தோராய பட்டா வைத்திருந்தால் போதுமா? தூய பட்டா அவசியம்.. 45 நாட்களில் நிலம் உள்ளவர்கள் செய்ய வேண்டியது
சென்னை: பட்டாக்களில் பல வகைகள் இருந்தாலும், பொதுவாக அதிகம் பேசப்படுவது தோராய பட்டா மற்றும் தூய பட்டா ஆகும். இந்த இரண்டும் அடிப்படையில் ஒரே வகையைச் சேர்ந்தவை என்றாலும், துல்லியத்திலும் சட்ட உறுதிப்பாட்டிலும் வேறுபாடு உள்ளது. அது என்ன கூறுபாடு, தூய பட்டா பெறுவது கடினமான விஷயமா? இவைகளை பற்றி இங்கே சுருக்கமாக தெரிந்து கொள்வோம்.
பட்டா ஆவணம் இல்லாமல் நிலம் தொடர்பான எந்த பரிவர்த்தனையும் சட்டப்படி பதிவு செய்ய முடியாது. வங்கிகளில் அவசர தேவைக்காக கடன் பெறவும், அரசு வழங்கும் நிலம் சார்ந்த நலத்திட்டங்களின் பயன்களை பெறவும் பட்டா அவசியம். அதேபோல், நிலத்தின் மீது வேறு ஒருவர் உரிமை கோரினால், அதை சட்டப்படி எதிர்க்கவும் பட்டா முக்கிய ஆவணமாகும்.

பட்டாவில் தோராய பட்டா, தூய பட்டா என்றால் என்ன?
அரசு ஒரு குறிப்பிட்ட பகுதியில் நத்தம் அளவை செய்து வைத்திருக்கும். அந்த இடங்களில் நிலம் இல்லாதவர்களாக இருந்தாலும், அல்லது அனுபவ முறையில் ஏற்கனவே பல வருஷங்களாகவே அங்கு வசித்து வருபவர்களாக இருந்தாலும், அவர்களுக்கு அந்த இடத்தில் வசிப்பதற்கான உரிமையை பதிவு செய்ய அரசு பட்டா வழங்குகிறது.
நத்தம் நிலங்களில் உள்ள வீடுகள், தெருக்கள், குளங்கள், ஏரிகள் போன்றவற்றை பிரித்து வரைபடம் தயாரித்து, புதிய சர்வே எண்கள் வழங்கி கொடுக்கப்படும் இந்த பட்டாவையே தோராய பட்டா என்கிறோம். இது நத்தம் நிலவரி திட்டத்தின் ஒரு பகுதியாகும். இதன் மூலம் அந்த நிலங்கள் வரி விதிப்புக்குள் கொண்டு வரப்படுகின்றன.
45 நாட்களுக்கள் பிழை திருத்தம்
தோராய பட்டா வழங்கும்போது, சர்வே செய்து அளவிடப்பட்டாலும், அதில் பெயர், நில அளவு, எல்லை போன்றவற்றில் சில பிழைகள் இருக்க வாய்ப்பு உண்டு. அதனால்தான் இதை தற்காலிக அல்லது திருத்தத்துக்குரிய பட்டா என்கிறார்கள்... இந்த பட்டா கிடைத்தவுடன், அதில் ஏதாவது தவறுகள் இருந்தால், 45 நாட்களுக்குள் தாசில்தார் ஆபீசுக்கு சென்று பிழைகளை திருத்தி கொள்ள வேண்டும்... இந்த குறிப்பிட்ட கால அவகாசத்தில்தான் அரசு பிழைகளை சரிசெய்ய வாய்ப்பு அளிக்கிறது.
இந்த திருத்தங்கள் அனைத்தும் முடிந்து, நிலத்தின் அளவு, வரைபடம், எல்லை, உரிமையாளர் பெயர் ஆகியவை முழுமையாக சரியாக இருப்பது உறுதி செய்யப்பட்ட பிறகு வழங்கப்படும் பட்டாவே தூய பட்டா ஆகும். சிறிய பிழையும் இல்லாமல், துல்லியமான நில அளவையுடன் வழங்கப்படும் பட்டா என்பதால் இதற்கு சட்ட மதிப்பு சற்று அதிகமாகவே உண்டு.
தூய பட்டா - பழைய பட்டா, சிட்டா
தூய பட்டா பெறுவது கடினமான விஷயம் அல்ல. நிலத்தின் உரிமை தெளிவாக இருந்தால், தேவையான ஆவணங்கள் முறையாக இருந்தால், எளிதாகவே கிடைக்கும். ஆனால் நிலத்தில் வழக்கு நிலுவையில் இருந்தால், வாரிசு தகராறு இருந்தால், அரசு நிலம் என்ற சந்தேகம் இருந்தால் அல்லது எல்லை பிரச்சினை இருந்தால் மட்டும் தாமதம் ஏற்படலாம்.
தூய பட்டா பெற நிலத்தின் விற்பனை பத்திரம் அல்லது வாரிசு ஆவணம், பழைய பட்டா, சிட்டா, அடங்கல், நில அளவு வரைபடம், வரி ரசீது மற்றும் அடையாள ஆவணங்களுடன் தாலுகா அலுவலகத்தில் அல்லது தமிழ்நாடு e-Services இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்...
நத்தம் நிலங்கள்
விண்ணப்பத்திற்கு பிறகு, விஏஓ மற்றும் வருவாய் ஆய்வாளர் நிலத்தை ஆய்வு செய்து விசாரணை நடத்துவார்கள். யாருமே எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில், வருவாய் அதிகாரி உத்தரவிட்டு தூய பட்டா வழங்கப்படும்.
பிரச்சினை இல்லாத நிலங்களுக்கு பொதுவாக 30 முதல் 60 நாட்களுக்குள் தூய பட்டா கிடைக்கும். கூட்டு உரிமை நிலம் அல்லது வழக்கு உள்ள நிலம் என்றால், அந்த சிக்கல்கள் தீர்ந்த பிறகே தூய பட்டா வழங்கப்படும்...!!












Click it and Unblock the Notifications