ஹைகோர்ட் உத்தரவு.. கடைசி நிமிடத்தில் அனுமதி.. ஒருவழியாக போலந்து பறந்த தடகள புயல் சமீகா பர்வீன்
சென்னை: சென்னை ஹைகோர்ட் உத்தரவிற்கு பின்பும் கடுமையாக அலைக்கழிக்கப்பட்ட தமிழகத்தை சேர்ந்த சமீகா பர்வீன் கடைசியாக ஒருவழியாக போலந்து செல்ல அனுமதி பெற்று இருக்கிறார். இந்திய விளையாட்டு கழகம் சார்பாக இவருக்கு போலந்து செல்வதற்கான அனுமதி அளிக்கப்பட்டுள்ளது .
செவிதிறன் மாற்றுத் திறனாளிகளுக்கான சர்வதேச தடகள விளையாட்டு போட்டி போலந்து நாட்டில் நடக்க உள்ளது. வரும் ஆகஸ்ட் 23ம் தேதி தொடங்கும் இந்த போட்டிகள் 28ம் தேதி வரை நடக்க உள்ளது. இதற்காக இந்திய வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் தேசிய அளவில் நடத்தப்பட்ட தகுதி சுற்றுகள் அடிப்படையிலும், அதில் எடுக்கப்பட்ட புள்ளிகள் அடிப்படையிலும் வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் கன்னியாகுமரியை சேர்ந்த சமீகா பர்வீன் தடகள ஓட்டப்பந்தய போட்டிகளில் கலந்து கொண்டு சிறப்பாக ஆடினார். இதனால் இந்தியாவில் இருந்து இவர் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. சமீகா பர்வீன் பல்வேறு தகுதி சுற்றுகளில் வெற்றிபெற்றார். ஆனால் அவரை இந்திய விளையாட்டு மேம்பாட்டு கழகம் புறக்கணித்தது.
இந்தியாவில் இருந்து வேறு வீராங்கனைகள் செல்லாத காரணத்தால் இவரை அனுப்பி முடியாது. இவருக்கு என்று கூடுதல் செலவு செய்ய முடியாது என்று இந்திய விளையாட்டு கழகம் தெரிவித்ததாக சமீகா பர்வீன் பெற்றோர் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் சமீகா பர்வீனை போலந்து அழைத்து செல்ல வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின் முடிவில் சமீகா பர்வீனை போலந்து அழைத்து செல்ல வேண்டும், அவரை இந்தியா சார்பாக கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று சென்னை ஹைகோர்ட் இந்திய விளையாட்டு கழகத்திற்கு உத்தரவிட்டது. நீண்ட சட்ட போராட்டத்திற்கு பின் அவருக்கு இந்த அனுமதி கிடைத்தது.
ஆனால் இந்த உத்தரவுக்கு பின்பும் சமீகா பர்வீனை போலந்து அழைத்து செல்ல ஏற்பாடும் செய்யப்படவில்லை. கடைசி நொடி வரை திக் திக் என்று சமீகா பதற்றத்தில் இருந்தார். நேற்று மாலை 7 மணிக்குள் ஆணையை கொடுத்து இருக்க வேண்டும். போலந்து அதிகாரிகளிடம் லிஸ்ட் கொடுக்க 7 மணி வரை மட்டுமே அவகாசம் இருந்தது. ஆனால், மாலை 6.40 வரை காக்க வைத்து அதன் பின்னரே இவரின் பெயர் லிஸ்டில் சேர்க்கபப்ட்டது. கடைசி 15 நிமிடத்தில் எல்லாம் முடிவு செய்யப்பட்டு அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
கடைசி நேரத்தில் சமீகா பர்வீன் ஒருவழியாக போலந்து செல்ல அனுமதி பெற்று இருக்கிறார். இந்திய விளையாட்டு கழகம் சார்பாக இவருக்கு போலந்து செல்வதற்கான அனுமதி கிடைத்துள்ளது. இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த சமீக பர்வீன் தாய் மற்றும் அவரது உறவினர் பேசியதாவது, சமீகா பர்வீன் போலந்து செல்வது மகிழ்ச்சி.
தமிழ்நாட்டிற்காக அவர் கண்டிப்பாக பதக்கம் வெல்வார். பெரிய போராட்டத்திற்கு பின் அவர் போலந்து செல்ல அனுமதி கிடைத்துள்ளது. சமீக பர்வீனுக்கு தமிழக அரசு உடனடியாக சிறப்பு பயிற்சியாளர் நியமனம் செய்ய வேண்டும். அவரின் பயண செலவை ஏற்க வேண்டும். கண்டிப்பாக தமிழ்நாட்டின் பெருமையை போலந்தில் சமீகா பர்வீன் நிலநட்டுவார் என்று அவரின் பெற்றோர் குறிப்பிட்டுள்ளனர்.