ரூ.28 லட்சம் கோடி.. ஈரான் போரை முடிக்க டிரம்ப் போட்ட டீல்.. சொந்த கட்சிக்குள்ளேயே சப்போர்ட் இல்லை!
ஜெனிவா: அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நீண்டகாலமாக நிலவி வரும் பதற்றத்தைத் தணிக்க ஒரு புதிய இடைக்கால அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. பிரான்சில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டின் போது, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்த ஒப்பந்தத்தை ஒரு மிகப் பெரிய வெற்றியாக அறிவித்தார். இந்த ஒப்பந்தம் எதைச் சாதித்துள்ளது, இதில் உள்ள சிக்கல்கள் என்ன என்பதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.
அமெரிக்கா ஈரான் இடையே கடந்த பல மாதங்களாக நீடித்து வந்த போர் இப்போது முடிந்துள்ளது. இதனால் மத்திய கிழக்கில் அமைதி திரும்பியுள்ளது. இருப்பினும், இதை நிரந்தர அமைதி ஒப்பந்தம் எனச் சொல்லிவிட முடியாது. மேலும், அமெரிக்காவிலேயே கூட இந்த ஒப்பந்தத்திற்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இந்த ஒப்பந்தத்தில் என்ன இருக்கிறது.. இதைப் பலரும் எதிர்க்கக் காரணம் குறித்து நாம் பார்க்கலாம்!

ஹார்முஸ்
இந்த ஒப்பந்தத்தின் மிக முக்கியமான மற்றும் உடனடி பலன், உலக வர்த்தகத்திற்கு மிக அவசியமான ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்பட்டதாகும். போர் பதற்றத்தால் மூடப்பட்டிருந்த இந்த கடல் வழிப்பாதை இப்போது கப்பல் போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டுள்ளது. இது அமெரிக்கா ஈரானுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த உலக நாடுகளுக்கும் நன்மை தரும்.
அதிலும் குறிப்பாகக் கச்சா எண்ணெய் இறக்குமதியைப் பெருமளவுக்கு நம்பி இருக்கும் இந்தியா, சீனா போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு இது மிகப் பெரியளவில் உதவும். கச்சா எண்ணெய் எண்ணெய் விலை கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், ஹார்முஸ் திறக்கப்பட்ட பிறகே அதன் விலை குறையத் தொடங்கியுள்ளது. போர் காலகட்டத்தில் கிட்டத்தட்ட 120 டாலர் வரை போன கச்சா எண்ணெய் விலை, இப்போது 77 டாலராக சரிந்துள்ளது.
நிரந்தர அமைதி ஒப்பந்தம் இல்லை
அதேநேரம் இது நிரந்தர அமைதி ஒப்பந்தம் இல்லை.. தற்காலிக அமைதி ஒப்பந்தம் மட்டுமே! இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வந்த நேரடி மோதல்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. அடுத்த 60 நாட்களுக்குள் ஒரு நிரந்தர அமைதி ஒப்பந்தத்தை எட்டுவதற்கு இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்த இந்த ஒப்பந்தம் வழிவகை செய்கிறது. இந்த பேச்சுவார்த்தைகள் நாளை வெள்ளிக்கிழமை ஜெனிவாவில் தொடங்க உள்ளன.
ஈரான் ஒருபோதும் அணு ஆயுதங்களைத் தயாரிக்காது என்பதை இந்த ஒப்பந்தம் உறுதி செய்யும் என்று ட்ரம்ப் கூறுகிறார். இதற்காக, ஈரான் தன்னிடம் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் அளவைக் குறைக்க ஒப்புக்கொண்டுள்ளது. இது சர்வதேச அணுசக்தி முகமையின் கண்காணிப்பின் கீழ் நடைபெறும். இருப்பினும், இது ஒரு தற்காலிக ஏற்பாடு மட்டுமே. யுரேனியத்தை எப்போது, எப்படிக் குறைப்பது என்பது போன்ற தொழில்நுட்ப விவரங்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. ஒபாமா காலத்தில் அணுசக்தி ஒப்பந்தம் செய்ய 20 மாதங்கள் ஆனது, ஆனால் ட்ரம்ப் நிர்வாகம் இதை 60 நாட்களில் முடிக்கத் திட்டமிட்டுள்ளது. இது ஒரு மிகப் பெரிய சவாலாகப் பார்க்கப்படுகிறது.
