தமிழ்நாடு அமைச்சரவையில் திடீரென 3 சிறிய மாற்றங்கள்.. இலாக்காக்கள் மாற்றி அமைப்பு.. என்ன நடந்தது?
சென்னை: தமிழ்நாடு அமைச்சரவையில் சிறிய அளவிலான மாற்றங்கள் செய்யப்பட்டு உத்தரவு வெளியாகி இருக்கிறது. தமிழ்நாடு அமைச்சரவையில் 3 இலாக்காக்களை நிர்வாக ரீதியாக மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு ஆட்சி அமைத்து 8 மாதங்கள் ஆகிவிட்டது. இதுவரை அரசுக்கு எதிராக மிகப்பெரிய அளவில் அதிருப்திகள் வரவில்லை. இருப்பினும் ஆங்காங்கே சில விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.
சில அமைச்சர்கள் மிகவும் சிறப்பாக செயல்படுவதாக கூறப்பட்டு வரும் நிலையில், ஒரு சில அமைச்சர்களின் செயல்பாடுகள் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்றும் விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

அமைச்சரவை மாற்றம்
இப்படிப்பட்ட நிலையில்தான் தமிழ்நாட்டில் அமைச்சரவை இலாக்காக்களை நிர்வாக ரீதியாக மாற்றம் செய்து அரசு சார்பாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சர்க்கரை ஆலைகள் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் இருந்தது இருந்து வேளாண் துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஆர். எஸ். இராஜ கண்ணப்பனிடம் இருந்து வந்த நிலையில் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இலாக்கா மாற்றம்
சிறுபான்மை நலத்துறை அமைச்சரிடமிருந்து அயலக பணியாளர் கழகம் தொழிலாளர் நலத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த துறையை இதுவரை அமைச்சர் செஞ்சி கே. எஸ். மஸ்தான் கவனித்து வந்தார். இனி அமைச்சர் சி. வே. கணேசன் இதை கவனிப்பார் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. நிர்வாக ரீதியாக மட்டுமே இந்த இலக்காக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மற்றபடி இதற்கு பின் அரசியல் காரணங்கள் இல்லை.

மாற்றம் காரணம் என்ன
உதாரணமாக சர்க்கரை ஆலைகள் துறை தொழில்துறையிடம் இருப்பதை விட விவசாய துறையிடம் இருப்பதே சிறப்பானதாக இருக்கும். இது போன்ற விஷயங்களை கருத்தில் கொண்டு இந்த 3 இலாக்கா மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் அமைச்சரவை மாற்றம் செய்யப்பட உள்ளதாக கடந்த சில நாட்களாகவே செய்திகள் வெளியான வண்ணம் இருந்தது. முக்கியமாக இளம் எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என்றும் தகவல்கள் வந்தன.

புதிய அமைச்சர்கள்
எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின், டிஆர்பி ராஜா போன்றவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்று செய்திகள் வெளியாகின. இன்னும் சில மாதங்களில் இதற்கான அறிவிப்பு வரலாம் என்றும் கூறப்பட்டது. இப்படிப்பட்ட நிலையில்தான் அமைச்சரவையில் சிறிய அளவில் இலாக்கா மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. இது நிர்வாக காரணங்களுக்காக மேற்கொள்ளப்பட்டது என்று கூறப்படுகிறது. ஆனாலும் பெரிய மாற்றத்திற்கான சிறிய டீசராக இது இருக்குமோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications