தமிழ்நாட்டில் எங்கே இருக்கிறது சட்டம் ஒழுங்கு? எடப்பாடி பழனிச்சாமி கேள்வி
சென்னை: திருப்பூர் மாவட்டத்தில் குடும்பத் தகராறை விசாரிக்கச் சென்ற எஸ்ஐ சண்முகவேல் படுகொலை செய்யப்பட்டதாகவும், கோவை காவல் நிலையத்தில் எஸ் ஐ அறையில் ஒருவர் தூக்கிட்ட நிலையில் உயிரிழப்பு எனவும் செய்திகள் வருகின்றன. எங்கே இருக்கிறது சட்டம் ஒழுங்கு? என்று திமுக அரசுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
திருப்பூரில் எஸ்எஸ்ஐ கொலை
திண்டுக்கல் மாவட்டம் வேடந்சந்தூரைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவருக்கு தங்கபாண்டியன், மணிகண்டன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே குடிமங்கலம் பகுதியில் உள்ள தோட்டத்தில் பணியாற்றி வருகிறார்கள். அந்த தோட்டம் மடத்துகுளம் தொகுதி அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்கு சொந்தமானதாகும். மகேந்திரன் திருப்பூர் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளராக உள்ளார்.

மகேந்திரனுக்குச் சொந்தமான இந்த தோட்டத்தில் மூர்த்தி மற்றும் அவரது மகன் தங்கபாண்டியன் ஆகியோர் தங்கி பணிபுரிந்து வந்தனர். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவில் இருவரும் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, தங்கபாண்டியன் தனது தந்தை மூர்த்தியைக் கடுமையாக தாக்கியதாக காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக குடிமங்கலம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் சண்முகவேல் (52) விசாரிக்க சென்றுள்ளார். அப்போது தந்தை, மகன்கள் மோதிக் கொண்டிருந்துள்ளனர். சண்முகவேல் அதை தடுத்து சமதானம் செய்ய முயற்சித்தார். இருப்பினும் அவர்கள் சண்முகவேலின் பேச்சை கேட்கவில்லை. ஒருகட்டத்தில் அவர்கள் சண்முகவேலை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில், சண்முகவேலு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கோவை காவல் நிலையத்தில் ஒருவர் தற்கொலை
கோவை மாவட்டம், பெரிய கடைவீதி காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை இரவு ராஜன் என்ற 55 வயது மதிக்கத்தக்க நபர் புகார் அளிக்க வந்துள்ளார். மனநலம் பாதிக்கப்பட்டவர் என்ற கூறப்படுகிறது. காவலர்கள் யாரும் பார்க்காத நேரத்தில் உதவி ஆய்வாளர் அறைக்கு சென்று தான் உடுத்தியிருந்த வேட்டியைக் கொண்டு ராஜன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல் ஆணையர் சரவண சுந்தர் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மற்றும் திருப்பூர் சம்பவங்கள் குறித்து திமுக அரசுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது: எங்கே இருக்கிறது சட்டம் ஒழுங்கு?. திருப்பூர் மாவட்டத்தில் குடும்பத் தகராறை விசாரிக்கச் சென்ற எஸ்ஐ சண்முகவேல் படுகொலை செய்யப்பட்டதாகவும், கோவை காவல் நிலையத்தில் எஸ் ஐ அறையில் ஒருவர் தூக்கிட்ட நிலையில் உயிரிழப்பு எனவும் செய்திகள் வருகின்றன.
காவல் நிலையத்தில்கூட இல்லாத சட்டம் ஒழுங்கிற்கு என்ன பதில் வைத்துள்ளார் முதல்வர்?. விசாரிக்க செல்லும் காவல் துறையினருக்கே பாதுகாப்பு இல்லை என்பதையும், காவல் நிலையத்திலேயே ஒருவர் தூக்கிட்டுக் கொள்ளும் அளவுக்கு அலட்சியமாக இருந்தது என்பதையும் எப்படி எடுத்துக் கொள்வது?. முதல்வர் ஸ்டாலின் செய்யும் அத்தனை அரசியலும், இந்த சீர்கெட்ட சட்டம் ஒழுங்கைப் பற்றி யாரும் பேசக் கூடாது என்பதற்கான திசைதிருப்பும் உத்தி மட்டுமே.
ஆனால், மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்- அவர்களுக்கு தேவை பாதுகாப்பான தமிழகம். மக்களைக் காக்க, தமிழகத்தை மீட்க ஒரே வழி, திமுக அரசை வீட்டுக்கு அனுப்புவதே. மேற்கூறிய வழக்குகளில் முறையான விசாரணை நடத்திடவும், குற்றவாளிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் திமுக அரசை வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications