சிறுகுறு விவசாயிகளுக்கு மானியத்தில் வேளாண் இயந்திரங்கள்.. பட்ஜெட்டில் வெளியான சூப்பர் அறிவிப்பு
சென்னை: சிறு குறு விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் கருவிகள் மானியத்தில் வழங்க ரூ.170 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.
2024- 2025 ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று தாக்கல் செய்தார். இந்த நிலையில் இன்று வேளாண் பட்ஜெட்டை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார்.

திமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி கடந்த 2021 ஆகஸ்ட் 14ஆம் தேதி அன்று தமிழ்நாட்டில் முதல் முதலாக வேளாண் பட்ஜெட் தனியாக தாக்கல் செய்யப்பட்டது. அப்போது இருந்து வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். தொடர்ந்து 2022 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளிலும் தனியாக வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து பல்வேறு அறிவிப்புகளை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வெளியிட்டிருந்தார்.
இதன்படி, 4வது முறையாக இன்று இன்று வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். இதில் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதில் ஒன்றாக, சிறு குறு விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் கருவிகள் மானியத்தில் வழங்க ரூ.170 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். இதேபோல் 14,000 ஒருங்கிணைந்த பண்ணைய தொகுப்புகள் அமைத்திட 42 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அமைச்சர் வேளாண் பட்ஜெட்டின் போது அறிவித்தார்.
தொடர்ந்து அவர் கூறியதாவது:- உழவர்சந்தைகளில் விற்பனை செய்வதைப் போன்று தரமான வேளாண் விளைபொருட்கள், மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் எளிதில் நகர்ப்புர நுகர்வோரைச் சென்றடைய, நிர்ணயிக்கப்பட்ட தர அளவுகளின்படி விவசாயிகளிடமிருந்து நேரடியாகக் கொள்முதல் செய்து, தரம்பிரித்து, சிப்பம்கட்டி, முத்திரையிட்டு விற்பனை செய்ய ஏதுவாக 100 உழவர் அங்காடிகள், 5 கோடி ரூபாய் மாநில நிதியில் செயல்படுத்தப்படும்.
மண்ணிலுள்ள கரிமச்சத்து, நுண்ணுயிர்களின் கலவை ஆகியவற்றைப் பொறுத்தே மண்ணின் வளம் அமைகிறது. மண்ணின் வளத்தை மேம்படுத்திட பயிர்க்கழிவுகள் உள்ளிட்ட கரிமப் பொருட்களை வேகமாகச் சிதைத்து கரிமச்சத்தின் அளவை உயர்த்தவும். கிடைக்காத நிலையிலுள்ள சத்துகள் கிடைக்கப் பெறவும், பயனுள்ள நுண்ணுயிர்க் கலவையை உருவாக்கிட ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அதன் செயல்திறனும் மதிப்பிடப்படும்.
இதற்கென ஒரு கோடியே 39 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம், 2024-2025-ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்படும். 2024-2025-ஆம் ஆண்டிற்கு மொத்தம் 206 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications