சந்தேகப்பட்ட மாதிரியே நடந்துருச்சு! ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சதி நடக்கிறதா! அன்புமணி கிடுக்கிப்பிடி
சென்னை: திருவேங்கடம் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக காவல்துறை தரப்பில் கூறப்படும் காரணங்கள் நம்பும்படியாக இல்லை. திருவேங்கடம் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக நீதிமன்றத்தின் கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும். ஏற்கனவே நான் வலியுறுத்தியவாறு ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 ஆம் தேதி மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த கொலை சம்பவத்தில் இதுவரை 11 பேரை போலீசார் கைது செய்து காவலில் எடுத்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலை: ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டிருந்த திருவேங்கடம் என்பவரை போலீசார் இன்று அதிகாலை என்கவுண்டர் செய்தனர். இன்று காலை 5.30 மணியளவில், கொலையாளிகள் ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்த சென்னை மாதவரம் ஏரிக்கரை பகுதிக்கு விசாரணைக்காக போலீசார் திருவேங்கடத்தை அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது போலீசாரிடம் இருந்து தப்ப முயன்றதோடு, ஆயுதங்களால் போலீசாரை தாக்க முயன்றதால் திருவேங்கடத்தை போலீசார் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர்.
இந்த நிலையில், திருவேங்கடம் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக காவல்துறை தரப்பில் கூறப்படும் காரணங்கள் நம்பும்படியாக இல்லை என்றும், ஆம்ஸ்ட்ராங் வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:-
நம்பும்படியாக இல்லை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சரண் அடைந்தவர்களில் ஒருவரான திருவேங்கடம் என்பவர் இன்று அதிகாலை மாதவரம் அருகில் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது பல்வேறு ஐயங்களை ஏற்படுத்தியுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்த எதிரிகள் காவல்துறை விசாரணைக்கு எடுக்கப்பட்ட போதே, அவர்களில் சிலர் காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்படுவார்கள் என்ற ஐயம் எழுந்தது.
திருவேங்கடம் சுட்டு கொல்லப்பட்டிருப்பதன் மூலம் அந்த ஐயம் உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவேங்கடம் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக காவல்துறை தரப்பில் கூறப்படும் காரணங்கள் நம்பும்படியாக இல்லை. மிக முக்கிய கொலை வழக்கில் சரணடைந்த எதிரியை அதிகாலை நேரத்தில் ஆயுதங்களை கைப்பற்றுவதற்காக அழைத்துச் செல்ல எந்த தேவையும் இல்லை.
மோசமான அணுகுமுறை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய திருவேங்கடத்தை சுட்டுக்கொலை செய்திருப்பதன் மூலம் இந்த வழக்கில் தொடர்புடைய சிலரை காப்பாற்றவும், ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பான உண்மைகளை மூடி மறைக்கவும் சதி நடந்திருக்கிறதோ? என்ற ஐயம் எழுகிறது. இன்னொரு புறம் சட்டம் ஒழுங்கு சீர்குலைய அனுமதித்துவிட்டு ஓரிரு ரவுடிகளை காவல்துறை மூலம் சுட்டுக்கொலை செய்வதன் வாயிலாக, சட்டம் - ஒழுங்கு சீரடைந்து விட்டதாக காட்ட முயல்வது மிக மோசமான அணுகுமுறையாகும். இந்த அணுகுமுறை கண்டிக்கத்தக்கது.
சிபிஐக்கு மாற்ற வேண்டும்: திருவேங்கடம் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதன் மூலம் ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பான மர்மம் வலுவடைந்துள்ளது. இந்த விவகாரத்தில் அரசின் செயல்பாடுகள் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதாக இல்லை. இது தொடர்பாக எழுந்துள்ள ஐயங்களை அரசுதான் போக்க வேண்டும்.
அதற்காக திருவேங்கடம் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக நீதிமன்றத்தின் கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும். ஏற்கனவே நான் வலியுறுத்தியவாறு ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications