தழும்பே இல்லாமல் தைராய்டு அறுவை சிகிச்சை! முற்றிலும் இலவசம்: அரசு மருத்துவர்கள் சாதனை
சென்னை: சென்னையில் உள்ள கிண்டி மருத்துவமனை தைராய்டு அறுவை சிகிச்சையில் ஒரு மிகப்பெரிய புரட்சியைச் செய்துள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சென்னை கிண்டியில் கட்டப்பட்டியிருந்த ரூ.240கோடியில் கட்டப்பட்டிருந்த கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையை முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார். இது 15 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்டது மிகப்பெரிய சாதனை என்று அப்போது முதல்வர் குறிப்பிட்டுப் பேசி இருந்தார்.

இப்போது மற்றொரு சாதனையைச் சத்தமே போடாமல் சைலண்ட் ஆகச் செய்து முடித்துள்ளனர் இங்கே பணி செய்து வரும் மருத்துவர்கள். அப்படி என்ன செய்துவிட்டது என்று கேட்பவர்கள் தொடர்ந்து படிக்கலாம். முக்கியமாகப் பெண்கள் இந்தச் செய்தியைக் கட்டாயம் படிக்க வேண்டும்.
சென்னை ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்தவர் புவனேஸ்வரி. கடந்த மூன்று வருடங்களாக தைராய்டு நோய்க்குச் சிகிச்சை பெற்று வந்துள்ளார். திடீரென்று அவரது உடல்நிலை மோசமடைந்தது. அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் தைராய்டு கட்டி அதிகம் பெரியதாகிவிட்டதைக் கண்டறிந்தனர். அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய அறிவுறுத்தியுள்ளனர். இந்த அறுவை சிகிச்சை செய்ய சில லட்சங்கள் செலவாகும் என்று தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அந்தளவுக்கு வசதி இல்லாத புவனேஸ்வரி, அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளார்.
அங்குள்ள மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தே ஆகவேண்டும் என சொன்னதால், உடனடியாக அவர் கலைஞர் நூற்றாண்டு உயர் சிகிச்சை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தத் தைராய்டு அறுவை சிகிச்சை செய்து கட்டியை அகற்றினால், கழுத்து பகுதியில் தழும்பு உருவாவதைத் தடுக்க முடியாது. அதற்குப் பயந்தே பல பெண்கள் இந்தச் சிகிச்சையைச் செய்து கொள்வதில்லை. ஆனால், புவனேஸ்வரிக்கு நுண் துளைக் கருவியைப் பயன்படுத்து கட்டியை அறுவை சிகிச்சை செய்து அகற்றி சாதித்துள்ளனர் அரசு மருத்துவர்கள். இதனால் கழுத்தில் வழக்கமாக ஏற்படும் தழும்பு ஏற்படுவது தடுக்கப்பட்டுள்ளது.
இது பற்றிப் பேசிய மருத்துவர் ஜாய்னர் ஆப்ரகாம், "நேரடியாகக் கட்டியை அகற்ற அறுவை சிகிச்சை செய்யாமல், வாய்வழியாகக் கருவியைச் செலுத்தி கட்டியை அகற்ற முடியும். இதை ட்ரான்ஸ் ஓரல் எண்டோஸ்கோபி தைராய்டு எண்டமிக் என்று குறிப்பிடுவோம். மிகப்பெரிய கட்டியாக இருந்தால் இந்த முறையில் அகற்ற முடியாது. 6செ.மீட்டருக்கு குறைவாக இருந்தால், இந்த வகை சிகிச்சை மூலம் கட்டியை அகற்றிவிடலாம்" என்கிறார். இந்த மருத்துவக் குழுவில் டாக்டர் காளிராஜ் கூட இருந்துள்ளார்.

அவர், "பல பெண்கள் இளம்வயதில் இந்த மாதிரியான பிரச்சினையை எதிர்கொள்கின்றனர். அறுவை சிகிச்சையால் வரும் தழும்பு அவர்களின் மனதிற்கு ஒரு தடையாக உள்ளது. எனவே அந்த மாதிரி உணர்வு கொண்டவர்களுக்கு இந்தச் சிகிச்சை ஒரு வரப்பிரசாதம்" என்கிறார்.
இந்த அறுவை சிகிச்சை முடிந்த 2 நாட்களில் ஒரு நோயாளி இயல்பு நிலைக்குத் திரும்பிவிட முடியும். வலியும் கூட அதிகம் இருக்காது. காயங்களைப் பார்க்க முடியாது. சிகிச்சை முடிந்த பிறகு புவனேஸ்வரியால் உடனடியாக பேசவும் முடிந்துள்ளது. இந்த அளவுக்குச் செலவு இல்லாமல் மிகப்பெரிய சிகிச்சையை அரசு கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் செய்ததால் தான் உயிர்பிழைக்க முடிந்துள்ளது என்றும் அவர் நெகிழ்ச்சியாகப் பேசி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications