சவுதியில் டிரைவர் வேலை! மாதம் 3,000 ரியால் சம்பளம்! ஏஜெண்ட்டை நம்பிய 3 பேர் நடுரோட்டில் தவிப்பு!
சென்னை: சவுதி அரேபியாவில் ஓட்டுநர் பணிக்காக திருச்சியை சேர்ந்த முகவரை நம்பிச் சென்ற மூன்று பேர் அங்கு நடுரோட்டில் தவித்து வருவதால், அவர்களை மீட்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் உதவியை நாடியுள்ளார் திமுக எம்.பி. கலாநிதி வீராசாமி.
சவுதியில் சிக்கித் தவிக்கும் 3 தமிழர்கள் யார் அவர்களை ஏஜெண்ட் எப்படி ஏமாற்றினார் என்பது குறித்து தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் கலாநிதி வீராசாமி.

''நாகப்பட்டினத்தைச் சேர்ந்த சீனிவாசனின் மகன் அறிவழகன், தஞ்சாவூரைச் சேர்ந்த பரமசிவத்தின் மகன் ராஜேஷ் கண்ணா மற்றும் ராமச்சந்திரனின் மகன் ராஜா, திருச்சியில் உள்ள ஏஜென்ட் மூலம் இம்மூவரும் ஓட்டுநர் வேலைக்காக சவுதி அரேபியாவுக்குச் சென்றார்கள்.
மேலும், இவர்களுக்கு உணவு மற்றும் தங்குமிடத்துடன் மாதத்திற்கு 3000 ரியால்கள் சம்பளம் வழங்குவதாக முகவர் உறுதியளித்தார். இருப்பினும், சவுதியை அடைந்த பிறகு, முதலாளிகளான அப்துல் ரஹ்மான் ரியாத் காஃபில் மற்றும் அப்துல் ரஹ்மான் மைத் அவர்களுக்கு மாதம் 1500 ரியால்கள் மட்டுமே சம்பளமாக வழங்கியிருக்கிறார்.
மேலும் அவர்களுக்கு சம்பளத்துடன் தங்குமிடம் மற்றும் உணவு வழங்க மறுத்துவிட்டனர். மேலும் சம்பளம் குறைக்கப்பட்டது, தங்குமிடம் மற்றும் உணவு வழங்க தவறியதை ஊழியர்கள் கேள்வி எழுப்பியபோது, முதலில், ராஜா தாக்கப்பட்டு மூன்று நாட்களுக்கும் மேலாக இருட்டு அறையில் அடைக்கப்பட்டார்.
பின்னர் மற்ற இருவரும் முதலாளியின் கையாட்களால் தாக்கப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்களின் பாஸ்போர்ட்கள் முதலாளியால் கைப்பற்றப்பட்டு, அவை இன்னும் முதலாளியின் பாதுகாப்பில் உள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை (14-05-2023), முதலாளிகளுக்கு பயந்து பாதிக்கப்பட்டவர்கள் ரியாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் தஞ்சம் கோரினர்.
ஆனால் அவர்கள் தொழிலாளர் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டனர். தொழிலாளர் நீதிமன்றம் இதனை விசாரிக்கப்படும் என்று உறுதி அளித்ததே தவிர, இடைக்கால நிவாரணம் எதுவும் வழங்கவில்லை. தற்போது, பாதிக்கப்பட்டவர்கள் சாலையில் ஆங்காங்கே மற்றும் மசூதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
எனவே, பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கை மற்றும் பாதுகாப்பு குறித்து அவர்களது குடும்பத்தினர் ஆழ்ந்த கவலையில் இருப்பதால், பாதிக்கப்பட்டவர்களை விரைவில் இந்தியா அழைத்து வர உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.'' இவ்வாறு வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர். கலாநிதி வீராசாமி கடிதத்தில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications