தமிழகத்தில் கூட்டணி ஆட்சி.. காலம் கனியும்! இந்த ஒரு விஷயம் அதற்கு நடக்கணும்.. விசிக திருமாவளன் பரபர
சென்னை: தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைவதற்கு காலம் கனியும். அதற்கான சூழல் இன்னும் அமையவில்லை. திராவிட கட்சிகளில் குறிப்பாக திமுக அதிமுக ஏதாவது ஒரு கட்சி இன்னும் பலவீனப்படும்போது இந்த கோரிக்கை வலுவாக மாறும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று அமித்ஷா கூறியதாக கேட்கிறீர்கள். வட இந்தியாவில் ஏதாவது ஒரு மாநிலத்தில் வரும் என்ற எண்ணத்தில் சொல்லியிருப்பார். தமிழ்நாட்டில் அதற்கான வாய்ப்பே இல்லை என்பது அவருக்கே தெரியும். இன்னும் எதிர்க்கட்சிகள் தமிழ்நாட்டில் உறுதியான எந்த நிலைப்பாட்டையும் எடுக்க முடியாமல் தடுமாறிக்கொண்டு இருக்கின்றன.

2வது பெரிய கட்சி யார் என்று போட்டி
அதிமுகவும் இன்னும் ஒரு அணியை உருவாக்கவில்லை. பாஜகவும் இன்னும் ஒரு அணியை உருவாக்கவில்லை. புதிதாக கட்சி தொடங்கியிருக்கும் விஜய்யும் உறுதியான நிலைப்பாடு எடுத்ததாக தெரியவில்லை. அண்மையில் பொதுக்குழுவில் பேசிய விஜய், அதிமுகவோ பாஜகவோ இரண்டாவது பெரிய கட்சியாக இருக்க முடியாது. நான் தான் இரண்டாவது பெரிய கட்சி என்று பேசியிருக்கிறார். ஆக பாஜக, அதிமுக, தவெக ஆகிய கட்சிகளுக்கு இடையே 2-வது பெரிய கட்சி யார் என்ற போட்டித்தான் தமிழகத்தில் நடக்கிறது.
இந்த சூழலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்பது நகைச்சுவையாக உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தை வட மாநிலமாக பார்க்க முடியாது. அதுவும் கிட்டத்தட்ட தென்னிந்தியாவில் தான் இருக்கிறது. மொழி உணர்வு இப்போதுதான் தமிழ்நாட்டை தாண்டி பலருக்கும் உருவாகி வருகிறது. இந்தி திணிப்பு என்பதை எதிரான நடவடிக்கையாக பார்க்காமலே இருந்துவிட்டார்கள். அதனால், வட இந்திய மாநிலங்களில் பூர்வீக குடிமக்கள் பேசிய பல மொழிகள் அழிந்து போயிருக்கின்றன.
அந்த மாநிலங்களில் கூட ராஜஸ்தான், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசத்தில் கூட தங்கள் தாய்மொழி இந்தியால் அழிக்கப்பட்டுவிட்டது என்று சட்டமன்றத்திலேயே பேசக்கூடிய அளவுக்கு தற்போது மாற்றம் எழுந்து இருக்கிறது. இதற்கு எல்லாம் தமிழ்நாடுதான் முன்னோடி மாநிலமாக இருக்கிறது என்பதை அந்த மாநிலங்களில் உள்ள மக்கள் உணர தொடங்கியிருக்கிறார்கள்" என்றார்.
ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கேட்கப்படுமா
திமுக கூட்டணியில் உறுதியாக இருப்பதாக சொல்லியிருக்கிறீர்கள் விசிகவின் நீண்ட கால கோரிக்கையான ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு 2026ல் கேட்கப்படுமா? என்ற ரீதியில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த திருமாவளன், "இதற்கு இன்னும் நீண்ட காலம் இருக்கிறது. தேர்தலுக்கு 9 மாத காலம் தான் இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் ஒரு கூட்டணி ஆட்சி அமைவதற்கு காலம் கனியும்.
அதற்கான சூழல் இன்னும் அமையவில்லை திராவிட கட்சிகளில் குறிப்பாக திமுக அதிமுக ஏதாவது ஒரு கட்சி இன்னும் பலவீனப்படும்போது இந்த கோரிக்கை வலுவாக மாறும். பாஜகவும் அதிமுகவும் பொருந்தாத கூட்டணி. அரசியலுக்காக வலிந்து உருவாக்கப்பட கூட்டணியே தவிர அடிப்படையில் பொருந்தாத கூட்டணி. அதனால் அவர்கள் தொடர்ந்து பயணிக்க முடியவில்லை.
வக்ஃபு வாரிய சட்டம்
திமுக கூட்டணியில் கருத்து உரசல்கள் இருக்கலாம். ஆனால் அடிப்படை கொள்கைகளில் அனைவருக்கும் ஒருமித்த பார்வை உள்ளது. ஆகவே இந்த கூட்டணியில் ஒரு வலு உறுதிப்பாடு உள்ளது. வக்ஃபு வாரிய சட்டத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தில் எங்களுடைய கருத்துக்களை பதிவு செய்ய உள்ளோம். இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால், சிறுபான்மை மக்களுக்கு எதிரான மோசமான ஒரு தாக்குதலாக அமையும். பாஜக அரசு இஸ்லாமிய உள்ளிட்ட சிறுபான்மை மக்களுக்கு எதிரான ஒவ்வொரு திட்டங்களாக நிறைவேற்றி வருகிறது. இது இந்த நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் எதிராக போய் முடியும். இவ்வாறு அவர் பேசினார்.












Click it and Unblock the Notifications