தமிழ்த்தாய் வாழ்த்து ஒருமுறை.. தேசிய கீதம் 2 முறை.. இதில் தவறு இல்லை.. சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்!
சென்னை: சட்டசபையில் ஆளுநர் உரைக்கு முன்பும், ஆளுநர் உரை முடிவடைந்த பின்பும் என்று 2 முறை தேசிய கீதம் பாடப்பட்டதில் எந்த தவறும் இல்லை என்று சபாநாயர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்துள்ளார். ஜூன் 19, 22 மற்றும் 23 ஆகிய 3 நாட்கள் சட்டசபை கூட்டத்தொடர் நடக்கும் என்று கூறியுள்ள சபாநாயகர், குறுகிய கால கூட்டத்தொடர் என்பதால் 3 நாட்களும் வினா விடை நேரம் இருக்காது என்றும் கூறியுள்ளார்.
தமிழக சட்டசபைக் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியுள்ள நிலையில், அவையில் இரண்டு முறை தேசிய கீதம் பாடப்பட்டது குறித்து எழுந்துள்ள விவாதங்களுக்கு சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அவர்கள் தெளிவான விளக்கம் அளித்துள்ளார். சட்டசபை கூட்டத்தொடரின் தொடக்கத்தில் ஆளுநர் உரை முன்பும், ஆளுநர் உரை முழுமையாக முடிவடைந்த பின்பும் என்று 2 முறை தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

எவ்வித சட்ட விதிகளின் மீறலோ அல்லது தவறோ இல்லை என்று சபாநாயகர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். வழக்கமாக சட்டசபையில் ஆளுநர் உரைக்கு முன் தமிழ்த்தாய் வாழ்த்து மட்டுமே இசைக்கப்படும். ஆளுநர் உரை முடிவடைந்த பின் தேசிய கீதம் இசைக்கப்படும். ஆனால் இம்முறை தவெக அரசின் முதல் சட்டசபைக் கூட்டத்திலேயே சட்டசபை மரபு மாற்றப்பட்டுள்ளது.
தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் இசைக்கப்பட்ட பின், உடனடியாக தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இதன்பின் ஆளுநர் உரை முடிவடைந்த பின் இறுதியாக மீண்டும் தேசிய கீதம் 2வது முறையாக இசைக்கப்பட்டது. இந்த புதிய மரபு சர்ச்சையாகியது. இதுகுறித்து சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், 2 முறை தேசிய கீதம் இசைக்கப்பட்டதில் எந்த தவறும் இல்லை. பெரிய மரபு, நடைமுறை மாறவில்லை.
நமக்கு தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என்பதே நோக்கம். சட்டசபை கூட்டம் அமைதியாக நடந்து முடிந்ததற்காக ஆளுநருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். இந்த நடைமுறையே தொடரும். சட்டசபைக் கூட்டத்தில் 3 நாட்கள் நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. குறுகிய கால கூட்டத்தொடர் என்பதால் வினா விடை நேரம் 3 நாட்களும் இருக்காது என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications