"முதல்வர்" நீக்கம்.. கேரளாவில் ஓட்டு எண்ணிக்கைக்கு முன்பே தோல்வியை ஒப்புக்கொண்ட பினராயி விஜயன்?
திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று விறுவிறுப்பாக ஓட்டு எண்ணிக்கை நடந்து வருகிறது. இந்நிலையில் தான் ஓட்டு எண்ணிக்கைக்கு முன்பே பினராயி விஜயன் தனது சமூக வலைதள பக்கத்தில் 'முதல்வர்' என்பதை நீக்கி உள்ளார். இதனால் வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே அவர் தோல்வியை ஒப்புக்கொண்டுவிட்டாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
கேரளாவில் கடந்த 10 ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணியின் ஆட்சி நடக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பினராயி விஜயன் முதல்வராக செயல்பட்டு வந்தார். இந்நிலையில் தான் கடந்த மாதம் 9 ம் தேதி தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.

தொடக்கம் முதலே காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. இருப்பினும் விடாமல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி விரட்டி செல்கிறது.
இந்நிலையில் தான் வாக்குப்பதிவுக்கு முன்பாகவே அவர் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடக பக்கங்களில் பயோவில் 'கேரள முதலமைச்சர்' என்பதை நீக்கிவிட்டு 'பொலிட் பீரோ உறுப்பினர் கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆஃப் இந்தியா (மார்க்சிஸ்ட்)' என மாற்றியுள்ளார் பினராயி விஜயன். இதனால் அவர் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாகவே தோல்வியை ஒப்புக்கொண்டாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இருப்பினும் இந்த குற்றச்சாட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மறுத்துள்ளது. இதுபற்றி அந்த கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணனின் மகன் பினீஷ் கொடியேரி, "தேர்தல் அறிவிக்கப்பட்டதும் மார்ச் 16ம் தேதியே முதல்வர் பினராயி விஜயன் தனது பயோவில் பொலிட்பீரோ உறுப்பினர் என மாற்றம் செய்துவிட்டார்.
தேர்தல் நடைமுறை விதிகள் அமலானதும் இந்த மாற்றத்தை செய்துவிட்டார். வாக்கு எண்ணிக்கை முடிவுகளுக்கு பயந்து இப்போது முதலமைச்சர் என்ற பயோவை திருத்தி கட்சி பதவியை மட்டும் குறிப்பிட்டுள்ளதாக கூறுவது தவறான தகவல்" என்றார்.
கேரளாவில் மீண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்று அவர்கள் கூறி வந்தனர். ஆனால் எக்ஸிட் போல் முடிவுகள் காங்கிரஸ் கூட்டணிக்கு சாதகமாக வந்தது. அதன்பிறகு இன்றைய வாக்கு எண்ணிக்கையின் தொடக்க நிலையிலும் காங்கிரஸ் கூட்டணி தான் முன்னிலை வகித்து வருகிறது.












Click it and Unblock the Notifications