திருவேற்காட்டில் ஆசையாக புதிய வீடு வாங்கிய ஜெகதீஷ்.. வீட்டு வரி.. நகராட்சி ஊழியருக்கு நல்ல பாடம்
சென்னை: திருவள்ளூரைச் சேர்ந்த ஜெகதீஷ் என்பவர் நடேசன் நகர் பகுதியில் புதியதாக வீடு ஒன்றை வாங்கியிருக்கிறார். அந்த வீட்டை தனது பெயருக்கு மாற்றவும், வீட்டு வரி செலுத்துவதற்காகவும் திருவேற்காடு நகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அவரிடம் வரி வசூலிக்கும் பணி செய்து வந்த உமாநாத் என்பவர் ரூ.25 ஆயிரம் லஞ்சமாக கேட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ரசாயனம் தடவிய நோட்டுகளை வாங்கிய போது, நகராட்சி ஊழியர் கையும் களவுமாக லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கியிருகிறார்.
வீடு வாங்குவோர்,நிலம் வாங்குவோர், அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் தோட்டம் என சொத்து வாங்குவோரை குறிவைத்து சில அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்பது நடக்கிறது. லஞ்சம் கொடுக்காமல் எந்த பணிகளும் உடனே நடப்பது இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

அரசு ஊழியர்கள் லஞ்சம்
பட்டா பெயர் மாற்றம் செய்ய, நிலத்தை அளந்து கொடுக்க, பத்திரப்பதிவு தொடர்பான பல்வேறு ஆவணங்களை பெற, சொத்து வரி பெயர் மாற்றம் செய்ய, வீட்டு வரி பெயர் மாற்றம் செய்ய என பல்வேறு பணிகளுக்கு லஞ்சம் கொடுத்தால் தான் பணிகளை சில அரசு அதிகாரிகள் மேற்கொள்வதாக புகார்கள் உள்ளது. அவர்கள் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளிக்கலாம். அப்படி புகார் அளித்தால், அரசு அதிகாரிகளை கையும் களவுமாக பிடித்து லஞ்ச ஒழிப்புபோலீசார் கைது செய்வார்கள். சென்னையை அடுத்த திருவேற்காட்டில் ஒரு அதிகாரி கையும் களவுமாக சிக்கியுள்ளார்.
புதிதாக வீடு வாங்கியவர்
திருவள்ளூரைச் சேர்ந்தவர் ஜெகதீஷ் என்பவர் திருவேற்காடு நடேசன் நகரில் வீடு வாங்க விரும்பியுள்ளார்.ஆசை ஆசையாக பணம் சேர்த்து புதியதாக வீட்டினை வாங்கியிருக்கிறார். வீட்டை வாங்கிய நிலையில், அந்த வீட்டை அவரது பெயருக்கு மாற்றவும், வீட்டு வரி செலுத்துவதற்காகவும் திருவேற்காடு நகராட்சி அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். அதற்கு நகராட்சியில் வரி வசூலிக்கும் பணி செய்து வந்த உமாநாத் என்பவர் ரூ.25 ஆயிரம் லஞ்சமாக தரும்படி கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெகதீஷ், லஞ்சம் கொடுக்க விரும்பவில்லை. மாறாக திருவேற்காடு நகராட்சி அதிகாரியை மாட்டிவிடுவதற்காக திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார்.
25000 லஞ்சம்
இதையடுத்து திருவேற்காடு நகராட்சி ஊழியரை கையும் களவுமாக பிடிக்க முடிவு செய்த திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. கணேசன், இன்ஸ்பெக்டர் தமிழரசி ஆகியோர், ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை ஜெகதீஷிடம் கொடுத்தனர். அந்த லஞ்சப் பணத்தை நகராட்சி ஊழியர் உமாநாத்திடம் கொடுக்கும்படி அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.
திருவேற்காடு நகராட்சி அதிகாரி கைது
அதன்படி ஜெகதீஷ், திருவேற்காடு நகராட்சி அலுவலகத்தில் இருந்த உமாநாத்திடம் அந்த பணத்தை லஞ்சமாக கொடுத்திருக்கிறார். அதனை அவர் கையில் வாங்கியதும், அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பாய்ந்து வந்து, உமாநாத்தை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரித்து வருகிறார்கள். லஞ்ச ஒழிப்பு போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கையால் திருவேற்காடு நகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications