சபாநாயகரை புகழ்ந்த ஓபிஎஸ்.. அப்ப நீங்க கேள்வி கேட்க வரலயா? கலாய்த்த அப்பாவு! டென்ஷனுக்கு பிறகு கூல்!
சென்னை : தவாக தலைவர் வேல்முருகன், சட்டப்பேரவையில் சத்தம் போட்டு பேசியதைத் தொடர்ந்து அவரை சபாநாயகர் அப்பாவு எச்சரித்த நிலையில், பின்னர் பேசிய ஓ.பன்னீர்செல்வம் சபாநாயகரை புகழ்ந்தார். அதற்கு உடனடியாக நகைச்சுவையாக கமெண்ட் அடித்தார் சபாநாயகர் அப்பாவு.
சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின்போது துணைக் கேள்வி வாய்ப்பு வழங்கவில்லை என திமுக கூட்டணி கட்சியான தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ கோபமாகப் பேசினார். பேரவைத் தலைவரே இது நியாயமா? 3 நாட்களாக அவையில் துணைக்கேள்விக்கு வாய்ப்பு கேட்கிறேன். தர மறுக்கிறீர்கள் என சத்தம் போட்டார்.

அதற்கு பதில் அளித்து பேசிய சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு, இந்த கூட்டத்தொடரில் வேல்முருகனுக்கு 4 துணைக் கேள்விகளுக்கு அனுமதி அளித்திருக்கிறேன். முன்வரிசையில் உள்ளவர்களுக்கு பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. எதற்கெடுத்தாலும் தங்களுக்கு தான் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று எந்த மரபும் இல்லை. இங்கே ஒரு கேள்வி கூட கேட்காமல் பல உறுப்பினர்கள் இருக்கிறார்கள். எனவே உங்களுக்கு திரும்பத் திரும்ப வாய்ப்புகள் வழங்கப்படாத . உங்களைப் போல் 20 பேர் கேட்டிருக்கிறார்கள். இது போன்று அவையில் பேசக்கூடாது. சத்தம் போடக்கூடாது என எச்சரித்தார்.

அதைத் தொடர்ந்து, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எழுந்து தானும் பேச வேண்டும் என வாய்ப்பு கேட்க, சபாநாயகர் அப்பாவுக்கு அவருக்கு பேச வாய்ப்பு வழங்கினார். தொடர்ந்து பேசிய ஓபிஎஸ், "பேரவைத் தலைவர் அப்பாவு ஆசிரியராக இருந்தவர் எனத் தெரியும். அவர் சில நேரங்களில் கனிவானவராகவும், சில நேரங்களில் கண்டிப்பானவராகவும் இருந்து அவையை நடத்தி வருகிறார் எனத் தெரிவித்தார்.
இதைக் கேட்ட சபாநாயகர் அப்பாவு, அப்ப நீங்க துணைக் கேள்வி கேட்க வரலையா? என நகைச்சுவையாக கேட்டுவிட்டு சிரித்தார். இதனால், அவையில் சிரிப்பலை எழுந்தது. சற்று முன்னர் காட்டமாகப் பேசிய சபாநாயகர் அப்பாவு, உடனே தனது ஸ்டைலுக்கு திரும்பி ஓபிஎஸ்ஸை கலாய்த்தது உறுப்பினர்களால் ரசிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications