"திராவிட மாடல் என்றால் என்னனு கேட்பவர்களே.. இதுதான் பதில்” முதல்வர் ஸ்டாலின் பரபர பேச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சமத்துவத்தை போற்றுவதும், பாதுகாப்பதும்தான் திராவிட மாடல்.
திராவிட மாடல் என்றால் என்ன என்று கேட்பவர்களுக்கு இதுதான் பதில் என தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று கிறிஸ்துமஸ் விழாவில் பேசியுள்ளார்.

சென்னை டான் பாஸ்கோ பள்ளியில் இன்று திமுக சார்பில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதைத்தொடர்ந்து உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், “சமத்துவத்தை போற்றுவதும், பாதுகாப்பதும்தான் திராவிட மாடல். திராவிட மாடல் என்றால் என்ன? என்று கேட்பவர்களுக்கு இதுதான் பதில்.” என்றார்.

mk stalin christmas

முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், “அனைவருக்கும் முதலில் என்னுடைய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

ஒவ்வொரு சொல்லிலும் அரசியல் இருக்கிறது. ஆனால், நான் அரசியல் பேசவில்லை... அரசியல் பேசவில்லை என்று நம்முடைய ஆணையத் துணைத் தலைவர் சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால், ஒவ்வொரு சொல்லிலும் அரசியல் இருக்கிறது. நாம் தேர்ந்தெடுக்கும் சொற்களே, நாம் எந்த அரசியல் பேசுகிறோம் என்பதைச் சொல்லிவிடும். நமக்குப் புரியாவிட்டாலும், இப்போது மக்களுக்கு நன்றாகப் புரியும்; எந்த நோக்கத்துக்காக உழைக்கிறோம் என்று அது வெளிப்படுத்தும்.

அப்படித்தான், திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கும் பல்வேறு சார்பு அணிகளில், இந்தச் சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவும் ஒன்று. ஒன்றை நீங்கள் நன்றாக கவனிக்க வேண்டும். இந்த அணிக்கு சிறுபான்மையினர் பிரிவு என்று பெயர் வைக்காமல், சிறுபான்மையினர் உரிமைப் பிரிவு என்று பெயர் வைத்திருக்கிறோம். அதுதான் முக்கியம். இதில் இருந்தே, சிறுபான்மை மக்கள் மீதான திராவிட முன்னேற்றக் கழகத்தின் அக்கறையையும், அரவணைப்பையும் அனைவரும் உணரலாம்.

சிறுபான்மை மக்களுக்கு துரோகங்களைச் செய்துவிட்டு, வாக்கு அரசியலுக்காகச் சிறுபான்மை மக்களுடைய நண்பர்கள்போல் நடிப்பவர்கள் இந்த நாட்டில் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்கள் யார் என்று பெயர் சொல்லி நான் அடையாளப்படுத்தித்தான் உங்களுக்குத் தெரிய வேண்டும் என்று அவசியமில்லை. உங்களுக்கே நன்றாகத் தெரியும்.

திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொருத்தவரைக்கும், இந்த நாட்டில் சிறுபான்மைச் சமூகமாக வாழும் மக்கள் அனைவரும், பெரும்பான்மையில் சொற்பமான சிலர் விதைக்கும் வெறுப்பு அரசியலுக்கு அஞ்சக் கூடாது; மதச் சார்பின்மையையும் - மத நல்லிணக்கத்தையும் விரும்பும் மக்கள் அனைவரும் சகோதர உணர்வுடன் உங்களுக்குத் துணை இருக்கிறோம் என்பதை வெளிப்படுத்தும் இயக்கம்தான் நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது.

சிறுபான்மையினர் நலனில் உண்மையான அக்கறை கொண்டுள்ள இயக்கம்! இங்கே நம்முடைய ஆணையத் தலைவர் அவர்கள் பேசுகிறபோது, அழகாக குறிப்பிட்டுச் சொன்னார்கள்.

நம்முடைய ஆட்சிக் காலத்தில்தான்,

* சிறுபான்மையினர் நல ஆணையம்,

* சிறுபான்மையினர் நலக் குழு,

* தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்,

* சிறுபான்மையினர் நல இயக்ககம்,

* தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையச் சட்டம் - என்று ஏராளமானவற்றைத் தொடர்ந்து செய்து வருகிறோம்.

அந்த வகையில், சகோதர உணர்வின் - ஒற்றுமையின் வெளிப்பாடாக இந்த நிகழ்ச்சியில் பங்கெடுப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த மேடையில், போதகர்கள் 75 பேருக்கும், அருட்சகோதரிகள் 30 பேருக்கும் சிறப்பு செய்திருக்கிறோம். அவர்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துகளை நான் தெரிவித்துக் கொள்கிறேன்!

இந்த மேடையைப் பாருங்கள்... பேராயர்களோடு, பேரூர் ஆதினமும் கலந்து கொண்டிருக்கிறார். இந்த விழாவை நடத்துபவர் யார்? நம்முடைய மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள்! இதுதான் சமத்துவ விழா! இந்தச் சமத்துவத்தைப் போற்றுவதும் பாதுகாப்பதும்தான் திராவிட மாடல்! திராவிட மாடல்... திராவிட மாடல் என்றால் என்ன? என்ன? என்று சிலர் கேட்டுக் கொண்டிருக்கிறார்களே... இதுதான் திராவிட மாடல். இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள்.

மதங்கள் வேறுபட்டிருந்தாலும், மனங்கள் ஒன்றுபட்டு இருக்க வேண்டும்! மனதால் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்! அதுதான் பண்பட்ட - முன்னேறிய சமூகத்துக்கு அடையாளமாக விளங்கிட முடியும்! அப்படிப்பட்ட சமூகமாகத்தான், நம்முடைய தமிழ்ச் சமூகம் விளங்குகிறது! இதற்கு அடித்தளம் போட்டது, நம்முடைய திராவிட இயக்கம்!

நான் அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறேன்... எந்த மதமாக இருந்தாலும், அது அன்பை போதிக்க வேண்டும்! சகோதரத்துவத்தை வளர்க்க வேண்டும்! சக மனிதர்கள் மீது பாகுபாடு காட்டுவதாக இருக்கக் கூடாது!

இந்தியா என்ற பன்முகத்தன்மை கொண்ட நம்முடைய அழகிய நாட்டில், அனைவரும் சமத்துவமாக - ஒற்றுமையாக இருக்க வேண்டும். இதற்கு தடையாக, மதத்தை அரசியலுக்குப் பயன்படுத்தி, மக்களின் உணர்வுகளைத் தூண்டி, பிளவுவாத அரசியல் செய்பவர்களுக்குதான் நாங்கள் எதிரிகள்! மற்றபடி, வழிபாடும் - இறையியலும் அவரவர் விருப்பம்! அவரவர் உரிமை!

நம்மைப் பொருத்தவரைக்கும், பேரறிஞர் அண்ணா அவர்கள் சுட்டிக்காட்டியதுதான், "ஒன்றே குலம்; ஒருவனே தேவன்!" - "ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்!". எனவே, சாதி - மத வேறுபாடுகள், உயர்வு - தாழ்வுகள் மறைந்து, சமத்துவமும் ஒற்றுமையும் - மத நல்லிணக்கமும், மனித நல்லிணக்கமும் முதன்மையாக விளங்கினால், உலக அரங்கில் நம்முடைய நாடு மிகப்பெரிய உயரத்தை அடையும்! அதற்கான அன்பையும் அமைதியையும்தான் இதுபோன்ற விழாக்கள் விதைக்கிறது.

அனைத்துத் துறை வளர்ச்சி, அனைத்து மாவட்ட வளர்ச்சி, அனைத்து மக்கள் வளர்ச்சி, அனைத்துச் சமூக வளர்ச்சி என்று பாடுபட்டு வரும் நம்முடைய திராவிட மாடல் அரசில், சிறுபான்மையினர் நலனுக்காகச் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களில் முத்தாய்ப்பான சிலவற்றை நினைவுபடுத்த விரும்புகிறேன். அதை நம்முடைய ஆணையத் துணைத் தலைவர் குறிப்பிட்டுச் சொல்லி இருக்கிறார். இருந்தாலும், நான் உங்களுக்கு மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன். அவர் தலைப்புச் செய்தியாக சொன்னார். நான் புள்ளி விவரங்களோடு சொல்ல விரும்புகிறேன்.

* ஜெருசலேம் புனித பயணம் செல்வதற்கான நிதியுதவி வழங்கும் திட்டத்தில், இப்போது ஒரு பயனாளிக்கு நிதி உதவியாக 37 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. ஆண்டொன்றுக்கு இந்தத் திட்டத்தில் 600 பயனாளிகள் பயனடைகிறார்கள். இதில் 50 இடங்களை, கன்னியாஸ்திரிகளுக்கும், அருட்சகோதரிகளுக்கும் ஒதுக்கீடு செய்திருக்கிறோம்.

அருட்சகோதரிகள் - கன்னியாஸ்திரிகளுக்கான இந்த மானியம், 37 ஆயிரம் ரூபாயிலிருந்து 60 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என்று சட்டமன்றத்தில் அறிவித்தோம். அதன்படி, இதுவரைக்கும், 8 கோடியே 25 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் செலவில் 4,128 கிறித்துவர்கள் ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொண்டிருக்கிறார்கள். இந்த ஆண்டு இந்த மானியத்தைப் பயனாளிகளுக்கு நேரடியாக வழங்கும் திட்டமாக மாற்றி ஆணையிட்டிருக்கிறோம்.

* தமிழ்நாட்டில் இருக்கும் கிறித்துவ தேவாலயங்களை புனரமைக்கவும், பழுது நீக்கவும் வழங்கப்படும் மானிய உதவி திட்டத்தில் இதுவரைக்கும், 37 கிறித்துவ தேவாலயங்களின் புனரமைப்புப் பணிகளுக்காக ஒரு கோடியே 61 லட்சத்தி 90 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது.

தொன்மை வாய்ந்த தேவாலயங்களைப் புனரமைக்கும் திட்டத்தின்கீழ், 2023-24, 2024-25 ஆண்டுகளில் தலா 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, 8 தொன்மை வாய்ந்த தேவாலயங்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டிருக்கிறது.

பள்ளி வாசல்கள், தர்காக்கள் மற்றும் இதர வக்பு நிறுவனங்களைப் பழுது பார்ப்பதற்காகவும், புனரமைப்பதற்காகவும் ஆண்டுதோறும் வழங்கப்படும் மானியத்தை உயர்த்தியிருக்கிறோம்.

இந்த 2024-25-ஆம் ஆண்டு மட்டும், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம், 5,046 பயனாளிகளுக்கு 36 கோடியே 44 லட்சம் ரூபாய் கடனாக வழங்கப்பட்டிருக்கிறது.

* சிறுபான்மை வகுப்பைச் சார்ந்த ஏழ்மை நிலையிலுள்ள மாணவ - மாணவியர் தங்களின் கல்வியினை தொடர்ந்து பயில்வதற்கு ஏதுவாக, ஏற்கனவே செயல்பட்டு வரும் 17 இலவச உண்டி உறைவிட விடுதிகளுடன், புதிதாக 3 விடுதிகள் தொடங்கப்பட்டிருக்கிறது.

* முஸ்லிம் உதவி சங்கங்களும், கிறிஸ்துவ உதவி சங்கங்களும் கூடுதலாக துவங்கப்பட்டிருக்கிறது.

* 2023-ஆம் ஆண்டிலிருந்து இதுவரை, 56 கல்வி நிறுவனங்களுக்கு மொழிவாரிச் சிறுபான்மை அந்தஸ்தும், 103 கல்வி நிறுவனங்களுக்கு மதச்சார்பு சிறுபான்மை அந்தஸ்தும் வழங்கப்பட்டிருக்கிறது.

பதிவு பெற்ற வக்பு நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு, சிறுபான்மையினருக்கு மட்டுமல்ல, பட்டியலின - பழங்குடியின மக்கள், பிற்படுத்தப்பட்ட - மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள், உழவர்கள், நெசவாளர்கள், உழைப்பாளர்கள், மகளிர், மாணவர்கள், குழந்தைகள், பாட்டாளித் தோழர்கள் என்று சமூகத்தின் அனைத்துத் தரப்பட்ட மக்களுக்கும் பார்த்துப் பார்த்து நலத் திட்டங்கள் இந்த அரசு செயல்படுத்திக் கொண்டு வருகிறது!

நாள்தோறும் நலத் திட்டங்கள், திறப்பு விழாக்கள் - தொடக்க விழாக்கள் என்று மக்களுக்கான அரசாகச் செயல்படுவதால்தான், மக்களாகிய நீங்களும் எங்களுக்குத் தொடர்ந்து வெற்றியைக் கொடுக்கிறீர்கள்.

திட்டங்களை வழங்குவதோடு - அனைத்து மக்களுக்குமான பாதுகாப்பு அரணாக திராவிட முன்னேற்றக் கழகம் செயல்பட்டு வருகிறது என்பதை நம்முடைய இனிகோ அவர்கள் பெருமையோடு குறிப்பிட்டுச் சொன்னார்! மற்றவர்களும் அதை நினைவுபடுத்தி இருக்கிறார்கள். குறிப்பாக, சிறுபான்மையினரின் உரிமைகளையும், நலன்களையும் பாதுகாக்க இந்த அரசு உறுதியோடு செயல்பட்டு வருகிறது.

இன்றைக்கு ஒன்றியத்தை ஆளும் பா.ஜ.க. அரசு, சிறுபான்மை மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் அரசாக இருக்கிறது. சிறுபான்மையினருக்கு இழைக்கப்பட்டுள்ள கொடுமைகளை எல்லாம் நான் விரிவாக விவரிக்க வேண்டிய அவசியமில்லை.

அந்தக் கொடுமைகளை எதிர்க்கும் - தடுக்கும் காவல் அரணாக தி.மு.க. தொடர்ந்து செயல்படும் என்ற உறுதியை இந்த நேரத்தில் வழங்குகிறேன்.

சிறுபான்மை மக்களை அச்சுறுத்தும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக வலிமையான போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தியது, தி.மு.க! ஆனால், அந்தச் சட்டத்துக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் வாக்களித்த கட்சி, அ.தி.மு.க! இப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் திரு. பழனிசாமி அவர்கள், அதற்கு ஆதரவாக எப்படியெல்லாம் பேசினார் என்று உங்களுக்கு நினைவிருக்கும்.

ஒன்றிய பா.ஜ.க அரசைப் பொறுத்தவரை, மதச்சார்பின்மை என்ற சொல்லையே அரசியலமைப்புச் சட்டத்தில் இருந்து நீக்கத் துடிக்கிறார்கள். அந்தச் சொல்லை நீக்க முடியவில்லை என்றால், அரசியலமைப்புச் சட்டத்தையே நீர்த்துப் போக வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

சமூக நல்லிணக்கத்தின் அடையாளமாக திகழும் அண்ணல் காந்தியடிகளின் படத்தை - சம உரிமைத் தத்துவத்தின் அடையாளமாக இருக்கும் புரட்சியாளர் அம்பேத்கர் படத்தை - நாடாளுமன்ற அமைச்சகமே புறக்கணிக்கும் அளவிற்கு மதவாதம் ஒன்றியத்தில் ஆட்சி செலுத்துகிறது.

நல்லிணக்க இந்தியாவில் இப்படிப்பட்ட பிளவுவாத சக்திகளுக்கு ஒருபோதும் இடமில்லை. அதனால்தான், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் பா.ஜ.க.வுக்குப் பெரும்பான்மை பலத்தை அளிக்கவில்லை. ஆனாலும் அவர்கள் திருந்தவில்லை! அதுதான் வருத்தமாக இருக்கிறது.

ஆனால், மக்களின் ஒற்றுமை - ஜனநாயகச் சக்திகளின் அணித் திரட்சி அவர்களுக்குக் கடிவாளம் போட்டிருக்கிறது. அதனால், "ஒரே நாடு - ஒரே தேர்தல்" என்று சொல்லி, ஒற்றுமை இந்தியாவை சிதைத்து, ஒற்றை இந்தியாவை உருவாக்கப் பார்க்கிறார்கள்.

ஒற்றை மதம் - ஒற்றை மொழி - ஒற்றைப் பண்பாடு ஆகியவற்றின் தொடர்ச்சியாக, ஒரே கட்சி - ஒரே தலைவர் என்ற ஒற்றை எதேச்சாதிகார முடிவை உருவாக்க நினைக்கிறார்கள். ஆனால், மக்கள் பற்றும் - நாட்டுப் பற்றும் உள்ள ஒவ்வொரு இந்தியரும் இதற்கு எதிராக இருப்பார்கள்.

நாடு நல்லவர்களின் கைகளில் பாதுகாப்பாக இருக்கும்! அனைத்து மக்களும் ஒற்றுமையாக - சமத்துவமாக வாழும் நாள் நிச்சயம் விடியும்! சிறுபான்மையினர் உரிமைக்காக திராவிட முன்னேற்றக் கழகம் எந்தவித சமரசமும் இல்லாமல் போராடும் என்ற உறுதியை நான் மீண்டும் அளிக்கிறேன்.

"உங்கள் செயல் அனைத்தும் அன்புமயமாக இருக்க வேண்டும்! உங்கள் மீது அன்பாக இருப்பதைப் போலவே அடுத்தவர் மீதும் அன்பாக இருங்கள்!" - என்ற இயேசு பெருமானின் மொழிகளைச் சொல்லி, அனைவருக்கும் மீண்டும் என் அன்பான கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்" எனத் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+