தூத்துக்குடி, நெல்லை, குமரிக்கு வந்த சோதனை.. விரட்டி விரட்டி மிரட்டுது மழை.. நாலாபக்கம் பறந்த ஆர்டர்
சென்னை: தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நாளை 30, 31-ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளது.
2 நாட்களுக்கு முன்பு, சென்னை வானிலை ஆய்வு மையம் ஒரு அறிவிப்பு வெளியிட்டிருந்தது.. அதில், "தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசைக்காற்றில் வேக மாறுபாடு ஏற்பட்டுள்ளதால் தமிழக கடலோர மாவட்டங்களில் சிலஇடங்களிலும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்யக்கூடும்.

மிதமான மழை: 29, 30-ம் தேதிகளில் தென் தமிழகத்தில் சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல, வரும் 31-ம் தேதி முதல் ஜனவரி 2-ம் தேதி வரை தமிழகத்தில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
குறிப்பாக, வரும் 30, 31-ம்தேதிகளில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் லேசான மழை பெய்யும்" என்று அறிவித்திருந்தது.
அறிவிப்பு: இந்த அறிவிப்பானது, தென்மாவட்ட மக்களுக்கு மிகுந்த கலக்கத்தை தந்து வருகிறது. காரணம், கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த பேய்மழை பாதிப்பிலிருந்து இன்னமும் மக்கள் மீளவில்லை.
தென் மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத மழையால், வீடு, உடமைகளை இழந்து பெரும் பாதிப்புக்கு மக்கள் ஆளாகியிருக்கிறார்கள்.. தூத்துக்குடி, நெல்லையில் இயல்பு நிலையே திரும்பவில்லை... வெள்ளநீரும் முழுமையாக வடியவில்லை.. அதற்குள் தென் மாவட்டங்களில் மறுபடியும் கனமழை என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது, மக்களை கலங்கடித்து வருகிறது.
உயர் அதிகாரிகள்: எனினும், மாவட்ட நிர்வாகங்கள் உஷாராகி உள்ளன.. 4 மாவட்டங்களிலும் பேரிடர் மேலாண்மை வீரர்கள், தீயணைப்பு வீரர்கள், அரசு அதிகாரிகள், ஊழியர்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட தயாராக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது..
மேலும், அனைத்து துறை அதிகாரிகளும், ஊழியர்கள் 30, 31 மற்றும் 1-ந் தேதிகளில் அலுவலகங்களில் இருக்க வேண்டும் என்றும் யாரும் விடுப்பு எடுக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
நெல்லையில் கடந்த 17 மற்றும் 18-ம் தேதிகளில் பெய்த அதி கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பொதுமக்கள் அவதிக்குள்ளாகிவிட்டதால், தற்போது, தாமிரபரணி ஆறு உள்ளிட்ட பல்வேறு ஆறுகள், அணைகளை தீவிரமாக கண்காணிக்குமாறு பொதுப் பணித்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. எனினும், மீண்டும் மழை என்ற எச்சரிக்கை அறிவிப்பு வந்துள்ளதால், தென்மாவட்ட மக்கள் அச்சத்தில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications