வாரிசுகளுக்கே அரியணையா? உரிமைகளைத் தொலைத்தவர்களே உரிமை மீட்பு மாநாடு நடத்துகிறார்கள்..தமிழிசை தாக்கு
சென்னை: உரிமைகளைத் தொலைத்தவர்களே உரிமை மீட்பு மாநாடு நடத்துகிறார்கள் என்று திமுக இளைஞரணி மாநாடு குறித்து தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கடுமையாக விமர்சித்து உள்ளார்.
திமுக இளைஞரணி 2-வது மாநில மாநாடு சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் இன்று நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் லட்சக்கணக்கானவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக இந்த மாநாட்டை திமுக நடத்த உள்ளது அரசியல் ரீதியாகவும் மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இதனிடையே, திமுக இளைஞரணி மாநாடு குறித்து தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கடுமையாக விமர்சித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். தமிழிசை சவுந்தரராஜன் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-

இளைஞரணி மாநாடாம் ....
பிரம்மாண்ட முன்னேற்பாடாம்....
முந்தைய நாளே முக்கியமானவரின் மேற்பார்வையாம்...
தம்பிகளை காண தனி விமானம் மூலம் சென்ற முக்கியமானவருக்கு....
அன்று முந்தைய நாளே மழைக்கான முன் அறிவிப்பு வந்தும் மக்களைக் காக்க
முன்னேற்பாடு செய்ய செல்வதற்கு தனி விமானம் கிடைக்கவில்லையா?
என்று எங்கோ கேட்கிறது ஒரு குரல்....
இன்று உதயமானவரை முன்னிலைப்படுத்த முந்திச் செல்லும் முக்கியமானவர்....
இதயத்தோடு தத்தளித்தவர்களை காக்க முந்திச் செல்லவில்லையே
ஏன்? என்று கேட்கிறது அதே குரல்....
இது ஆள்பவர்களுக்கு தகுதியா என்று கேட்டால்?
ஆளுநர்களுக்கு தகுதி இல்லை என்பார்கள்....
ஆனால் ஜனநாயகத்தில்
ஆளாளுக்கும் கேள்வி கேட்கும் தகுதி இருக்கிறது என்று உரக்கச் சொல்கிறது அதே குரல்...
உரிமை மீட்பு மாநாடாம்?
காவிரி உரிமையை தொலைத்தது யார்?
கச்சத்தீவை தாரைவார்த்தது யார்?
ஜல்லிக்கட்டு உரிமையை இழந்தது யார்?
கல்வி உரிமையை பறிகொடுத்தது யார்?
நீட் தேர்வு வர ஆரம்பித்தது யார் காலத்தில்?
உரிமைகளைத் தொலைத்தவர்களே இன்று உரிமை மீட்பு மாநாடு நடத்துகிறார்களாம்..
வாரிசுகளுக்கே அரியணையா?
இவர்களிடமிருந்து நம் உரிமையை மீட்டெடுப்பது யார்?
(தி)க்கு (மு)க்காடும் (க)ண்மணிகள்...." என கவிதை நடையில் தனது எக்ஸ்தளத்தில் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications