செஸ் ஒலிம்பியாட்.. 5 நாட்களில் எகிறிய விற்பனை.. சரிபாதி டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன!
சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்பனையாகி உள்ள தகவல்கள் வெளியாகி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழ்நாட்டில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. ஐந்து சுற்றுகளுக்கான போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், இந்திய அணி தொடர்ந்து வெற்றிப்பாதையில் முன்னேறி வருகிறது. ஒவ்வொரு நாளும் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஆர்வம் மக்களிடையே அதிகரித்து வருகிறது. அதனால் செஸ் ஒலிம்பியாட்டை நேரில் காண வரும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

அதிகரிக்கும் ஆர்வம்
சர்வதேச வீரர், வீராங்கனைகள், உள்ளூர் முதல் சர்வதேச மீடியாக்கள், அரங்குகள், செஸ் நிர்வாகிகள், தமிழக அரசின் ஏற்பாடுகள் ஆகியவற்றை நேரில் பார்க்க வேண்டும் என்றே ஏராளமானோர் மாமல்லபுரம் வரத் தொடங்கியுள்ளனர். அதுமட்டுமல்லாமல், சர்வதேச செஸ் போட்டியை குழந்தைகள் மீண்டும் நேரில் காணும் வாய்ப்பு எப்போது கிடைக்கும் எப்போது கிடைக்கும் என்பது தெரியாததால், பெற்றோரும் அழைத்து செல்ல தொடங்கியுள்ளனர். இதனால் டிக்கெட் விற்பனை அதிகரித்துள்ளது.

டிக்கெட் கட்டணம்
அகில இந்திய செஸ் சம்மேளனத்தின் இணையத்தளத்தில் சென்னை ஒலிம்பியாட் போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன. இரு அரங்குகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. பெரிய அரங்கில் நடைபெறும் ஆட்டங்களைக் காண்பதற்கான டிக்கெட்டுகள் ரூ. 300 முதல் ரூ. 8000 வரை விற்கப்படுகின்றன. சிறிய அரங்கின் டிக்கெட்டுகள் விலை ரூ. 200 முதல் ரூ. 6000 வரை. ரூ. 200, ரூ. 300 டிக்கெட்டுகள் பெண்கள், தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் 19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு மட்டும் வழங்கப்படும்.

சலுகை என்ன?
இதில் சேராத இந்தியர்கள் ரூ. 2000, ரூ. 3000 விலையில் உள்ள டிக்கெட்டுகளை வாங்கலாம். வெளிநாட்டவர்களுக்கு ரூ. 6000, ரூ. 8000 விலையில் உள்ள டிக்கெட்டுகள் வழங்கப்படும். இரு அரங்குகளிலும் கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக 700 பேர் வரையிலான பார்வையாளர்களே அனுமதிக்கப்படுகிறார்கள்.
ரூ. 200 மற்றும் ரூ. 300 டிக்கெட்டுகளை வாங்குபவர்கள் அரங்கில் இரண்டு மணி நேரம் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அதிகக் கட்டணங்களைக் கொண்ட டிக்கெட்டுகளை வாங்குபவர்கள் போட்டியை முழு நாளும் பார்வையிட அனுமதி உண்டு. முதல் அரங்கில் தரவரிசையில் முன்னணியில் உள்ள அணிகளின் வீரர்கள் பங்கேற்பார்கள்.
Recommended Video

இதுவரை எவ்வளவு விற்பனை?
இந்த நிலையில் 44வது சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான டிக்கெட்டிகள் இதுவரை ரூ.40 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன. மொத்தமாக 6,500 டிக்கெட் விற்பனைக்கு உள்ள நிலையில், இதுவரை 3,752 டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இன்னும் செஸ் ஒலிம்பியாட் இறுதிப்போட்டி மற்றும் நிறைவு விழா ஆகியவை நடைபெற உள்ளதால், டிக்கெட் விற்பனை இன்னும் சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications