கடலில் குளித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மாயம்... திருவொற்றியூர் ஷாக்!
சென்னை : திருவொற்றியூர் கடலில் குளிக்கச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இளம் பெண் உட்பட 4 பேர் கடலில் மூழ்கி மாயமான நிலையில், நீச்சல் வீரர்கள் மற்றும் தீயணைப்பு துறையினர் அவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
Recommended Video
ஆழம் நிறைந்த வட சென்னை கடற்கரையில் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இருப்பினும் ஆபத்தைப் பற்றிக் கவலைப்படாமல் தொடர்ந்து கடலில் குளிக்கும் பொதுமக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துதான் வருகிறது.
ஆழமான கடற்கரையில் குளிக்கிறோம் என்ற பயம் சிறுவர்களுக்கோ, பொதுமக்களுக்கோ இருப்பது இல்லை. மேலும் கடலலையின் சீற்றம் எந்த அளவுக்கு தங்களை இழுத்துச் செல்லும் என்பதையும் இவர்கள் அறிந்திருப்பதில்லை. இவர்களை போலீஸார் எச்சரித்தாலும் அதனை பொருட்படுத்துவதில்லை. இதனால் உயிரிழப்பு தொடர்கிறது.
இந்நிலையில், தற்போது திருவொற்றியூர் கடலில் குளிக்கச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கடலில் மூழ்கி மாயமாகியுள்ளனர். விடுமுறை தினமான இன்று, திருவொற்றியூர் பலகை தொட்டி குப்பம் கடற்கரைக்கு, சென்னை கொருக்குப்பேட்டை அம்பேத்கர் நகரை சேர்ந்த கரீம் மொய்தின் என்பவர், தனது குடும்ப உறுப்பினர்கள் உட்பட 9 பேருடன் ஆட்டோவில் வந்தார்.
அப்போது அவர்களில் சிலர் கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது, கபீர் என்பவர் கடல் அலையில் திடீரென சிக்கி உள்ளே இழுத்து சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அவருடன் குளித்துக் கொண்டிருந்த உறவினர்கள் கபீரை காப்பாற்ற முயன்றனர். அப்போது, கபீரின் சகோதரி அம்ரின் மற்றும் சகோதரன் அஃபான் மற்றும் அவர்களது நண்பர் சபரி ஆகிய நான்கு பேரையும் கடல் அலை உள்ளே இழுத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் அதிர்ச்சியடைந்த அருகில் குளித்துக் கொண்டு இருந்தவர்கள், காப்பாற்றுமாறு கூச்சலிட்டினர். இதனையடுத்து, அருகில் உள்ள மீனவர்கள் கடலுக்குள் இறங்கி மாயமானவர்களை தேடி வருகின்றனர்.
மேலும், இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருவொற்றியூர் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் கடல் பகுதிக்கு விரைந்து வந்தனர். மெரினா நீச்சல் வீரர்கள், தீயணைப்பு துறையினர், உள்ளூர் மீனவர்களுடன் ரப்பர் படகின் மூலம் கடலில் சென்று தேடி வருகின்றனர்.
மேலும் சம்பவம் தொடர்பாக திருவொற்றியூர் போலீசார் வழக்கு பதிவு, கடலில் மாயமானவர்களின் குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடற்கரை என்றால் குளிப்பதற்குத்தானே என்று நினைக்கும் பொதுமக்களின் ஆவலை நிறைவேற்றும் வகையில், கடற்கரை பகுதியில் பொதுவான நீச்சல் குளம் போன்ற சில நடவடிக்கைகளை ஏற்படுத்த செய்ய வேண்டும். அதேசமயம், பொதுமக்களும், சிறுவர்களும் எல்லை மீறாமல், ஆர்வம் காரணமாக ஆழ்கடலுக்குச் செல்லாமல் இருக்க விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.