டம்மி 500 ரூபாய்! மாம்பழம் விற்ற பாட்டியை ஏமாற்றியவர்க்கு.. செக் வைத்த சென்னை போலீஸ்! மாஸ் சம்பவம்
சென்னை: தள்ளாத வயதிலும், மாம்பழம் விற்று பிழைப்பு நடத்தி வந்த பாட்டியை ஏமாற்றி.. குழந்தைகள் விளையாடும் டம்மி 500 ரூபாய் நோட்டு கொடுத்து மோசடி செய்தவரை போலீசார் கைது செய்திருக்கின்றனர்.
இதுகுறித்து சென்னை பெருநகர காவல்துறை தனது x பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "சிறுவர்கள் விளையாடும் 500 ரூபாய் காகித நோட்டை பழம் விற்கும் மூதாட்டியிடம் கொடுத்து ஏமாற்றி பழம் வாங்கி சென்றுவிட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தது.

மாஸ் காட்டிய போலீஸ்
இந்நிலையில், ஏமாற்றப்பட்ட மூதாட்டியின் புகாரின் பேரில் திருவொற்றியூர் குற்றப்பிரிவு காவல்துறையினர் உடனடியாக வழக்கு பதிவு செய்து கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன் குற்றவாளியை கைது செய்து சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். தன்னுடைய புகாரின் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்த காவல் துறையினருக்கு மூதாட்டி தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தார்" என அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
என்ன நடந்தது?
சென்னை திருவொற்றியூரில், ரயில் நிலையத்திலிருந்து மெயின் ரோடு செல்லும் சாலையில் பாட்டி பழம் விற்று வந்திருக்கிறார். சீசனுக்கு ஏற்ற பழங்களை கடந்த பல ஆண்டுகளாக அவர் இங்கு விற்று வருகிறார். எனவே உள்ளூர் மக்களுக்கு இந்த பாட்டி நன்கு பரிச்சயம். பாட்டி புற்று நோயால் பாதிக்கப்பட்டவர். பிள்ளைகள் கைவிட்ட நிலையில், அவரால் முடிந்த வேலையை செய்து, அதன் மூலம் வரும் வருமானத்தை கொண்டு மருத்துவ செலவையும், வாழ்க்கை செலவுகளையும் பார்த்து வந்திருக்கிறார்.
மோசடி சம்பவம்
இப்படி இருக்கையில்தான் நேற்று அந்த சம்பவம் நடந்திருக்கிறது. அதாவது, பெண் ஒருவர் பாட்டியிடம் ரூ.150க்கு மாம்பழம் வாங்கியிருக்கிறார். இதற்காக ரூ.500 கொடுத்து சில்லறையையும் வாங்கி சென்றிருக்கிறார். கொஞ்ச நேரம் கழித்து 500 ரூபாய் நோட்டை பிரித்து பார்த்த பாட்டி அதிர்ச்சியடைந்திருக்கிறார். ஏனெனில், அந்த பெண் கொடுத்துவிட்டு சென்றது டம்மி ரூபாய் நோட்டு. சிறுவர்கள் விளையாட வைத்திருக்கும் ரூபாய் நோட்டு அது.
பாட்டியின் கண்ணீர்
விஷயம் தெரியாத அந்த பாட்டி அதை வாங்கி வைத்திருக்கிறார். உண்மை தெரிந்த பின்னர் கண்ணீர் விட்டு அழுதிருக்கிறார். ரூ.150க்கு பழம் வாங்கி சென்றது மட்டுமல்லாது, அந்த டம்மி நோட்டுக்கு சில்லறையையும் கேட்டு வாங்கியிருப்பது பாட்டியை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.
இதனையடுத்து பாட்டி வேதனையுடன் அழுத வீடியோ சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேராக, பலரும் பாட்டிக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். சிலர் பாட்டிக்கு நேரில் சென்று பண உதவி செய்திருந்தனர்.
நன்றி சொன்ன பாட்டி
இந்த விஷயத்தை சீரியஸாக அணுகிய போலீசார், சம்பந்தப்பட்ட பெண்ணை சிசிடிவி கேமராக்கள் உதவி மூலம் தேட தொடங்கினர். இதனையடுத்து தற்போது அவர் கைது செய்யப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்திருக்கின்றனர்.
போலீசார் எடுத்த நடவடிக்கை பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கிறது. வாழ்க்கையில் பெரிய நெருக்கடி வரும்போதுதான் நல்ல மனிதர்கள் கண்களுக்கு தெரிகிறார்கள் என பாட்டி போலீசாருக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications