மாலத்தீவில் ஓய்வு எடுக்கலாமே... ஸ்டாலினுக்கு யோசனை- மே 2-க்காக திட்டத்தை ஏற்க தயக்கம்!
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் உதயசூரியன் சின்னத்துக்காக சூரியனைப் போல சூறாவளியாய் பிரசாரம் செய்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். தற்போது அவரை ஓய்வுக்காக மாலத்தீவுக்கு செல்லுங்கள் என குடும்பத்தினர் அறிவுறுத்தி இருந்தாலும் கொரோனா கால கட்டுப்பாடுகளால் ஏற்க தயங்கி வருகிறாராம்.
சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னரே மக்கள் கிராம சபை கூட்டங்கள் தொடங்கி தொடர் பிரசாரத்தை தீவிரப்படுத்தினார் ஸ்டாலின். இடையில் குறிப்பிட்ட இடங்களில்தான் ஒருநாளைக்கு பேசும்படி அவருக்கு திட்டம் வகுக்கப்பட்டது.
ஆனால் அது விமர்சனத்துக்குள்ளாகவே அங்கும் இங்குமாக திசையெங்கும் திரும்பிய பக்கமெல்லாம் ஸ்டாலினின் பிரசாரம்தான்... மக்கள் கூட்டமும் பல்லாயிரக்கணக்கில் ஒவ்வொரு இடத்திலும் அலைமோதியதால் திமுக தரப்பு பெரும் நம்பிக்கையுடன் இருக்கிறது.
மீண்டும் "அந்த" ஆயுதங்களை கையில் எடுக்கும் சென்னை மாநகராட்சி.. கொரோனாவை ஒழிக்க முழுவீச்சில் பணிகள்
ஸ்டாலின் எங்கே ஓய்வு?
வாக்குப் பதிவு முடிந்த உடனேயே ஸ்டாலின் எங்கே ஓய்வு எடுக்கப் போகிறார்? என ஊடகங்களாகவே கிசுகிசுத்து வந்தன. ஆனால் வழக்கம் போல சென்னையிலேயே முகாமிட்டு தேர்தல் வாக்கு பதிவு சதவீதம் குறைந்தது ஏன்? அதிருப்தியாளர்கள் யார் யார்? என்கிற விவரம் எல்லாம் சேகரித்து கொண்டிருந்தார்.
ஸ்டாலின் செம பிசி
அத்துடன் இல்லாமல் சென்னையை சுற்றிய மாவட்ட நிர்வாகிகளை அறிவாலயத்துக்கு வரவழைத்தார். வாக்குப் பதிவில் ஏன் இவ்வளவு குறைவாக இருந்தது? என்ன காரணம் என்றும் விரிவாக கேட்டார். அதுவும் கொளத்தூர் தொகுதியில் சுமார் 1 லட்சம் வாக்குகள் பதிவாகாமல் போனதுதான் ஸ்டாலின் தரப்பை கொஞ்சம் ஜெர்க் அடிக்க வைத்ததாம்.
அமைச்சரவை பட்டியலை முன்வைத்து அக்கப்போர்
இதனிடையேதான் எப்படியும் திமுக வெல்லப் போகிறது; அமைச்சரவை பட்டியலையே தயாரித்துவிட்டார்கள்.. அவர் பெயர் இல்லை.. இவருக்கு வாய்ப்பு.. அவர்தான் சபாநாயகர்.. இல்லை இல்லை.. இந்த சீனியருக்கு இந்த முறை அமைச்சரவையில் கல்தா... அவரை சபாநாயகராக்கப் போகிறார்கள் என்கிற ஆரூடங்கள் அலைமோதுகின்றன.
மாலத்தீவு செல்ல யோசனை
இந்நிலையில் மு.க.ஸ்டாலினை 10 நாட்களைக்காவது வெளிநாடு ஒன்றில் ஓய்வு எடுக்க அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் ஆலோசனை கூறி இருக்கின்றன. இப்போதைக்கு லண்டன் சென்று திரும்ப முடியாது என்பதால் மாலத்தீவை தேர்வு செய்யலாம் என்றனராம். சுற்றுலா நாடாகிய மாலத்தீவில் கொரோனா கட்டுப்பாடுகளுடன் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
மே 2-க்காக ஏற்க தயங்கும் ஸ்டாலின்
அப்படியே மு.க.ஸ்டாலின் மாலத்தீவு சென்று திரும்பினால் நாடு திரும்பியதும் மேலும் 10 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டியது இருக்குமாம். அப்படி கணக்குப் போட்டால் மே 2-ந் தேதியன்று கூட தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டிய நிலை வரும். அது தேவையற்ற ஒன்று கருதுகிறதாம் ஸ்டாலின் தரப்பு. அதனால் மாலத்தீவு செல்லும் யோசனையை கூடுமானவரை தவிர்ப்பது என்பதில் கவனமாகவே இருக்கிறாராம் ஸ்டாலின்.