களை கட்டுகிறது திருவாரூர் இடைத்தேர்தல்.. அனைத்து முக்கிய கட்சிகளும், நாளை வேட்பாளர் பெயர் அறிவிப்பு
Recommended Video

சென்னை: திருவாரூர் சட்டசபை தொகுதி இடைத் தேர்தலையொட்டி, திமுக, அதிமுக, தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என அனைத்து முக்கிய கட்சிகளும், நாளை தங்கள் வேட்பாளரை அறிவிக்க உள்ளன.
கருணாநிதி மறைவால் காலியாக உள்ள திருவாரூர் சட்டசபை தொகுதிக்கு வரும் 28ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், திமுக, அதிமுக, அமமுக ஆகிய மூன்று கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இம்மூன்று கட்சிகளுமே, தங்கள் வேட்பாளர்களை தேர்வு செய்ய விருப்ப மனு வினியோகத்தை ஆரம்பித்துள்ளன.

திமுக நாளை நேர்காணல்
திமுகவை பொறுத்தளவில், திருவாரூர் மாவட்ட செயலாளர், பூண்டி கலைவாணன் அவரது பெயரிலும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பெயரிலும் விருப்பமனு தாக்கல் செய்துள்ளார். ஸ்டாலினுக்கு திருவாரூரில் களமிறங்க விருப்பமில்லை என்றும், தனக்கு வாய்ப்பு தந்தால் ஏற்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தி, அவரது ரசிகர்கள் என்ற பெயரில், சிலர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர். அநேகமாக பூண்டி கலைவாணனுக்கு, வாய்ப்பு கிடைக்கலாம் என தெரிகிறது. நாளை மாலை திமுக தலைவர்கள், வேட்பாளர்களை நேர்காணல் கண்டு, அதில் ஒருவர் பெயரை அறிவிக்க உள்ளனர்.

அதிமுக ஆட்சிமன்றக் குழு
அதிமுகவை பொறுத்தளவில், திருவாரூர் தொகுதி எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் முகமது அஷ்ரப், கருணாநிதியை எதிர்த்து கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்ட பன்னீர்செல்வம் உள்பட பலர் விருப்ப மனு கொடுத்தனர். அதிமுக தலைமை அலுவலகம் அமைந்துள்ள ராயப்பேட்டையில் நாளை மாலை அக்கட்சி ஆட்சிமன்ற குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் குறித்து பரிசீலனை நடைபெற்று வேட்பாளர் யார் என்பது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

களைகட்டியது
இதனிடையே, திருவாரூர் தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நாளை அறிவிக்கப்படும் என்று டிடிவி தினகரன் இன்று அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். எனவே, நாளை 3 முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் பெயரும் அறிவிக்கப்பட உள்ளதால் திருவாரூர் தொகுதி களைகட்டியுள்ளது.

நாம் தமிழர்
நாம் தமிழர் கட்சி சார்பில் திருவாரூரில் சாகுல் அமீது, வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அக்கட்சி, திருவாரூரில் தனித்து போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளது. அக்கட்சியும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.












Click it and Unblock the Notifications