அம்மோனியா வாயுக்கசிவால் 7 பேர் பலியான சம்பவம்.. 24 மணி நேரத்தில் இடைக்கால அறிக்கை.. விஜய் உத்தரவு
சென்னை: திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு விபத்தில் 7 பேர் உயிரிழந்த நிலையில், 24 மணி நேரத்தில் இடைக்கால அறிக்கையும், 3 நாட்களில் முழுமையான விசாரணை அறிக்கையும் தாக்கல் செய்ய முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக முதல்வர் விஜய் 10 நிமிடங்களுக்கு ஒருமுறை தகவலை கேட்டுவருவதாகவும் அமைச்சர் குமார் தெரிவித்துள்ளார். இதேபோன்று மருத்துவமனைகளுக்கு விரைந்து செல்லுமாறு அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகனுக்கும் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
திருவள்ளூரை அடுத்த பெரியபாளையத்தில் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. தனியர் நிறுவனத்திற்கு சொந்தமான இந்த தொழிற்சாலையில் இன்று எதிர்பாராத விதமாக அமோனியா வாயுக் கசிவு ஏற்பட்டுள்ளது. இதில், அங்கு பணியாற்றிய தொழிலாளர்கள் 60-க்கும் மேற்பட்டோர் பேருக்கு மயக்கம் ஏற்பட்டது. இந்த துயர சம்பவத்தில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

அம்மோனியா வாயு கசிவு
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிலரின் நிலமை ஆபத்தான நிலையில், இருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. தமிழகத்தையே உலுக்கிய இந்த துயர சம்பவம் தொடர்பாக விசாரணைக் குழுவை அமைத்து முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் சாந்தாராம் தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலையில் அமோனியா வாயுக்கசிவு நடைபெற்றது தொடர்பாக 24 மணி நேரத்தில் இடைக்கால அறிக்கை சமர்பிக்க வேண்டும் என்று முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். மேலும், 3 நாட்களில் முழுமையான அறிக்கை தாக்கல் செய்ய குழுவுக்கு உத்தரவிட்டுள்ளார்.
தலா 2 லட்சம் நிவாரணம்
சம்பவம் தொடர்பாக நேரில் சென்று ஆய்வு செய்த அமைச்சர் குமார், முதல்வர் விஜய் 10 நிமிடங்களுக்கு ஒருமுறை தகவலை கேட்டுவருவதாக தெரிவித்தார். இதேபோன்று மருத்துவமனைகளுக்கு விரைந்து செல்லுமாறு அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகனுக்கும் விஜய் உத்தரவிட்டுள்ளார். மேலும் இச்சம்பவத்தில் உயிரிழந்த 2 பேருக்கு தலா ரூ.2 லட்சம் நிதி உதவி அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டம், கன்னிகைப்பேர் கிராமத்தில் தனியார் மீன் உணவு ஏற்றுமதி தொழிற்சாலையில் அம்மோனியா வாயு கசிவினால் ஏற்பட்ட விபத்திற்கு முதல்வர் விஜய் ஆறுதல் மற்றும் நிதியுதவி அறிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டம், பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் கிராமத்தில் இன்று (21.06.2026) தனியார் மீன் உணவு ஏற்றுமதி தொழிற்சாலையின் உற்பத்தி பிரிவில் எதிர்பாராதவிதமாக அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டதில், அங்கு பணியில் இருந்த 64 நபர்கள் (60 பெண்கள், 4 ஆண்கள்) பாதிக்கப்பட்டனர்.
இவ்விபத்தில் துரதிஷ்டவசமாக 2 பெண்கள் உயிரிழந்துவிட்டனர். 15 நபர்கள் அரசு மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். 23 நபர்கள் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 24 நபர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர்.
24 மணி நேரத்தில் அறிக்கை
இவ்விபத்து குறித்து இயக்குநர் தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை, கூடுதல் இயக்குநர் பொது சுகாதாரத் துறை மற்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரிய உறுப்பினர்-செயலர் தலைமையில் ஆய்வு மேற்கொண்டு முதற்கட்ட விசாரணை அறிக்கையினை 24 மணி நேரத்திற்குள்ளாகவும், முழுமையான விசாரணை அறிக்கையினை 3 நாட்களுக்குள்ளாகவும் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளேன்.
இச்சம்பவத்தில் இரு பெண்கள் உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியை கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். இவ்விபத்தில் உயிரிழந்த இரண்டு பெண்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா இரண்டு லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
மேலும், அவர்களது உடலினை சொந்த மாநிலத்திற்கு அனுப்பி நல்லடக்கம் செய்வதற்கு அரசு செலவில் நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளேன். மேலும், இவ்விபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்விபத்தில் உயிரிழந்த மற்றும் பாதிப்படைந்த தொழிலாளர்களுக்கு, தொழிலாளர் மாநில ஈட்டுறுதி காப்பீட்டுத் (ESI) திட்டம் / வேலையாள் இழப்பீடு சட்டத்தின் கீழ் உரிய இழப்பீடு வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளேன்.
இனிவருங்காலங்களில், இதுபோன்ற விபத்துக்களை தவிர்க்கும் பொருட்டு, பேரபாய தொழிற்சாலைகளை (Hazardous Industries) உடடிய குழு ஆய்வுகள் மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளேன். இச்சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் /மூத்த இந்திய ஆட்சிப்பணி அலுவலர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் இணைந்து நேரடியாக ஆய்வு செய்து தக்க மேல்நடவடிக்கையும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தேவைப்படும் உதவியினை செய்யுமாறும் அறிவுறுத்தியுள்ளேன்" என்று கூறப்பட்டுள்ளது.














Click it and Unblock the Notifications