்பு தெரிவித்து உள்ளனர். நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தனி நீதிபதி சுவாமிநாதன் மீண்டும் விசாரிப்பார் என்று இரு நீதிபதிகள் அமர்வு தெரிவித்துள்ளது.

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவை நிறைவேற்றத் தவறிய மாவட்ட நிர்வாகம் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்திர்ந்தார் மனுதாரர் ராம ரவிக்குமார். தனி நீதிபதி சுவாமிநாதன் உத்தரவுக்கு எதிராக செயல்பட்டதாக மாவட்ட நிர்வாகம் மீது அவமதிப்பு முறையீடுகள் பதிவு செய்யப்பட்டது. அதற்கு எதிராக மாவட்ட நிர்வாகம் மூலம் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்றது. அப்போது, நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் உத்தரவால் சமூக நல்லிணக்கம் பாதிக்கப்பட்டதாக தமிழ்நாடு அரசு தரப்பு வாதிட்டது. மேலும், காவல் துறைக்கு இணையாக சி.ஐ.எஸ்.எப். செயல்பட முடியாது என்றும் தமிழ்நாடு அரசு கூறியது.
மேலும், அதிகார வரம்பை மீறி தனி நீதிபதி சுவாமிநாதன் செயல்பட்டது துரதிர்ஷ்டவசமானது என்றும் அரசு தனது தரப்பு வாதத்தை முன்வைத்தது. தனி நீதிபதி சுவாமிநாதன் நேற்று நடந்த மோதல் காட்சிகளை பார்த்தாரா என தெரியவில்லை என்றும் அரசு தெரிவித்தது.
இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் இன்று மாலை தீர்ப்பு அளிக்கப்பட்டது. இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, அரசு தரப்பின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தனி நீதிபதி சுவாமிநாதன் மீண்டும் விசாரிப்பார் என்றும் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக திமுகவை சேர்ந்த வழக்கறிஞர் சரவணன் அண்ணாதுரை பேசுகையில், "சட்டம் ஒழுங்கையும், மத நல்லிணக்கத்தையும் காக்க வேண்டிய தலையாய கடமை தமிழக அரசுக்கு உள்ளது. இதற்கு முன்பும் பல தீர்ப்புகள் வந்துள்ளன. இந்த விவகாரத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வாய்ப்பு உள்ளது.
சட்டம் தான் மேலானது, நீதிமன்றங்கள் தன்னிச்சையாக உத்தரவுகளை பிறப்பிக்க முடியாது என உச்சநீதிமன்றம் ஏற்கனவே கூறியுள்ளது. நீதிபதிகளின் இந்த உத்தரவுக்குப் பின்னால் என்ன நடக்கிறது என்பதை தமிழக மக்கள் அறிவார்கள்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications