சவுத்துக்கு ‘செம’ திட்டம்! விண்வெளி தொழில் பூங்கா அமைக்க இஸ்ரோவுடன் ஆலோசனை.. தங்கம் தென்னரசு தகவல்!
சென்னை : குலசேகரபட்டினத்தில் அமைய உள்ள ராக்கெட் ஏவுதளம் அருகே விண்வெளி தொழில் பூங்காக்கள் அமைப்பது தொடர்பாக தமிழ்நாடு அரசின் தொழில் வளர்ச்சி கழகம் (TIDCO), இஸ்ரோவுடன் ஆலோசனை நடத்தி வருவதாக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தமிழக தொழில்துறை ஒரு அதிரடி திட்டத்தை தீட்டி வருகிறது.
ராக்கெட் ஏவுதளம் அருகிலேயே, ராக்கெட் தயாரிப்பதற்கான பொருட்களை தயாரித்து வழங்கும் விண்வெளி தொழில் பூங்காக்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, டிட்கோ - இஸ்ரோ இடையே ஆலோசனை நடைபெற்று வருகிறது.

குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம்
விண்வெளி துறையில் இந்தியா பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. தற்போது பல்வேறு ஆராய்ச்சிகளுக்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) மூலம் ஏவப்படும் செயற்கைகோள்கள் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்டு வருகிறது. இந்நிலையில் எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு மற்றொரு ராக்கெட் ஏவுதளம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டது. அதன்படி தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

விண்வெளி தொழில் பூங்கா
இதற்காக 2,100 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிவடைந்துள்ளது. தொடர்ந்து அந்த நிலங்களை சுற்றி கம்பி வேலிகள் அமைக்கும் பணி உள்ளிட்ட ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இங்கு அமையும் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து எஸ்.எஸ்.எல்.வி என்ற சிறிய ரக ராக்கெட்டுகளை விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ராக்கெட் உருவாக்குவதற்கான பொருட்களை வெகு தொலைவில் இருந்து இங்கு எடுத்து வர கூடுதல் செலவுகள் பிடிக்கும் என்பதால் தமிழக அரசின் தொழில் வளர்ச்சி கழகம் ஒரு திட்டத்தைத் தீட்டி வருகிறது.

சூப்பர் திட்டம்
குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட்களை உருவாக்குவதற்கு தேவையான பொருட்களை, அதற்கு அருகிலேயே விண்வெளி தொழில் பூங்காக்களை அமைத்து அங்கு பொருட்களை தயாரித்து வழங்க தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் திட்டமிட்டுள்ளது. குலசேகரன்பட்டினத்தில் அமைய உள்ள ராக்கெட் ஏவுதளம் அருகே விண்வெளி தொழில் பூங்காக்களை அமைக்க தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் லிமிடெட் (டிட்கோ), இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துடன் ஆலோசனை நடத்தி வருவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

தங்கம் தென்னரசு பேட்டி
இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, "குலசேகரன் பட்டினத்தில் விண்வெளி தொழில் பூங்காக்கள் அமைப்பது தொடர்பாக தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம், இஸ்ரோவுடன் ஆலோசனை நடத்தி வருகிறது. ராக்கெட் உருவாக்க பொருட்களை கொண்டு வருவதன் மூலம் இந்த தளத்தின் செயல்திறன் மேம்படும். பிரத்யேக விண்வெளி தொழில் பூங்காக்களை நிறுவுவதன் மூலம் இஸ்ரோ அதன் சப்ளையர்களை அருகியில் வைத்திருக்க உதவுவோம்.

தென் மாவட்டங்களை புரட்டிப்போடும்
இந்த திட்டம் தென் மாவட்டங்களின் பொருளாதாரத்தை மாற்றி அமைக்கும். ராக்கெட்டுகள் மற்றும் செயற்கைகோள் தயாரிப்பு, அவற்றை உருவாக்குவதற்கான உதிரிபாகங்களை உருவாக்குதல் போன்ற பல தொழில்கள் உள்ளன. இந்த திட்டத்திற்கு மாநில அரசு தொடர்ந்து ஆதரவு வழங்கும். விண்வெளி ஏவுதளங்களுக்கான உலகளாவிய சந்தை பல பில்லியன்களாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. தற்போது இது 14 பில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.

2 பில்லியன் டாலரை எளிதாக அடையலாம்
இது 2030-ல் 32 பில்லியன் டாலராக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் இந்தியாவின் சந்தை பங்கு 2 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது. குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் வருவதால் விண்வெளி ஏவுதள சந்தையில் இந்தியா சுமார் 10 சதவீதத்தை இலக்காக கொள்ள முடியும். இது 3 பில்லியன் டாலர் மதிப்புடையதாக இருக்கும். இதில் தமிழ்நாடு 2 பில்லியன் டாலர்களை எளிதாக அடைய முடியும்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications