டிக்கெட் இன்றி ராமேஸ்வரம் வந்த வடமாநில பக்தர்கள்.. அபராதம் விதித்ததால் ‘ஜெய்ஹோ’ கோஷம் போட்டு எஸ்கேப்
ராமநாதபுரம்: ராமேஸ்வரத்துக்கு ரயிலில் டிக்கெட் எடுக்காமல் வந்த வடமாநில பக்தர்களிடம், டிக்கெட் பரிசோதகர்கள் அபராதம் விதிக்க முயன்றபோது 'ஜெய் ஹோ' என முழக்கமிட்டு தப்பிச் சென்றனர். மதுரையில் இருந்து ரயிலில் 400க்கும் மேற்பட்ட வடமாநில பக்தர்கள் வந்த நிலையில் சுமார் 100 பேரிடம் மட்டுமே டிக்கெட் இருந்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத சுவாமி கோவிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபாடு நடத்தி செல்கின்றனர். குறிப்பாக வட மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் இந்த கோவிலுக்கு வருகை தருகின்றனர். வடமாநிலத்தவர்கள் பலரும் குடும்பம் குடும்பமாக ராமேஸ்வரத்தில் சாமி தரிசனம் செய்கின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் ரயில்களில் ராமேஸ்வரம் வருவது வழக்கம்.

இந்நிலையில், மதுரையில் இருந்து இன்று ராமேஸ்வரம் புறப்பட்ட ரயிலில் 400க்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர்கள் பயணித்துள்ளனர். மானாமதுரை ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகர் வந்து பயணிகளின் டிக்கெட்டுகளை பரிசோதித்துள்ளார். அப்போது, ரயிலில் பயணித்த வட மாநிலத்தவர்களில் 80க்கும் மேற்பட்டோர் டிக்கெட் இன்றி பயணம் செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, டிக்கெட் எடுக்காமல் ரயிலில் பயணித்த வட மாநிலத்தவர்கள் 80 பேருக்கும் தலா 300 ரூபாய் வீதம் 24 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதில் பலர் அபராதத்தை செலுத்தி உள்ளனர். மேலும், மற்ற பெட்டிகளில் பயணித்த நூற்றுக் கணக்கானவர்களிடமும் டிக்கெட் பரிசோதிக்க அதிகாரிகள் ரெடியாக இருந்தனர்.
இதை அறிந்து கொண்ட பெரும்பாலான வட மாநிலத்தவர்கள் அபராதத்தை கட்டாமல் ரெயில் ராமேஸ்வரம் வந்த உடன் அதில் இருந்து கோஷமிட்டுக் கொண்டே இறங்கி தப்பியோடினர்.
ராமேஸ்வரத்தில் இறங்கிய அந்த வடமாநிலத்தவர்கள், "ஜெய் ஹோ".. என்றும் "சத்ரபதி சிவாஜி" என்றும் கோஷமிட்டமிடையே அபராதத்தை கட்டாமல் அங்கிருந்து தப்பிவிட்டனர்.
கோஷமிட்டுக் கொண்டே வேகமாக வெளியேறிய அவர்களை ரயில்வே அதிகாரிகளால் தடுக்க முடியவில்லை. இந்தச் சம்பவம் ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications