தாமரை மலர்ந்தே தீரும்.. திருப்பரங்குன்றத்தை வைத்து பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு தான் தலைவலியே!
சென்னை: திருப்பரங்குன்றம் விவகாரம் தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியா முழுவதும் பேசு பொருளாக மாறி இருக்கிறது. அயோத்தி போல தமிழகத்தை மாற்ற பாஜக சதி செய்வதாக திமுக குற்றம் சாட்டுகிறது. திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக வழக்கு தொடர்ந்தது என்னவோ இந்து தமிழர் கட்சியை சேர்ந்த ராம.ரவிக்குமார் தான். ஆனால் இதில் தனியாக ஸ்கோர் செய்ய நினைத்த பாஜக விவகாரத்தை பெரிதாக்கி உள்ளது. இந்த நிலையில் திருப்பரங்குன்றம் விவகாரத்தை வைத்து கோவில் நகரங்களில் பாஜக வளர்ந்து விட்டதாக கருதி அந்த தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டுமென மீண்டும் எடப்பாடி பழனிச்சாமியிடம் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில மாதங்களாக அமைதியாக இருந்த திருப்பரங்குன்றம் மீண்டும் பரபரப்பில் ஆழ்ந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள சிக்கந்தர் தர்காவில் ஆடு பலியிட அனுமதிக்க வேண்டும் என இஸ்லாமிய அமைப்புகள் போர்க்கொடி தூக்கிய நிலையில் அதற்கு தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் கார்த்திகை தீபம் விழாவை முன்னிட்டு மலை கோவிலில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் இந்து தமிழர் கட்சியைச் சேர்ந்த ராம.ரவிக்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.

திருப்பரங்குன்றம் சர்ச்சை
இந்த மனு மீதான விசாரணையின் போது மலை உச்சியில் உள்ள தீப தூணில் தீபம் ஏற்ற உத்தரவிடப்பட்டது. அதற்கு சட்டம் ஒழுங்கு காரணம் காட்டி மதுரை மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இது தொடர்பாக நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். இதனால் திருப்பரங்குன்றத்தில் பரபரப்பு நிலவுகிறது. இந்த நிலையில் திருப்பரங்குன்றம் மூலம் பாஜகவின் செல்வாக்கு வளர்ந்துள்ளதாகவும், இதனால் கோவில் நகரங்களில் கவனம் செலுத்த பாஜக முடிவு எடுத்துள்ளது.
பாஜக கோரிக்கை
ஏற்கனவே காஞ்சிபுரம், ஸ்ரீவில்லிபுத்தூர், பழனி, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட தொகுதிகளை எடப்பாடியிடம் பாஜக கேட்ட நிலையில் தற்போது மீண்டும் அது தொடர்பாக வலியுறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 2019 முதல் அதிமுக-பாஜக கூட்டணி அடிக்கடி உடைந்து, மீண்டும் சேர்ந்து இயங்கி வரும் நிலையில், புதியதாக கூட்டணியை உறுதி செய்ய முயற்சிகள் தீவிரமாகியது. மக்களவை தேர்தல்களில் இரு கட்சிகளும் தனித்தனியாக போட்டியிட்டு தோல்வியை சந்தித்த பின்னர், வாக்குச்சதவீதம் அடிப்படையில் இணைந்தால் மட்டுமே வெற்றி வாய்ப்பு இருக்கும் என பாஜக கருதுகிறது.
பாஜக செல்வாக்கு
இதன் பின்னணியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரடியாக தலையிட்டு கூட்டணியை உறுதி செய்ததாகத் தகவல்கள் வந்தன. அத்துடன் பாஜக 50க்கு மேற்பட்ட சட்டமன்ற தொகுதிகளை கோரும் நிலையில், எடப்பாடி பழனிச்சாமி 20 தொகுதிகளுக்கு மேல் தர முடியாது என தெரிவித்ததாக கூறப்படுகிறது. கடந்த மாதமே 'ஒரு மக்களவைத் தொகுதிக்கு ஒரு சட்டமன்ற தொகுதி' என்ற கோரிக்கையும் பாஜக வைத்திருந்தது. குறிப்பாக கோவை, கன்னியாகுமரி, சென்னை போன்ற பகுதிகளில் கூடுதல் சீட்டுகள் வேண்டும் எனவும் கேட்டதாக தகவல் வெளியாகியது.
கோவில் நகர தொகுதிகள்
இதேநேரம், ஆன்மிக நகரங்கள் மற்றும் கோவில் மையங்களைக் கொண்ட தொகுதிகளின் பட்டியலை அமித்ஷா தரப்பிலிருந்து அதிமுக தலைவருக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. அந்தப் பட்டியலில் பெரும்பாலானவை இதுவரை அதிமுக வலுவாக இருந்த தொகுதிகள் என்பதால் அதிமுக தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனுடன், திருப்பரங்குன்றம் விவகாரத்தை பாஜக பெரிதாக்க ஆரம்பித்துள்ள நிலையில், கோவில் நகரங்களில் தங்களது செல்வாக்கு உயர்ந்துவிட்டதாக எண்ணி, அந்தத் தொகுதிகளை மீண்டும் தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை எடப்பாடி பழனிச்சாமியிடம் பாஜக வலியுறுத்தி வருவதாகவும் அரசியல் வட்டாரத்தில் தகவல்கள் பரவி வருகின்றன.












Click it and Unblock the Notifications