பெயரிலேயே தமிழை வைத்துக்கொண்டு தமிழனை மன்னிப்பு கேட்கச் சொல்வது சரியா? தமிழிசைக்கு அருணாசலம் கேள்வி
சென்னை: "தமிழின் மானத்திற்காக தன்மானம் மிக்க தமிழன் தனியாக போராடும்போது, பெயரிலேயே தமிழை வைத்திருப்பவரும், தமிழறிஞரின் மகளுமான தமிழிசை சௌந்தரராஜன் தமிழனை மன்னிப்பு கேட்கச் சொல்வது சரியா?" என மநீம பொதுச்செயலாளர் அருணாச்சலம் கேள்வி எழுப்பியுள்ளார்.
மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'தக் லைஃப்'. நாளை (ஜூன் 5) இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சென்னையில் அண்மையில் நடைபெற்ற தக் லைஃப் படத்தின் இசை வெளியிட்டு விழாவில் பேசிய நடிகர் கமல்ஹாசன் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.

நடிகர் கமல்ஹாசன், "தமிழில் இருந்து தான் கன்னடம் பிறந்தது" எனப் பேசி இருந்தார். அவரது இந்தப் பேச்சு கர்நாடகாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கன்னட மொழியை கமல்ஹாசன் அவமதித்துவிட்டதாகக் கூறி கர்நாடக அரசியல்வாதிகள், பல்வேறு அமைப்புகள், கன்னட திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கமல்ஹாசன் மன்னிப்பு கேட்காவிட்டால் தக் லைஃப் திரைப்படம் திரையிடப்பட மாட்டாது என கன்னட திரைப்பட வர்த்தக சபை அறிவித்தது.
இந்த விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. ஆதாரம் இன்றி புண்படுத்தும் வகையில் கருத்து கூறிய கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போது, "கர்நாடகாவில் தக் லைஃப் திரைப்படத்தை வெளியிட மாட்டோம், ஒரு வார காலம் அவகாசம் வேண்டும்" என கமல் தரப்பு தெரிவித்தது.
இந்நிலையில், கன்னட மொழி விவகாரத்தில் கமல் பேசியது தேவையற்றது, கடிதம் எழுதுவதற்கு பதில் மன்னிப்பு கேட்பதில் என்ன தவறு? என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், "நமது தன்னலமற்ற ராணுவம் தேசத்திற்காகப் போராடிக் கொண்டிருக்கும் போது, சுயநல காரணங்களுக்காக மாநிலங்களுக்கு இடையே பகைமையை உருவாக்காதீர்கள்.
அன்பு மன்னிப்பு கேட்காது என கூறிவிட்டு, நீண்ட கடிதம் எழுதுவதற்கு பதிலாக கமல்ஹாசன் மன்னிப்பு கேட்பதில் என்ன தவறு இருக்கிறது? அவருக்கு இதில் என்ன ஈகோ? அதற்கு பதிலாக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். ஏனெனில் அவர் தவறு செய்துள்ளார்." என்று தெரிவித்தார் தமிழிசை.
இந்நிலையில், தமிழிசைக்கு மநீம பொதுச்செயலாளர் அருணாச்சலம் கண்டனம் தெரிவித்துள்ளார். "தமிழின் மானத்திற்காக தன்மானம் மிக்க தமிழன் தனியாக போராடும்போது, பெயரிலேயே தமிழை வைத்திருப்பவரும், தமிழறிஞரின் மகளுமான தமிழிசை சௌந்தரராஜன் தமிழனை மன்னிப்பு கேட்கச் சொல்வது சரியா? உலகறிந்த உண்மையை ஏற்பதில் உங்களுக்கு ஏன் ஈகோ?" என அருணாச்சலம் கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications