தியாகராய நகர் தேர்தல் முடிவுகள் LIVE: புஸ்ஸி ஆனந்த் முன்னிலை.. தவெகவிற்கு சாதகமாகிறதா?
சென்னை: 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் வரலாற்றிலேயே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய தொகுதிகளில் தியாகராய நகர் சட்டமன்ற தொகுதி ( திநகர்) இருக்கிறது. தமிழ்நாட்டின் மிகப்பெரிய வணிக மையம் தி நகர் தான். இங்கு அரசியல் அதிகாரத்தை பிடிப்பதில் அதிமுக, திமுகஇடையே கடும் போட்டி இருக்கும். இந்த முறை தவெகவின் புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் இருக்கிறார்.
தி நகர் தொகுதியில் திமுக சார்பில் ராஜா அன்பழகன் களம் இறங்கினார். மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ ஜெ. அன்பழகனின் மகனான இவருக்கு, தந்தை மீதுள்ள அனுதாபமும், திமுக-வின் பாரம்பரிய வாக்கு வங்கியும் பக்கபலமாக இருந்தன. அதிமுக சார்பில் பி. சத்தியநாராயணன் (எ) டி.நகர் சத்யா களம் இறங்கி உள்ளார். முன்னாள் எம்.எல்.ஏ-வான இவர், தொகுதியில் தனக்குள்ள தனிப்பட்ட செல்வாக்கையும், அதிமுக-வின் 'இரட்டை இலை' பலத்தையும் நம்பிக் களமிறங்கினார்.

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிடும் புஸ்ஸி ஆனந்த், இந்தத் தேர்தலின் மிகப்பெரிய 'கேம் சேஞ்சர்' ஆகப் பார்க்கப்படுகிறார். இளைஞர்களின் வாக்குகள் தனக்கு கிடைக்கும் என்று வெகுவாக நம்புகிறார்..
கடைசியாக நடந்த மூன்று தேர்தல்களில் டி.நகர் கொடுத்த தீர்ப்புகள் மிகவும் சுவாரஸ்யமானவை ஆகும். 2011 தேர்தலை பொறுத்தவரை அதிமுக-வின் வி.பி. கலைராஜன் சுமார் 75,883 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் செல்லகுமாரை சுமார் 32,000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.
2016 தேர்தலை பொறுத்தவரை அதிமுக சார்பில் களம் கண்ட பி. சத்தியநாராயணன் (சத்யா) 53,207 வாக்குகள் பெற்று, மிகக் குறைந்த வித்தியாசத்தில் திமுக வேட்பாளரை வென்றார். ஆனால் 2021 தேர்தல் முடிவுகள் தலைகீழாக மாறின. திமுக-வின் ஜெ. கருணாநிதி 56,035 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக-வின் சத்யா வெறும் 137 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியைத் தவறவிட்டது தமிழகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தது.
2026 தேர்தலில் வாக்கு சதவீதம் பெரிய அளவில் உயர்ந்துள்ளது.தொகுதியில் மொத்தம் 1,32,639 பேர் வாக்களித்துள்ளனர். அதில் ஆண்கள் 64,192 பேர், பெண்கள் 68,428 பேர் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் 19 பேர் உள்ளனர். இதில் பெண்களின் வாக்காளர் பங்கேற்பு அதிகமாக இருந்தது மொத்த வாக்குப்பதிவு சதவீதம் 83.55% ஆக பதிவாகியுள்ளது.
இன்று காலை 8 மணி முதல் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 738 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார். திமுக இரண்டாம் இடத்திலும். அதிமுக 3வது இடத்திலும் உள்ளதாக கூறப்படுகிறது












Click it and Unblock the Notifications