குவைத் டூ சென்னை.. அடிக்கடி கழிவறைக்கு போன திருவாரூர்காரர்.. நடுவானில் மிரண்ட பயணிகள்
சென்னை: குவைத் நாட்டில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த விமானத்தில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பரூக் என்பவர், அடிக்கடி இருக்கையை விட்டு எழுந்து கழிவறைக்கு சென்று கொண்டிருந்தார். அடிக்கடி கழிவறைக்கு சென்றதை கண்ட விமான பணிப்பெண்கள் , அவரிடம் விசாரித்தனர். அப்போது அவர் கூறியதை கேட்டு ஆடிப்போனார்கள். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
சென்னை மீனம்பாக்கத்தில் அண்ணா சர்வதேச விமான நிலையம் இந்தியாவில் உள்ள மற்ற எல்லா விமான நிலையங்களை ஒப்பிடும் போது, மிகவும் பரபரப்பான விமான நிலையம் ஆகும். ஒரு மணி நேரத்தில் 50க்கு மேற்பட்ட விமானங்கள் அசால்ட்டாக வந்து இறங்கி செல்கின்றன.. இங்கு உலகின் பல்வேறு நாட்டு விமானங்கள் வந்து செல்கின்றன. அமெரிக்கா தொடங்கி ஆஸ்திரேலியா வரை எல்லா கண்டத்திற்கும் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து விமான வசதி உள்ளது. சென்னையில் இருந்தும் குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கு அதிக அளவில் விமானங்கள் சென்று வருகின்றன. இதே போல் குவைத்தில் இருந்தும் ஏராளமான விமானங்கள் சென்னைக்கு தினமும வருகின்றன.

அப்படித்தான் சென்னை அண்ணா பன்னாட்டு விமான நிலையத்திற்கு குவைத் நாட்டிலிருந்து 178 பயணிகளுடன் ஒரு விமானம் வந்து கொண்டு இருந்தது. அந்த விமானம், நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 42 வயதாகும் பரூக் என்பவர் இருக்கையை விட்டு அடிக்கடி எழுந்து விமான கழிவறைக்கு அடிக்கடி சென்று வந்தார்.. இதனால் விமான பணிப்பெண்களுக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து விமான பணிப்பெண்கள், பயணி பரூக்கை விசாரித்தனர். அப்போது தான் அவர், விமான கழிவறையில் அமர்ந்து புகைப்பிடித்தது தெரியவந்தது. இது தொடர்பாக விமான பணிப்பெண்கள் விமானிக்கு தெரிவித்தனர். உடனடியாக விமானியும் சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு புகைப்பிடித்த பயணி குறித்து தகவல் தெரிவித்தார். அதன்படி விமானம் சென்னையில் தரை இறங்கியதும் தயாராக இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்துக்குள் ஏறி புகைப்பிடித்த பயணி பரூக்கை பிடித்து சுங்க மற்றும் குடியுரிமை சோதனைகளை முடித்து விசாரணை நடத்தினார்கள்
அதன்பின்னர் பரூக்கை, சென்னை விமான நிலைய போலீசில் அதிகாரிகள் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில், திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பரூக், குவைத் நாட்டில் 2 ஆண்டுகள் டிரைவராக வேலை செய்து வருவதும், விடுமுறையில் சொந்த ஊருக்கு திரும்பி வந்ததும் தெரியவந்தது. தனக்கு விமான கழிவறையில் புகைப்பிடிக்கக்கூடாது என்பது தெரியாது என்று கூறி கண்ணீர் விட்டு கதறி அழுத பயணி பரூக்கிடம், இனி இதுபோல் செய்யமாட்டேன் என மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கிய போலீசார், மன்னித்து, எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
விமானத்தில் முதல் முறை பயணிப்பவர்கள், ரயிலில் செல்வது போல் அல்லது பேருந்தில் செல்வது போல் நினைத்து புகைப்பிடித்தால் கண்டிப்பாக சிறைக்குத்தான் போக வேண்டியதிருக்கும். விமானங்களில் புகைப்பிடித்து குற்றம் ஆகும். விமானங்களில் தீப்பற்றக்கூடிய உபகரணங்கள் இருக்கக்கூடாது என்பதற்காக புகைபிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே தெரியாமல் கூட புகைப்பிடிப்பது என்பது விமானத்தில் உள்ளவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது.












Click it and Unblock the Notifications