ஈரான் மறுசீரமைப்பு திட்டம்
அதேநேரம், இந்த ஒப்பந்தத்தில் மிகவும் சர்ச்சைக்குரிய விஷயம் ஈரானின் மறுசீரமைப்பு திட்டமாகும். ஈரானை மீண்டும் கட்டியெழுப்ப சுமார் 300 பில்லியன் டாலர் மதிப்பிலான திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. என்ன தான் ஈரானுக்கு ஒரு பைசா கூட தர மாட்டோம் என அதிபர் ட்ரம்ப் கூறினாலும், ஒப்பந்தத்தின்படி அமெரிக்கா தனது நட்பு நாடுகளுடன் இணைந்து இந்த நிதியைத் திரட்ட உதவும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த பணம் எங்கிருந்து வரும், யார் கொடுப்பார்கள் என்பதில் இன்னும் தெளிவில்லை.
இந்த ஒப்பந்தம் போரை நிறுத்தியுள்ளதே தவிர, இன்னுமே சில மிக முக்கியமான சில கேள்விகளுக்கு விடை காணவில்லை.. குறிப்பாக ஈரான் ஆதரவு அளிக்கும் ஹிஸ்புல்லா போன்ற ஆயுதக் குழுக்களுக்கு ஈரான் தொடர்ந்து நிதி வழங்குமா என்பது குறித்து ஒப்பந்தத்தில் தெளிவான விளக்கம் இல்லை. மேலும், ஈரானின் ஏவுகணைத் திறனைக் கட்டுப்படுத்துவது குறித்து எந்த உறுதியான முடிவும் எடுக்கப்படவில்லை.
அமெரிக்காவிலும் எதிர்ப்பு
அமெரிக்காவிலும் கூட இதற்கு முழுமையான ஆதரவு இல்லை. குறிப்பாக டிரம்பின் குடியரசு கட்சியினரே இந்த ஒப்பந்தத்தை விமர்சிக்கின்றனர். ஈரானுக்கு அதிக சலுகைகளை வழங்கிவிட்டு, மிகக் குறைவான நன்மைகளையே அமெரிக்கா பெற்றுள்ளது என்பது அவர்கள் கருத்து. ஹார்முஸ் ஜலசந்தியை வைத்து மிரட்டினால் அமெரிக்கா பணிந்துவிடும் என்ற தவறான பிம்பத்தை இது ஏற்படுத்துவதாகவும் பலரும் சாடினர்.
இந்த ஒப்பந்தம் ஒரு 'முழுமையான அமைதி ஒப்பந்தம்' அல்ல.. மாறாக அமைதிக்கான ஒரு 'வாய்ப்பு' மட்டுமே. அடுத்த 60 நாட்கள் மிகவும் முக்கியமானவை. அதிபர் ட்ரம்ப் தனது வழக்கமான பாணியில், "60 நாட்களில் பேச்சுவார்த்தை வெற்றி பெறவில்லை என்றால், நாங்கள் மீண்டும் ஈரான் மீது குண்டுவீசத் தொடங்குவோம்" என்று எச்சரித்துள்ளார். எனவே, இந்த 60 நாள் காலக்கெடுவிற்குள் இரு நாடுகளும் ஒரு நிரந்தர உடன்படிக்கை ஏற்பட வேண்டும். இல்லையென்றால் மீண்டும் போர் வெடிக்கவே வாய்ப்புகள் அதிகம்!












Click it and Unblock the Notifications