அரோகரா! வேலாக நின்ற வேலவனுக்கு இன்று திருக்கல்யாணம்! சந்தோஷத்தில் திக்குமுக்காடும் திருச்செந்தூர்!
தூத்துக்குடி: முத்தமிழ் கடவுள் முருகப் பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்காரம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. தொடர்ந்து இன்று தெய்வானை அம்மனுடன் முருகப்பெருமானுக்கு திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. இரவு 11 மணிக்கு குமரவிடங்க பெருமானாக தெய்வானையை மணம் முடிக்கிறார் முருகக் கடவுள்.
முருக பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் ஆண்டு தோறும் நடைபெறும் விழாக்களில் கந்தசஷ்டி விழா முக்கியமானதாகும். சூரபத்மனை, முருக பெருமான் வதம் செய்த இடம் என்பதால் இங்கு நடைபெறும் சூரசம்ஹாரம் உலக பிரசித்தி பெற்றதாகும்.
இந்த ஆண்டு கந்தசஷ்டி விழா கடந்த 22-ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து தினமும் காலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம், உதயமார்த்தாண்ட அபிஷேகம், யாகசாலை பூஜை போன்ற பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

திருச்செந்தூர் கந்த சஷ்டி
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம் மற்றும் இதர கால வேளை பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து காலை 7 மணிக்கு யாகசாலையில் சுவாமி ஜெயந்திநாதர் எழுந்தருளியதூம் யாகசாலை பூஜைகள் தொடங்கின. காலை 9 மணிக்கு பூர்ணாகுதி தீபாராதனை, அதனை தொடர்ந்து சுவாமி, அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.
சூரசம்ஹாரம்
பகலில் மூலவருக்கு உச்சிக்கால தீபாராதனையும், யாகசாலையில் சுவாமிக்கு மகாதீபாராதனையும் நடைபெற்றது. பின்னர் தங்கச் சப்பரத்தில் சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலையில் இருந்து எழுந்தருளி வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு முதலிய பாடல்களுடன், மேளவாத்தியங்களுடன் சண்முகவிலாசம் சேர்ந்தார். அங்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பிற்பகல் 2 மணியளவில் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் சுவாமி ஜெயந்திநாதருக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.
முருகப் பெருமான்
தொடர்ந்து மாலை 4.30 மணியளவில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்வதற்காக போர்க்கோலம் பூண்டு கடற்கரையில் எழுந்தருளினார். முன்னதாக சிவன் கோயிலிருந்து சூரபத்மன் எழுந்தருளி உள்மாட வீதி, ரதவீதிகள் சுற்றி கோயில் கடற்கரைக்கு படை பரிவாரங்களுடன் வந்து சேர்ந்தார். தொடர்ந்து சூரசம்ஹாரம் தொடங்கியது. முதலில், கஜ முகத்துடன் வந்த சூரபத்மன், சுவாமியை ஆணவத்தோடு மூன்று முறை வலம் வந்து போரிட்டான். அவனை, மாலை 4.56 மணிக்கு ஜெயந்திநாதர் தனது வெள்ளி வேலால் வதம் செய்தார்.
சூரபத்மன் வதம்
இரண்டாவதாக சிங்க முகத்துடன் வந்த சூரனை 5.16 மணிக்கும், மூன்றாவதாக சுயரூபத்துடனும் போரிட்ட சூரபத்மனை 5.32 மணிக்கும் வதம் செய்தார். பின்னர் மாமரமாக மாறிய சூரனை சேவலாக மாற்றி தன்னுள் ஆட்கொண்டார் ஜெயந்திநாதர். அப்போது கடற்கரையில் அலை கடலென திரண்டிருந்த பக்தர்கள் எழுப்பிய 'வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா' என்ற கோஷம் விண்ணை பிளக்கச் செய்தது.
அரோகரா கோஷம்
சூரசம்ஹாரத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் கடற்கரையில் கூடியிருந்த நிலையில், கடலா கடல் அலையா என வியக்கும் வண்ணம் கடற்கரை முழுவதும் மனித தலைகளாக காட்சியளித்தன. சூரசம்ஹாரம் முடிந்ததும் பக்தர்கள் கடலில் புனித நீராடி விரதத்தை நிறைவு செய்தனர். சூரசம்ஹாரம் முடிந்தும் வள்ளி, தெய்வானையுடன் சுவாமி ஜெயந்திநாதர் சந்தோச மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கும், அம்பாளுக்கும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி பூஞ்சப்பரத்தில் கிரிபிரகாரம் உலா வந்து திருக்கோயில் சேர்ந்தார். இரவு 108 மகாதேவர் சன்னதி முன்பு சாயா அபிஷேகம் நடைபெற்று பக்தர்களுக்கு சஷ்டி பூஜை தகடுகள் கட்டப்பட்டன.
தெய்வானை திருக்கல்யாணம்
இந்நிலையில்,கந்தசஷ்டி விழாவில் 7-ம் நாளான இன்று திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு இன்று அதிகாலை 5 மணிக்கு தெய்வானை அம்மன் தபசு காட்சிக்கு எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக தெப்பகுளம் அருகே உள்ள முருகமடத்தை சென்று சேர்ந்தார். அங்கு மாலை 6.30 மணிக்கு சுவாமி குமரவிடங்கபெருமான் காட்சி கொடுத்ததும் தெற்குரதவீதி சந்திப்பில் தோள் மாலை மாற்றும் வைபவம் நடைபெறுகிறது. இரவு 11 மணிக்கு மேல் திருக்கல்யாண மண்டபத்தில் சுவாமி குமரவிடங்கபெருமான் - தெய்வானை அம்மன் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது.












Click it and Unblock the Notifications