“பானிபூரி வாலா”.. பாயிண்டை பிடித்த அண்ணாமலை! வட இந்தியர்களை திமுக அமைச்சர் இழிவுபடுத்தியதாக புகார்
“தமிழ் மக்களான நாங்கள், “உலகம் ஒன்று” என்ற கருத்தை நம்புகிறோம். எங்கள் வட இந்திய நண்பர்களுக்கு எதிரான பிரிவினைவாதத்தையும் மோசமான வெறுப்பையும் அங்கீகரிக்கவில்லை.”
சென்னை: தமிழ்நாட்டில் வட இந்திய தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரவியது வருத்தமளிப்பதாகவும், பானிபூரி வாலா என்று திமுக அமைச்சர் வட இந்தியர்களை பற்றி விமர்சித்ததாகவும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்து இருக்கிறார்.
கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் வட இந்தியர்கள் தாக்கப்படுவதாகவும், இந்தி பேசியதற்காக கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டதாகவும் கூறி பீகாரில் போலியான வீடியோக்கள் பகிரப்பட்டு வருகிறது.
பீகார் பாஜக ட்விட்டர் பக்கத்திலும் பகிரப்பட்ட இந்த செய்தி வட இந்தியாவின் பிற மாநிலங்களிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. இதனை வட இந்திய ஊடகங்கள் செய்தியாக வெளியிட்ட நிலையில் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு ஆதாரங்களுடன் மறுப்பு தெரிவித்தார்.

டிஜிபி சைலேந்திர பாபு மறுப்பு
இதனை பீகார் ஊடகங்கள், ஆங்கில மற்றும் இந்தி ஊடகங்கள் செய்தியாக வெளியிட்ட நிலையில் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு அந்த செய்திக்கு ஆதாரங்களுடன் மறுப்பு தெரிவித்தார். இந்த விவகாரம் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பீகார் மாநில துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் வதந்திகளை பரப்புவதே பாஜகவின் வேலை என்று இதுகுறித்து கருத்து தெரிவித்து இருந்தார்.

காவல்துறை விளக்கம்
இதுகுறித்து தமிழ்நாடு காவல்துறையை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "புலம்பெயர்ந்த வட மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக உண்மைக்கு புறம்பான பொய்யான தகவல் இணையதளத்திலும், சமூக ஊடகங்களிலும் விஷமிகள் சிலரால் பரப்பப்பட்டுள்ளது. அப்படி பொய் செய்தி பரப்பியவர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.

மூவர் மீது வழக்குப்பதிவு
இது தொடர்பாக திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 153(A), 505(i)(b) கீழ் தெய்னிக் பாஸ்கர் பத்திரிக்கையின் ஆசிரியர் மீது ஒரு வழக்கும், திருப்பூர் மாவட்டம் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்ட பிரிவுகள் 153(B), 505(ii(b) மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டபிரிவு 56(D) கீழ் தன்வீர் போஸ்ட் என்ற பத்திரிகையின் உரிமையாளர் முகமது தன்வீர் என்பவர் மீது ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாஜக நிர்வாகி மீது வழக்கு
அதேபோல, தூத்துக்குடி மாவட்டம் சென்ட்ரல் காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 153, 153(A), 504, 505(1)(b), 505(1)(c), 505(2) கீழ் பிரசாந்த் உமராவ் என்பவர் மீது ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள இவர்களை கைது செய்ய தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் அவர்களின் உத்தரவின் பெயரில் தனி குழு அமைக்கப்பட்டுள்ளது.

கடும் நடவடிக்கை
தமிழ்நாட்டில் வாழும் புலம்பெயர்ந்த வட மாநில தொழிலாளர்கள் எவ்வித அச்சமும் இன்றி முழு பாதுகாப்புடன் அமைதியாக வசித்து வருகிறார்கள். அமைதியை சீர்குலைத்து பதட்டத்தை ஏற்படுத்தும் வகையில் பொய் செய்திகளை பரப்புவோர் பற்றிய விவரங்கள் காவல்துறையினரால் சேகரிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்கும் என்பது இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

அண்ணாமலை கருத்து
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு உள்ள தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, "புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீதான தாக்குதல்கள் தமிழ்நாட்டில் நடைபெறுவதாக சமூக ஊடகங்களில் போலி செய்திகள் பரவி வருவதை பார்க்கையில் வருத்தம் அளிக்கிறது. தமிழ் மக்களான நாங்கள், "உலகம் ஒன்று" என்ற கருத்தை நம்புகிறோம். எங்கள் வட இந்திய நண்பர்களுக்கு எதிரான பிரிவினைவாதத்தையும் மோசமான வெறுப்பையும் அங்கீகரிக்கவில்லை.

அமைப்புகள் விளக்கம்
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் அமைப்பின் ஒருங்கிணைந்த பகுதி எனவும், அவர்களின் நலனை உறுதி செய்வதற்காக தாங்கள் எடுத்த நடவடிக்கைகள் பற்றி விளக்கும் வகையில் ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் மற்றும் தென்னிந்திய மில்ஸ் அசோசியேஷன் ஆகிய அமைப்புகள் ஏற்கனவே ஒரு அறிக்கையை வெளியிட்டு உள்ளன.

பானிபூரி வாலா
தமிழ்நாட்டில் உள்கட்டமைப்பு மேம்பாடு, உற்பத்தி மற்றும் சேவைத் துறையில் எங்கள் புலம்பெயர்ந்த சகோதரர்கள் மற்றும் சகோதரிகளின் பங்களிப்பை தமிழ்நாடு பொது மக்கள் ஏற்றுக்கொள்ளவும் வரவேற்கவும் செய்கிறார்கள். ஆனால், வட இந்தியர்கள் பற்றி திமுக எம்பி மோசமான கருத்துக்களை தெரிவித்து உள்ளார். திமுக அமைச்சர் வட இந்தியர்களை பானிபூரி வாலா என்று அழைக்கிறார்.

திமுகவின் பொறுப்பு
திமுக மற்றும் அவர்களின் கூட்டணி கட்சிகளின் கருத்துக்களை மக்களும் அரசும் காவல்துறையும் அங்கீகரிக்கவில்லை. திமுக எப்போதுமே பிளவுபடுத்தவும் அவர்களை பற்றி விமர்சிக்கவும் செய்கிறது. இப்போது இந்த சூழ்நிலையை சரிசெய்வது அவர்களின் பொறுப்பு. மேலும் செயலிழந்த அவர்கள் பிரச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான வாய்ப்பு இது." என்று கூறி உள்ளார்.












Click it and Unblock the Notifications