விசிகவில் வரும் மெகா மாற்றம்..சிறுத்தைகளுக்கு திருமா கொடுத்த டாஸ்க்! மும்பையிலிருந்து பறந்த அட்வைஸ்!
சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மறு சீரமைப்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார் அக்கட்சியின் தலைவரான தொல்.திருமாவளவன். தற்போது மகாராஷ்டிரா தேர்தல் பிரச்சாரத்தில் அவர் ஈடுபட்டிருக்கும் நிலையில் கட்சியினருக்கு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
தமிழகம் முழுவதும் நிர்வாகிகளையும் அடிப்படை கட்டமைப்புகளையும் கொண்டிருக்கும் கட்சிகளில் ஒன்று விடுதலை சிறுத்தைகள். இந்த கட்சி தான் கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியலில் அக்கட்சி தான் பேசு பொருளாக இருக்கிறது.

மது ஒழிப்பு மாநாட்டில் அதிமுகவுக்கு அழைப்பு, நடிகர் விஜய் உடன் கூட்டணி என பல்வேறு யூகங்கள் அந்த கட்சியை சுற்றி சுழன்று வருகிறது. அதே நேரத்தில் திமுகவுடன் தான் கூட்டணி என உறுதியாக தெரிவித்திருக்கிறார் திருமாவளவன். அதே நேரத்தில் சட்டமன்ற தேர்தல் கருத்தி கொண்டு கட்சியில் அடிப்படை கட்டமைப்பு மறுசீரமைப்பு பணிகளையும் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் கட்சியின் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொண்டு இருக்கும் கட்சியினருக்கு முக்கிய அறிவுறுத்தல்களை அவர் வழங்கியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," கட்சியின் மறுசீரமைப்புப் பணிகளுக்கான ஒருங்கிணைப்புக் குழுக்களின் பட்டியல் கடந்த 13.11.2024 அன்று மும்பையிலிருந்து வெளியிட நேர்ந்தது. அதில், சில சட்டமன்றத. தொகுதிகள் விடுபட்டிருந்தன. அத்துடன், சில முன்னணி தோழர்களின் பெயர்கள் அப்பட்டியலில் இடம்பெற வேண்டுமென்கிற கோரிக்கைகள் வந்தன. சில தோழர்கள், தங்களுக்கு ஏதுவான பகுதிகளில் பணியாற்றும் வகையில் மாற்றம் கோரியிருந்தனர்.
அவற்றைக் கருத்தில் கொண்டு சில மாற்றங்களுடன் திருத்தப்பட்ட பட்டியல் சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது. இதுவே இறுதியானது. இனி மாற்றங்களைச் செய்வதற்கான சூழல் இல்லை. எனவே, ஒருங்கிணைப்புப் பட்டியலில் இடம் பெற்றுள்ள முன்னணி தோழர்கள் உடனடியாகக் களமிறங்கிட வேண்டுகிறேன். பொறுப்புகளுக்குரிய விண்ணப்பங்களைப் பெறுவதற்கான கடைசி நாளாக 'நவம்பர் -20' என ஏற்கறவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போதைய சூழலில் காலநீட்டிப்புத் தேவையென்பதை அறியமுடிகிறது. எனவே, நடைமுறை சிக்கல்களை உணர்ந்து நவம்பர்- 30 வரையிலும் விண்ணப்பம் செய்வதற்குரிய காலம் நீட்டிக்கப்படுகிறது.
தற்போதுள்ள மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட மாவட்டப் பொறுப்பாளர்களுடன் கலந்தாய்வு செய்து இப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். ஒருங்கிணைப்புக் குழுவைச் சார்ந்தோர் பின்வரும் பணிகளை ஆற்றுவதில் குறிப்பாகக் கவனம் செலுத்த வேண்டும்.
அவை:
1) கட்சி மற்றும் துணைநிலை அமைப்புகளுக்குரிய பொறுப்புகளுக்கான விண்ணப்பங்களைப் பெறுதல்.
2) 'தமிழ்மண்' இதழுக்கான 'வாழ்நாள் கட்டணம்' செலுத்தப்பட்ட சான்றாவணம் பெறுதல். (வரைவோலை (DD), அல்லது க்யூ ஆர் கோட் மூலம் வங்கியில் செலுத்தியதற்கான ஒப்புகைச்சீட்டு)
3) கட்சி மற்றும் துணைநிலை அமைப்புகளுக்கான பொறுப்புகளுக்குரிய 'விண்ணப்பக் கட்டணம்' செலுத்தப்பட்ட சான்றாவணம் பெறுதல்.( மேற்கண்டவாறு)
4) விண்ணப்பம் செய்வோர் கட்சிக்கு தாங்கள் ஆற்றிய பங்களிப்புத் தொடர்பாக அளிக்கும் இன்னபிற ஆவணங்களைப் பெறுதல்.
மேற்கண்ட பணிகளை ஆற்றுவதற்கு தற்போதைய மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயல்திட்டங்களை வரையறுத்திட வேண்டும். கட்சி மற்றும் துணைநிலை அமைப்புகளுக்கான மாநிலப் பொறுப்புகள், மாவட்டப் பொறுப்புகள், ஒன்றியப் பொறுப்புகள் ஆகியவற்றுக்கு விண்ணப்பங்களைப் பெறவேண்டும். ஊராட்சி செயலாளர் என்பது நமது கட்சியில் நியமிக்கப்படுவதில்லை. எனவே, அப்பொறுப்புக்கு விண்ணப்பம் பெற வேண்டியதில்லை.
மண்டலப் பொறுப்புகளுக்கு விண்ணப்பங்களைப் பெற வேண்டும். தலித் அல்லாதோர், இளையோர் மற்றும் பெண்களிடம் விண்ணப்பங்களைப் பெறுவதில் ஒருங்கிணைப்புக் குழு கூடுதல் கவனம் செலுத்திட வேண்டும்.கட்டணங்களை தமிழ்மண் இதழுக்கான வங்கிக் கணக்கில் செலுத்த ஏதுவாக "க்யூ ஆர் கோட்" அனுமதி பெறப்பட்டுள்ளது. அது எனது முகநூல் மற்றும் எக்ஸ் தளம் ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்படும். விண்ணப்பம் செய்யும் தோழர்கள் அதனைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். கட்டணங்களைத் தமிழ்மண் வங்கிக் கணக்கில் மட்டும் செலுத்த வேண்டும்.
ஒருங்கிணைப்புக் குழுவினருக்கு இயக்கத் தோழர்கள் அனைவரும் முழுமையான ஒத்துழைப்பை நல்கி, மறுசீரமைப்புப் பணிகளைத் தீவிரப்படுத்திட வேண்டும். கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்துவோம்!
களத்தில் ஒருங்கிணைந்து கடமையாற்றுவோம்!" என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications