"அவர்" மாதிரி இல்லை இவர்.. அடிச்சி ஆடுங்க சார்.. திருவள்ளூர் அரவிந்தனை ஞாபகம் இருக்கா, கிளம்பிட்டார்
திருவள்ளூர் எஸ்பி அரவிந்தனுக்கு டிரான்ஸ்பர் கிடைத்துள்ளது
சென்னை: திருவள்ளூர் மாவட்ட எஸ்பியாக இருந்த அரவிந்தன் தற்போது டிரான்ஸ்பர் செய்யப்பட்டுள்ளார்.. இதையடுத்து, பலரும் அவருக்கு வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்து வருகின்றனர்.. இதில் முதல் ஆளாக வந்து வாழ்த்து சொன்னது பாஜக ஆதரவாளர் எஸ்வி சேகர்தான்..!
கடந்த காலங்களில், தமிழகத்தில் தொற்று பாதித்த மாவட்டங்களில் மிக முக்கியமானது திருவள்ளூர் மாவட்டம் ஆகும்.. ஆனால், கொரோனா தடுப்பு பணி, ஊரடங்கு வேலைகளில் பம்பரமாக சுழன்று வேலை பார்த்தவர் அம்மாவட்டத்தில் எஸ்பியாக இருந்த அரவிந்தன்,
தன்னுடைய மாவட்ட போலீசார் நலனை காத்ததுடன், மாவட்ட மக்கள் சேவையிலும் கவனம் செலுத்தியவர்.. குறிப்பாக நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வேலையை எளிதாக்குவதே, இந்த ஐபிஎஸ் அதிகாரி அரவிந்தனின் பலம் ஆகும்.

வெளிமாநிலம்
தமிழகத்தின் அதிக எண்ணிக்கையிலான வெளிமாநிலத்தவர்கள் தங்க வைக்கப்பட்டிருப்பது திருவள்ளூர் மாவட்டத்தில்தான்... கிட்டத்தட்ட 16 ஆயிரம் இடம்பெயர்ந்த தொழிலாளர்களை 278 மையங்களில் தங்கவைத்து, தலா 5 இடங்களை ஒரு போலீஸ் ஸ்டேஷனுக்கு ஒதுக்கி, அவர்களை செயலி மூலம் கண்காணித்து வந்தவர்தான் அரவிந்தன்.

ஆய்வு
அதுமட்டுமல்ல, இந்த தொழிலாளர்களுக்கு போதிய வசதிகள் செய்யப்பட்டுள்ளதா, நேரத்துக்கு சாப்பாடு கிடைக்கிறதா? மருந்து பொருட்கள் தாராளமாக கிடைக்கிறதா? என்பதையெல்லாம் ஆய்வு செய்யவும் தனியாகவே ஒரு ஆப் தயார் செய்தார்.. இதற்காகவே ஒரு டீம் தனியாக வைத்திருந்தார். அந்த வகையில், தொற்றை பரவாமல் தடுக்க தொழில்நுட்பத்தை பயன்படுத்தியதில், அரவிந்தனின் திட்டம் முன்னோடியானது என்றே சொல்லலாம்.

மஞ்சள் தண்ணீர்
அதேசமயம், கொரோனா விதிகளை மீறும் தன்னுடைய மாவட்ட மக்களிடம் இவர் கண்டிப்பு காட்டவில்லை.. யாராவது தேவையில்லாமல் ரோட்டில் சுற்றி கொண்டிருந்தால், அவர்களை லத்தியால் அடிக்காமல், மஞ்சள் கரைசலை மேலே ஊற்றுவார்.. இதுபோன்ற செயல்பாடுகளால்தான் அந்த மாவட்ட மக்களின் மனதில் இடம்பிடித்தார் அரவிந்தன்.

காய்கறி
இப்படித்தான், ஒருநாள் தாமரைப்பாக்கம் பகுதியில் கார்த்திக் என்ற விவசாயி நடுரோட்டில் காய்கறிகளை கொட்டி விவசாயம் செய்தார்.. அவரை போலீசார் சந்தைக்கு செல்ல அனுமதிக்கவில்லையாம்.. அதற்கான போராட்டம் இது.. இந்த விஷயம் அரவிந்தனுக்கு பறந்ததும், உடனடியாக கிளம்பி வந்தார்.. நேரடியாக கார்த்திக் வீட்டுக்கு சென்று, போலீசார் நடந்து கொண்டதற்கு மன்னிப்பு கேட்டார், உரிய இழப்பீட்டையும் தந்தார்..

சிறுவன்
இதுபோலவே இன்னொரு சம்பவமும் நடந்தது.. பல்லவன் என்ற கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார் என்ற 12 வயது சிறுவனுக்கு சிறுநீரகம் செயலிழந்துவிட்டது.. ஆனால், சிகிச்சைக்கு தேவையான மருந்து, மாத்திரைகளை வாங்க முடியாமல் அந்த குடும்பம் தவித்தது.. இதுகுறித்து தகவல் அறிந்த அரவிந்தன், போலீசாரை சென்னைக்கு அனுப்பி அந்த மாத்திரைகளை வாங்கி வந்து சிறுவனிடம் தந்தார்.

அரவிந்தன்
இப்படி தேடி தேடி உதவிகளை செய்து வந்த அரவிந்தனை, மாவட்ட மக்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது.. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியே, அரவிந்தனை அழைத்து நேரடியாக பாராட்டவும் செய்தார். இந்நிலையில்தான், தற்போது தமிழக அரசு 9 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.,.. அந்த வகையில், அரவிந்தன், ஸ்பெஷல் பிராஞ்சு சிஐடி எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

நன்றி
இதுகுறித்து அரவிந்தன் ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார்.. அதில், "திருவள்ளூரில் தன்னுடைய பதவிக்காலம் திருப்திகரமானதாக இருந்தது, மக்கள் நலன் மற்றும் காவல்துறைக்கு தனது பங்களிப்பை வழங்க முடிந்தது, திருவள்ளூர் மாவட்ட மக்கள், அரசுத் துறை ஊழியர்கள், ஊடகங்கள், தொழில்துறை மனிதவள, தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு நன்றி, திருவள்ளூர் இனிமையான நினைவுகளுக்கு நன்றி" என்றும் பதிவிட்டுள்ளார்.

அடிச்சி ஆடுங்க
இந்த ட்வீட்டுக்கு கீழே பலரும் திரண்டு வந்து அரவிந்தனுக்கு வாழ்த்து சொல்லி உள்ளனர்.. இதில் முதல் நபரே எஸ்வி சேகர்தான்.. அரவிந்தனுக்காகவே ஒரு ட்வீட் போட்டு வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.. மேலும் பலர், "இயற்கை மீது அதீத காதல் கொண்ட மாண்பு மிகு காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எங்கள் மாவட்டத்திற்கு கிடைத்த பொக்கிஷம்....வாழ்த்துக்கள் சார் உங்கள் கடந்த கால பணிகளுக்கு.. நேர்மையான அதிகாரியான தங்களை நாங்கள் இழந்து விட்டோம். தங்களின் தற்போதைய பணி சிறந்திட வாழ்த்துகள் சார்.. அடிச்சி ஆடுங்க" என்று மனம் நிறைந்த பாராட்டுக்களை அரவிந்தனுக்கு தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications